யாழ்ப்பாணம், பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் வறியவர்களுக்கு உதவி செய்வதாக புலம்பெயர் தமிழர்களிடம் நிதியினை பெற்று, அதன் ஊடாக உதவி செய்வது போன்ற காணொளிகளை தனது யூடியூப் தளத்தில் பதிவேற்றி வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வரும் பாடசாலை மாணவியொருவரிடம் இரவு வேளை சென்ற குறித்த நபர், பாடசாலை மாணவியை காணொளி எடுக்க முற்பட்டுள்ளார். அதற்கு மாணவி மறுப்பு தெரிவிக்கவே, காணொளியில் நாகரிகமற்ற வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளார்.
குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து பல்வேறு தரப்பினரும், தமது கண்டனங்களை தெரிவித்து இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இவ்வாறு உதவி செய்பவர்களின் நிதி கையாடுகைகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என கோரி வருகின்றனர்.
இந்நிலையில், மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகம், சிறுவர் நன்னடத்தை பிரிவினர் உள்ளிட்ட தரப்பினர்கள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை, நாடாளுமன்றில் சனிக்கிழமை (08) பாராளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதனும் குறித்த சம்பவத்திற்கு சபையில் கண்டனம் தெரிவித்து இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சர்ச்சையான காணொளியில் உள்ள குடும்பத்தின் வீட்டுக்கு ஞாயிற்றுகிழமை(9)அன்று குறித்த YouTuber வந்திருந்த நேரம் ஊரவர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு இளவாலை பொலிஸ்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட நிலையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.