தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை குறித்து ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க மனிதாபிமான அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என போராளிகள் நலன்புரிச்சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
தமிழ் அரசியல் கைதிகள் விடுதலையை வலியுறுத்தி பேராளிகள் நலன்புரிச்சங்கம் சேகரித்த 18000 கையெழுத்துக்களுடனான மகஜர் இன்று ஜனாதிபதி செயலகத்தில் கையளிக்கப்பட்டுள்ளது.
அந்த மகஜரில் போராளிகள் நலன்புரிச்சங்கம் மேலும் தெரிவித்துள்ளதாவது.
எங்களின் துயரத்தின் அளவு குறித்து உங்களிற்கு தெரிவிக்கவேண்டியதில்லை என நாங்கள் கருதுகின்றோம்.
இந்த நாடு ஆட்சி செய்யப்படும் முறையை மாற்றுவதற்காக- இரண்டு தடவைகள் ஆயுதபோராட்டத்தில் ஈடுபட்டு ஆயிரக்கணக்கான தோழர்களை இழந்த புரட்சிகர அரசியல் பாரம்பரியத்தினால் வளர்க்கப்பட்டவர் நீங்கள்.
இதன் காரணமாக மிகவும் கொடுமையான மோசமான பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் ஒடுக்கப்படும் துயரமான வரலாற்று அனுபவம் உங்களுக்குள்ளது.
இலங்கை தமிழ் சமூகத்தினராகிய நாங்கள் வன்முறை கலாச்சாரம்,ஆயுதமோதல்கள் மீது விருப்பு கொண்டவர்கள் இல்லை.
பேராசை அரசியல் கொள்கை மற்றும் ஆட்சியாளர்களால் நாங்கள் அவ்வாறான மோதல்களில் ஈடுபட நிர்பந்திக்கப்பட்டோம்,எங்கள் இளம் தலைமுறையினர் அரசியல் கொள்கைகளிற்காக போராடினார்கள் சொத்து சேர்ப்பது ,ஏனைய சமூகங்களை அடிபணியச்செய்வது போன்ற பேராசை நோக்கங்களிற்காக அவர்கள் போராடவில்லை.
நாங்கள் எங்கள் மன்றாட்டத்தினை பெரும் நம்பிக்கையுடன் சமர்ப்பிக்கின்றோம்.
தமிழ் அரசியல் கைதிகளையும் தடுத்துவைக்கப்பட்டுள்ள ஏனைய பாதிக்கப்பட்டவர்களையும் மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்வதற்கான உங்கள் நடவடிக்கையை எதிர்பார்க்கின்றோம்.
உங்களுடைய தீர்மானம் தங்கள் நேசத்திற்குரியவர்களுடன் சேர்வதற்காக பல வருடங்களாக காத்திருக்கும் பெற்றோர்கள் குடும்பத்தவர்களின் கண்ணீரை நிறுத்தும்.