முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இராண்டு பதவி காலத்தில் 33 நாடுகளுக்கு சென்றுள்ளார். இப்பயணங்களில் 154 பேர் பங்குபற்றியுள்ளனர். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேற்கொண்ட 3 வெளிநாட்டு பயணங்களில் 11 பேர் மாத்திரமே பங்குபற்றியுள்ளனர். இதற்கு 1.8 மில்லியன் ரூபாய் மாத்திரமே செலவிடப்பட்டுள்ளது. பதவிக்கான சிறப்பு சலுகையின் சுமையை மக்கள் மீது நாங்கள் சுமத்தவில்லை இதுவே அரசியல் கலாச்சாரத்தின் ஆரம்ப மாற்றமாகும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (27) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் ஜனாதிபதி செலவின தலைப்பு மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

அரசாங்கத்தின் கன்னி வரவு செலவுத் திட்டத்தில் பல விடயங்களை முன்வைத்துள்ளோம். இருப்பினும் எதிர்க்கட்சியினர் நாங்கள் ஐந்தாண்டு பதவி காலத்தை நிறைவு செய்ததைப் போன்று பேசுகிறார்கள். ஆரம்ப காலத்துக்கான முக்கிய தீர்மானங்களை மாத்திரமே தற்போது எடுத்துள்ளோம்.

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் குறித்து பல்வேறு கருத்துக்களை எதிர்தரப்பினர் குறிப்பிடுகிறார்கள். எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளோம். சகல மக்களின் பங்குப்பற்றலுடன் தான் புதிய யாப்பு உருவாக்கப்பட வேண்டும். அதற்கான பணிகளை உரிய காலத்தில் முன்னெடுப்போம். மக்களின் பங்குற்றலுக்கு அப்பாற்பட்ட வகையில் யாப்புருவாக்கத்துக்கான பணிகளை தொடர்வது கடினமாகும்.

அரசாங்கம் என்ற அடிப்படையில் மக்களுக்கு சுமையாக நாங்கள் செயற்படவில்லை. அதுவே சிறந்த அரசியல் மாற்றத்துக்கான முதல் அங்கமாகும். கடந்த காலங்களில் அரசாங்கங்கள் மக்களுக்கு சுமையாகவே செயற்பட்டுள்ளன. அந்த சுமையை குறைக்க வேண்டியது அத்தியாவசியமானது. இதனைக் கருத்திற்கொண்டே அரச கட்டமைப்பின் அனைத்து செலவுகளும் இயலுமான வகையில் குறைக்கப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டெழும் நிலையில் தான் நாடு இன்றும் உள்ளது. பொருளாதார நெருக்கடியின் விளைவுகளை நாட்டு மக்கள் எதிர்க்கொண்டார்கள், இன்றும் எதிர்க்கொள்கிறார்கள். ஆகவே அரசாங்கத்தின் சுமையை மக்கள் மீது சுமத்த முடியாது. ஆகவே ஏதேனும் வழியில் இதனை முகாமைத்துவம் செய்ய வேண்டும். மக்களின் வரிப்பணத்தில் தான் எமது இருப்பு காணப்படுகிறது. ஆகவே இது மிகவும் பாரதூரமான பொறுப்பாகும்.

பதவிக்கான சிறப்புரிமைகள் மற்றும் அதற்கான செலவுகள் குறித்து விசேட கவனம் செலுத்தியுள்ளோம். பதவிக்கான சிறப்புரிமைகளை சுய விருப்பத்துடன் குறைத்துக் கொண்டுள்ளோம்.ஜனாதிபதியின் வெளிநாட்டு விஜயம் குறித்து சில விடயங்களை குறிப்பிட வேண்டும். ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள் மற்றும் அரசாங்கத்தின் இதர பிரதிநிதிகள் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ள வேண்டும்.இதனை நாங்கள் புறக்கணிக்கவில்லை.

இருப்பினும் இலங்கையின் அரசியல் கலாச்சாரத்தில் கடந்த காலங்களில் அரசமுறை பயணங்கள் முறைகேடாக காணப்பட்டுள்ளது.

2010 -2014 வரையான காலப்பகுதியில் மஹிந்த ராஜபக்ஷவின் வெளிநாட்டு பயணங்களுக்காக 3,572 மில்லியன் ரூபா.

2015-2019 வரையான காலப்பகுதியில் மைத்திரிபால சிறிசேனவின் வெளிநாட்டு பயணங்களுக்காக 384 மில்லியன் ரூபாய்.

2020-2022 வரையான காலப்பகுதியில் கோட்டபய ராஜபக்ஷவின் வெளிநாட்டு பயணங்களுக்காக 126 மில்லியன் ரூபாய்.

2023-2024 வரையான காலப்பகுதியில் ரணில் விக்கிரமசிங்கவின் வெளிநாட்டு பயணங்களுக்காக 533 மில்லியன் ரூபாய.

என்ற அடிப்படையில் நிதி செலவிடப்பட்டுள்ளது.

2024.09.21 முதல் 2025 பெப்ரவரி மாதம் வரையான காலப்பகுதியில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் வெளிநாட்டு பயணங்களுக்காக 1.8 மில்லியன் ரூபாய் மாத்திரமே செலவிடப்பட்டுள்ளது. நாங்களும் சேவையாற்றியுள்ளோம், இந்த நாட்டு மக்களை சர்வதேச மட்டத்தில் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளோம்.இருப்பினும் மக்களுக்கு சுமையாக இருக்காமல், செலவுகளை இயலுமான வகையில் குறைத்துக் கொண்டுள்ளோம்.

2023 -2024 வரையான காலப்பகுதியில் அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 33 வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டுள்ளார்.இந்த 33 பயணங்களிலும் மொத்தமாக 154 பேர் பங்குப்பற்றியுள்ளனர். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதுவரையில் 3 வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டுள்ளார். அவற்றில் 11 பேர் மாத்திரமே பங்குபற்றியுள்ளனர்.

ஜனாதிபதி வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ள வேண்டும். உரிய நபர்கள் நாட்டை பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்பதற்கு எவ்வித மாற்றுக்கருத்தும் கிடையாது.இருப்பினும் கடந்த காலங்களில் உரிய தரப்பினர்களா சென்றுள்ளார்களா என்பது கேள்விக்குள்ளாகியுள்ளது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளிநாடு சென்றபோது அவருடன் எதிர்க்கட்சியின் உறுப்பினர்களும் சென்றார்கள்.இதுவும் அரசியல் இலஞ்சமாகும்.பதவிகளுக்காக வழங்கப்பட்டுள்ள சிறப்புரிமைகள் முறைகேடான வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த கலாச்சாரத்தை நாங்கள் மாற்றியமைத்துள்ளோம் என்றார்.

Share.
Leave A Reply