அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோபைடன் காலத்தில் அமெரிக்காவிற்கு சென்ற ஆயிரக்கணக்கான உக்ரைனியர்களிற்கு வழங்கப்பட்ட விசாக்களை இரத்துச்செய்வது குறித்து ஆராய்ந்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்தெரிவித்துள்ளார்.
ஆனால் அவர்களை காயப்படுத்த விரும்பவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
உக்ரைனியர்களிற்கு வழங்கப்பட்ட விசாக்களை இரத்து செய்வதுகுறித்து ஆராயப்படுகின்றதா என ரொய்ட்டர் செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ள டிரம்ப் இது குறித்து நான் ஆராய்கின்றேன்,நாங்கள் யாரையும் காயப்படுத்த விரும்பவில்லை நிச்சயமாக அவர்களை காயப்படுத்த விரும்பவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைனை சேர்ந்தவர்களிற்கு விசா வழங்கியது குறித்து இரு வேறுபட்டகருத்துக்கள் உள்ளன நான் விரைவில் இது குறித்து முடிவெடுப்பேன் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
முன்னதாக உக்ரைனை சேர்ந்தவர்களிற்கு வழங்கப்பட்ட விசாக்களை இரத்து செய்யும் நடவடிக்கைகளை அடுத்தமாதம் நடைமுறைப்படுத்தவுள்ளதாக வெளியான தகவல்கள் தவறானவை இது குறித்து எந்த தீர்மானத்தையும் எடுக்கவில்லை என வெள்ளை மாளிகையின் ஊடக பேச்சாளர் தெரிவித்திருந்தார்.
ஜோபைடனின் ஆட்சிக்காலத்தில் தற்காலிக பாதுகாப்பு அந்தஸ்த்து மற்றும் உக்ரைனிற்காக ஒன்றிணைதல் திட்டங்களின் கீழ் 200,000க்கும் அதிகமான உக்ரைனியர்களிற்கு அமெரிக்கா செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டமைகுறிப்பிடத்தக்கது.
எனினும் ஜனாதிபதியாக பதவியேற்றதும் உக்ரைனிற்காக ஐக்கியப்படும் திட்டத்தை டிரம்ப் இடைநிறுத்தியிருந்தார்.
இதேவேளை ஜோபைடன் பதவியிலிருந்து வெளியேறுவதற்கு பத்து நாட்களிற்கு முன்னர் தற்காலிக பாதுகாப்பு அந்தஸ்த்து விசாக்களை 2026வரை நீடித்திருந்தார். டிரம்பின் நடவடிக்கைகளை முறியடிக்கவே முன்கூட்டியே ஜோபைடன் இந்த நடவடிக்கையை எடுத்தார்.