லண்டனின் ஹீத்ரோ விமானநிலையத்திற்கு மின்சாரத்தை வழங்கும் அதன் அருகில் உள்ள துணை மின்நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தை தொடர்ந்து விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.
உலகின் மிக மும்முரமான விமானநிலையமாக வர்ணிக்கப்படும் ஹீத்ரோ விமானநிலையம்; அடுத்த சில நாட்களில் குறிப்பிடத்தக்க பாதிப்புகளை எதிர்கொள்ளக்கூடும் என தெரிவித்துள்ள அதிகாரிகள் விமானநிலையம் மீண்டும் திறக்கப்படும் வரை எந்த காரணம் கொண்டும் பயணிகளை அங்கு செல்லவேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளனர்.
மேற்கு லண்டனில் உள்ள விமானநிலையத்தில் இன்று மாத்திரம் 1351 விமானங்களின் பயணம் நிறுத்தப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஹெய்ஸ் என்ற பகுதியில் உள்ள துணை மின்நிலையத்தில் மூண்ட தீ காரணமாக 16300 வீடுகளிற்கான மின்விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் 150 பேர் வரை பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது
ஹீத்ரோ விமானநிலையம் மூடப்பட்டதை தொடர்ந்து தாங்கள் திருப்பி அனுப்பப்பட்ட அனுபவத்தை பல பயணிகள் பகிர்ந்துவருகின்றனர்.
அமெரிக்காவிலிருந்து லண்டனிற்கு சென்ற டெல்டா எயர்லைன்ஸ் விமானம் திருப்பி அனுப்பப்பட்டதாக கிம் மிக்கெல் ஸ்கிபிரெக் தெரிவித்துள்ளார்.
லண்டன் விமானநிலையத்திற்கு அருகில் உள்ள நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக ஹீத்ரோ செல்லும் விமானம் மினியோபொலிஸிற்கு செல்லவேண்டிய நிலையேற்பட்டுள்ளது என விமானபணியாளர்கள் அறிவித்தனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
விமானம் மூன்று மணிநேர பயணத்தின் பின்னர் மீண்டும் திரும்புகின்றது என அறிவிக்கப்பட்டவேளை மக்கள் தங்கள் ஆதங்களை வெளியிட்டனர் ஆனால் தற்போது அனைவரும் அமைதியாகவுள்ளனர் அவர்கள் விமானத்திற்கு பிரச்சினையில்லை என தெரிவித்துள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.