வடக்கு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 10 இந்திய மீனவர்கள் நேற்று புதன்கிழமை (19) இரவு கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மன்னார் மற்றும் நெடுந்தீவு கடற்பரப்பினுள் 03 படகுகளில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டிருந்த வேளை கடல் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர், அவர்களை கைது செய்துள்ளதுடன், மூன்று படகுகளையும் கைப்பற்றியுள்ளனர்.

மன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 04 மீனவர்களையும், அவர்களின் ஒரு படகினையும் தலைமன்னார் துறைமுகத்திற்கு கொண்டு சென்ற கடற்படையினர், அவர்களை மன்னார் கடற்தொழில் நீரியல் வளத்துறையினர் ஊடாக மன்னர் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அதேவேளை, நெடுந்தீவு கடற்பரப்பில் 2 படகுகளுடன் கைது செய்யப்பட்ட 06 மீனவர்களையும், காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டு சென்ற கடற்படையினர், அவர்களை யாழ்ப்பாண நீரியல் வளத்துறையினர் ஊடாக ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளனர்.

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட குற்றத்தில் கடந்த 50 நாட்களில் 99 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 13 படகுகளையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply