தெற்கில் மாத்திரமல்ல வடக்கிலும் அரசாங்கம் செயற்பட்ட விதம் குறித்து விசாரணை செய்வதற்கு நம்பகதன்மை மிக்க ஆணைக்குழுவை உருவாக்குவது சிறந்ததாக அமையும்
மூன்று தசாப்த காலத்திற்கு முன்னர் 1988-89 ஆண்டு காலப்பகுதியில் அரசாங்கம் சட்டவிரோதமாக தடுத்துவைத்தல்,சித்திரவதை சட்டவிரோத படுகொலைகளில் ஈடுபட்டது என தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து இலங்கை நாடாளுமன்றம் விவாதிக்கவுள்ளது.
வெள்ளிக்கிழமை 14- 3- 2025 ம்திகதி நாடாளுமன்றத்தில் பட்டலந்த விசாரணை அறிக்கையை சமர்ப்பித்த அமைச்சர் பிமல்ரத்நாயக்க அரசாங்கம் இது குறித்து சட்டமா அதிபரின் ஆலோசனையை பெறும் என்றார்.
டோஹாவை தலைமையகமாக கொண்ட அல்ஜசீரா ரணில் விக்கிரமசிங்கவை பேட்டி கண்டதன் பின்னரே இந்த விடயம் குறித்து கவனம் திரும்பியது.இந்த பேட்டியின் போது முன்னாள் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவிடம் சித்திரவதை குற்றச்சாட்டுகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.அக்காலப்பகுதியில் ரணசிங்க பிரேமதாச அரசாங்கத்தில் அமைச்சராக பதவி வகித்த ரணில்விக்கிரமசிங்க சித்திரவதை முகாம் இயங்குவதற்கு உதவினார் என குற்றம்சாட்டுகள் வெளியாகியுள்ளன.எனினும் அவர் இந்த குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளார்.
ஆளும் தேசிய மக்கள் சக்தியின் முக்கிய அங்கமான ஜேவிபி 1980களின் பிற்பகுதியில் தனது இரண்டாவது கிளர்ச்சியை முன்னெடுத்த காலத்தை அடிப்படையாக கொண்டதே இந்த அறிக்கை.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க நியமித்த ஆணைக்குழு 1998 இல் வெளியிட்ட அறிக்கை, ஜேவிபியுடன் தொடர்புவைத்திருந்தவர்களை இலக்குவைத்து அரசாங்க தரப்பினர் சித்திரவதைகளில் ஈடுபட்டனர் என்ற பாரதூரமான குற்றச்சாட்டு குறித்து விசாரணை செய்தது.
ஜேவிபின் இளைஞர்கள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் கொள்கைகளை எதிர்த்ததால் , இரண்டாவது தடவையாக அரசாங்கத்திற்கு எதிராக அதன் உறுப்பினர்கள் அவர்களின் ஆதரவாளர்களிற்கு ஆயுதங்களை ஏந்தினார்கள்.
அந்தகாலத்தைய பல தரப்புகளின் தகவல்களின் படி அரசாங்கம் ஈவிரக்கமற்ற விதத்தில் பதில் நடவடிக்கையில் ஈடுபட்டது.
பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை,அரசாங்கத்தின் ஆதரவுடன் இயங்கிய நாசகார நடவடிக்கைகள் எதிர்ப்பு பிரிவு அல்லது பட்டலந்த தடுப்புமுகாம் பற்றியது.இந்த முகாமை கிளர்ச்சியை ஒடுக்குவதற்கான நடவடிக்கையின் ஒருபகுதியாக அரசாங்கமே கொழும்பின் அருகில் உள்ள கம்பஹாவில் இயக்கியது.
ஜேவிபியின் பயங்கரவாத நடவடிக்கைகள் குறித்தும் குறிப்பிடும் இந்த அறிக்கை, ஜேவிபியின் பயங்கரவாதத்தை அரசபயங்கரவாதம் எதிர்கொண்டது என தெரிவித்துள்ளது.
அரசாங்க செயற்பாட்டாளர்களிற்கு தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படுதலே இலங்கையில் நீதி சாத்தியமாகாதமைக்கான காரணம் என தெரிவித்து வந்துள்ள இலங்கையின் மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியில் இந்த அறிக்கை புதிய ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையின் உள்நாட்டு போரின்போது மிகமோசமான மனித உரிமை மீறல்களிற்குள்ளான தமிழ் சமூகத்திற்கான நீதி குறித்து
பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கையை சமர்ப்பிப்பது அல்லது விவாதிப்பதன் முக்கியத்துவம் அரசியல் ஒலி அல்லது சீற்றத்தில் இல்லை அறிக்கையின் கண்டுபிடிப்புகளின் மீதான சாத்தியமான நடவடிக்கையில் உள்ளது என அரசியலமைப்பு சட்டத்தரணி கிஷாலி பின்டோ ஜெயவர்த்தன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற விவாதத்தை அரசாங்கம் தனது அரசியல் இலாபத்திற்காக பயன்படுத்துமா என கேள்விஎழுப்பியுள்ள அவர் அரசாங்கம் அவ்வாறு செய்தால் அது விசாரணை அறிக்கைகளை அரசியல்மயமாக்கும் இலங்கையின் கலாச்சாரத்தை தொடரும் ஒரு நடவடிக்கையாகவே அமையும் என தெரிவித்துள்ளார்.
நாங்கள் ஜேவிபி பயங்கரவாதம் அரசபயங்கரவாதம் குறித்து பேசப்போகின்றோம் என்றால் 1980களில் இடம்பெற்ற அரச மற்றும் அரச எதிர்பயங்கரவாதம் குறித்த ஏனைய ஆணைக்குழுக்களின் அறிக்கைகள்குறித்தும் இந்த விவாதம் கவனம் செலுத்தவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
குற்றவியல் நீதி அமைப்பை முறையாக நடைமுறைப்படுத்துவதில் முறையான பொறுப்புக்கூறலை உறுதி செய்வதில் கவனம் செலுத்தப்படவேண்டும் என தெரிவித்துள்ள அவர் இந்த முயற்சியை அரசாங்கத்தை எதிர்க்கும் ஒரு அரசியல்வாதி அல்லது ஒரு ஆணைக்குழுவின் அறிக்கையுடன் மட்டுப்படுத்தகூடாது என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ரணில்விக்கிரசிங்கவின் சமீபத்தைய பேட்டி இல்லாவிட்டால் அரசாங்கம் இந்த அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திராது என தெரிவித்துள்ள கொழும்பு பல்கலைகழகத்தின் வரலாற்று பேராசிரியர் நிர்மல் ரஞ்சித் தேவசிறி இந்த அறிக்கை குறித்து விவாதங்கள் உட்பட கவனத்தை ஏற்படுத்து அவசியமானது என கருதுவதாக தெரிவித்துள்ளார்.
தெற்கில் மாத்திரமல்ல வடக்கிலும் அரசாங்கம் செயற்பட்ட விதம் குறித்து விசாரணை செய்வதற்கு நம்பகதன்மை மிக்க ஆணைக்குழுவை உருவாக்குவது சிறந்ததாக அமையும் என தெரிவித்துள்ள அவர் இரகசிய மறைமுக செல்வாக்குகள் காணப்படுவதால் குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துவது யதார்த்தமற்ற ஒன்றாக காணப்படுகின்றது என தெரிவித்துள்ளார்.
எனினும் அரசாங்கம் எப்படி செயற்பட்டது என்பதை அறிவது முக்கியம்,கடந்தகாலங்களில் கிளர்ச்சி எதிர்ப்பு நடவடிக்கைகளை அது எவ்வாறு பயன்படுத்தியது என்பதை அறிவது முக்கியம்,( அது விடுதலைப்புலிகளிற்கு எதிரானதாகயிருந்தாலும் சரி ஜேவிபிக்கு எதிரானதாகயிருந்தாலும் சரி)ஏனென்றால் அந்த கட்டமைப்புகள் இன்னமும் அரசஎந்திரத்தில் ஆழமாக பதிக்கப்பட்டுள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.
MEERA SRINIVASAN Virakesari