சிரியாவின் முன்னாள் ஜனாதிபதி பசார் அசாத்தின் ஆட்சிக்காலத்தில் விமானநிலைய சிறைச்சாலையில் ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்டனர் என வியாழக்கிழமை வெளியாகியுள்ள அறிக்கையொன்று தெரிவித்துள்ளது.

சிரிய தலைநகர் டமஸ்கஸில் உள்ள இராணுவவிமானநிலையத்தின் சிறைச்சாலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிரிய மக்கள் கொல்லப்பட்டனர் ,என தெரிவித்துள்ள புதிய அறிக்கை இந்த சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்தவர்கள் சித்திரவதை செய்யப்பட்டனர் அவர்களிற்கு போதிய உணவு வழங்கப்படவில்லை பின்னர் அவர்கள் கொல்லப்பட்டனர் என தெரிவித்துள்ளது.

சிரியா நீதி மற்றும் பொறுப்புக்கூறலிற்கான அமைப்பு இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

ஏழு மனித புதைகுழிகளை ஆதாரமாக வைத்து இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

நேரில் பார்த்தவர்களின் வாக்குமூலங்கள் ,செய்மதி புகைப்படங்கள், ஜனாதிபதி அசாத் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட பின்னர் டமஸ்கஸின் புறநகர் பகுதியான மெசேவில் உள்ள இராணுவவிமானதளத்தில் மீட்கப்பட்ட படங்கள் போன்றவற்றை அடிப்படையாக வைத்து மனித புதைகுழிகளை அடையாளம் கண்டதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

சில மனித புதைகுழிகள் விமானநிலையத்திற்குள் உள்ளன ஏனைய மனித புதைகுழிகள் தலைநகரின் புறநகர்பகுதிகளில் உள்ளன என சிரியா நீதி மற்றும் பொறுப்புக்கூறலிற்கான அமைப்பு தெரிவித்துள்ளது.

விமானநிலையத்திலும் மயானமொன்றிலும் உள்ள இரண்டு இடங்களில் நீண்ட புதைகுழிகள் வெட்டப்பட்டமைக்கான அடையாளங்கள் காணப்படுகின்றன இவை நேரில் பார்த்தவர்களின் வாக்குமூலங்களுடன் பொருந்துகின்றன என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த அறிக்கையை எழுதியவர்களில் ஒருவரான ஷாடி கரோன் தானும் இங்கு தடுத்துவைக்கப்பட்டிருந்ததாக தெரிவித்துள்ளார், ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்தமைக்காக 2011 முதல் 12வரை பல மாதங்கள் இந்தசிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாளாந்தம் விசாரணை செய்தார்கள் உடல் உளசித்திரவதைகளில் ஈடுபட்டார்கள் ஆதாரமற்ற வாக்குமூலங்களை பெறுவதற்காகவே இவ்வாறு செய்தார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மரணம் பல வழிகளில் வந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share.
Leave A Reply