தெலுங்கானா மாநிலம், நாகர்கர்னூல் மாவட்டத்திலுள்ள ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் (SLBC) சுரங்கப்பாதையில், இன்று காலையில் ஒரு பகுதி இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
SLBC சுரங்கப்பாதையில் இன்று காலை தொழிலாளர்கள் தங்கள் பணிகளைச் செய்துகொண்டிருந்தபோது அதன் ஒருபகுதி இடிந்து விழுந்தது. குறிப்பாக, சுரங்கப்பாதையின் 14-வது கிலோ மீட்டரில் மேற்பரப்பில் 3 மீட்டர் தூரத்துக்கு இடிந்து விழுந்தது.” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்தச் சம்பவத்தின்போது சுரங்கப்பாதையினுள் வேலையில் ஈடுபட்டிருந்தவர்களில் 8 பேர் தற்போது உள்ளே சிக்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. அவர்களில், நான்கு பேர் ஜார்கண்ட், இரண்டு பேர் உத்தரப்பிரதேசம், ஒருவர் ஜம்மு காஷ்மீர், ஒருவர் பஞ்சாப் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.
மேலும், சிக்கிக்கொண்ட இந்த 8 பேரில், இரண்டு பேர் தி ராபின்ஸ எனும் அமெரிக்க சுரங்க நிறுவனத்தைச் சேர்ந்த இந்திய பொறியாளர்கள். இந்த நிலையில், கடந்த ஆண்டு உத்தரககாண்ட்டில் சுரங்கப்பாதையில் விபத்து ஏற்பட்டபோது அதில் சிக்கிக்கொண்ட தொழிலாளர்களை மீட்ட குழுவினர் மற்றும் நிபுணர்களை தெலங்கானா அரசு அணுகிவருகிறது.
ஒருபக்கம், முதல்வர் ரேவந் ரெட்டியின் உத்தரவின்படி தீயணைப்புப் படையினர் உள்ளிட்டோர் சுரங்கப்பாதையில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இதுபற்றி அறிந்ததும் சிறப்பு ஹெலிகாப்டரில் உடனடியாக சம்பவம் இடத்துக்கு வந்த மாநில நீர்ப்பாசனத்துறை அமைச்சர் உத்தம் குமார் ரெட்டி, உள்ளே சிக்கியிருப்பவர்கள் உயிருடன் இருக்கிறார்கள் என்று நம்புவதாகத் தெரிவித்தார்.
அதோடு, “இந்தச் சுரங்கப்பாதை 44 கி.மீ நீளம் கொண்டது. இரண்டு பக்கங்களிலிருந்தும் இயந்திரங்கள் மூலம் துளையிடும் பணிகள் நடைபெறுகின்றன. ஒருபக்கம் 20 கி.மீட்டரும், மறுபக்கம் 14 கி.மீட்டரும் தோண்டப்பட்டிருக்கிறது. இதற்கிடைப்பட்ட 9.5 கி.மீட்டரில் நீர்க்கசிவு காரணமாக அந்த நீரை வெளியேற்றும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.” என்று அமைச்சர் கூறினார்.
மேலும், உள்ளே சிக்கியிருப்பவர்கள் பற்றி மாவட்ட ஆட்சியர் பி சந்தோஷ் கூறுகையில், சிக்கியவர்களுடன் எந்த தொடர்பும் இல்லையென்றும், உள்தொடர்பு பொறிமுறை தோல்வியடைந்துவிட்டதாகவும் தெரிவித்தார்.