ரஷியா கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் திடீரென உக்ரைன் மீது போர் தொடுத்தது. அதில் இருந்து சுமார் மூன்று வருடங்களாக இரு நாடுகளுக்கும் இடையில் சண்டை நடைபெற்று வருகிறது.

போர் தொடங்கியபோது ரஷியா, உக்ரைனின் கிழக்குப் பகுதியில் உள்ள பல இடங்களை கைப்பற்றியது. பின்னர் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உதவியுடன் உக்ரைன் ரஷியாவுக்கு எதிராக வலுவாக சண்டையிட ரஷிய பல இடங்களில் பின்வாங்க தொடங்கியது.

தற்போது இரு நாடுகளும் டிரோன் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள், மின்சார உற்பத்தி நிலையங்கள் போன்றவற்றை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன.

கடந்த மாதம் ரஷியாவில் உள்ள எண்ணெய் கிடங்குகள், ராணுவ ஆயுத கிடங்குகள் மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியது. இதில் ரஷியாவுக்கு மிகப்பெரிய அளவில் இழப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் இன்று காலை கீவ் பிராந்தியத்தில் உள்ள செர்னோவில் அணுமின் நிலையம் மீது ரஷியா டிரோன் தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.செர்னோபில் அணுமின் நிலையத்தில் உள்ள 4-வது உலையில் இருந்து கதிரியக்கம் வெளியேறாமல் இருக்க கான்கிரீட் கூரை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கூரை டிரோன் தாக்குதலுக்கு உள்ளாகி, தீப்பற்றி எரிந்துள்ளது. நல்லவேளையாக, அணு உலையில் இருந்து கதிர்வீச்சு வெளியேறவில்லை. வழக்கமான நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

1986-ம் ஆண்டு இந்த அணுமின் நிலையத்தில் விபத்து ஏற்பட்டது. உலகில் உள்ள அணுமின் நிலையங்களில் ஏற்பட்ட மோசமான விபத்துகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது. இந்த விபத்து காரணமாக கதிர்வீச்சு வெளியேறாத வகையில் 4-வது அணு உலைக்கு மேல் பாதுகாப்பிற்கு கான்கிரீட் கூரை அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு அணுஉலையில் எஞ்சியிருக்கும் கதிரியக்கம் வெளியேறாத வகையில் இந்த கூரை அமைக்கப்பட்டுள்ளது.உக்ரைன்- ரஷியா இடையிலான 3 வருட சண்டையில் உக்ரைனில் உள்ள நான்கு அணுமின் நிலையங்களுக்கு ஆபத்து உள்ளதாக எச்சரிக்க விடுக்கப்பட்ட்டள்ளது.

இதில் தெற்கு உக்ரைனில் ரஷியா கட்டுப்பாட்டில் உள்ள ஜபோரிஸ்சியா அணுமின் நிலையம் ஐரோப்பியாவில் உள்ள மிகப்பெரிய அணுமின் நிலையமாகும். மேலும், உலகில் உள்ள மிகப்பெரிய 10 அணுஉலைகளில் ஒன்றாகும்.

Share.
Leave A Reply