கடற்படையினர் நாட்டின் வடக்கே மன்னார் கடற்பரப்பில் நேற்று சனிக்கிழமை (22) மற்றும் இன்று ஞாயிற்றுக்கிழமை (23) அதிகாலை மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, இந்நாட்டு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட ஐந்து இந்திய மீன்பிடி படகுகளுடன் முப்பத்திரண்டு இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாட்டின் கடற்பரப்பை மீறி வெளிநாட்டு மீன்பிடி கப்பல்கள் மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை தடுக்கவும், இந்நாட்டு மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் கடற்படை வழக்கமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி முன்னெடுக்கப்பட்ட சுற்றி வளைப்பின் போது கைப்பற்றப்பட்ட குறித்த இந்திய மீனவர்கள் தலைமன்னார் துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டதுடன், மேலதிக விசாரணைகளுக்காக மன்னார் கடற்றொழில் பரிசோதகர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.

இந்த நடவடிக்கையின் மூலம், இந்நாட்டு கடற்பரப்பிற்குள் நுழைந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட பதினெட்டு (18) இந்திய மீன்பிடி படகுகள் மற்றும் நூற்று முப்பத்தொரு (131) இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply