இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான போர் தொடங்கியதிலிருந்து காசாவில் 50,000இற்கும் மேற்பட்ட பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக காசாவின் சுகாதார அமைச்சு இன்று (23) தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

இஸ்ரேல் மீண்டும் போரை தொடங்கியுள்ள நிலையில், இன்னும் கடினமான நாட்கள் வரவிருக்கும் நிலையில், இது ஒரு மோசமான மைல்கல் எனவும் காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 41 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ள காசா சுகாதார அமைச்சு, இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50,021 ஆக உயர்ந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

காசாவில் உள்ள அதிகாரிகள் உயிரிழப்பு புள்ளிவிபரங்களை வெளியிடும் போது பொதுமக்களுக்கும் ஹமாஸ் போராளிகளுக்கும் இடையில் வேறுபாடு காட்டுவதில்லை, ஆனால் சுகாதார அமைச்சும் ஐக்கிய நாடுகள் சபையும் இறப்புகளில் பெரும்பாலானவை பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று கூறுகின்றன.

உண்மையான எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கலாம் எனவும், பல ஆயிரக்கணக்கானோர் இன்னும் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருப்பதாகவும் நம்பப்படுகிறது.

இஸ்ரேல் வான்வழி தாக்குதலில் ஹமாஸ் அரசியல் தலைவர் மரணம்

தெற்கு காசாவின் கான் யூனிஸில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் அரசியல் தலைவர் சலா அல்-பர்தவீல் கொல்லப்பட்டதாக ஹமாஸ் மற்றும் பாலஸ்தீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த செவ்வாய்க்கிழமை முதல் காசா பகுதியில் இஸ்ரேல் மீண்டும் தாக்குதலை தொடங்கி நடத்தி வருகிறது. ஜனவரி மாதம் தொடங்கிய போர் நிறுத்தம் முடிவுக்கு வந்ததை அடுத்து, இஸ்ரேல் மீண்டும் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. இஸ்ரேல் தாக்குதல்களில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்ததாக பாலஸ்தீன சுகாதார அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேல் நடத்திய சமீபத்திய தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் அரசியல் அலுவலகத்தில் உறுப்பினராக இருக்கும் பர்தவீலுடன் சேர்ந்து அவரது மனைவியும் கொல்லப்பட்டதாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதே செய்தியை ஹமாஸ் ஆதரவு ஊடகங்களும் வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, போரின் முக்கிய நோக்கம் ஹமாஸ் அமைப்பின் ராணுவ அமைப்பை அழிப்பது தான் என்று பலமுறை கூறியுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை, தெற்கு காசாவில் ஹமாஸின் இராணுவ உளவுத்துறை தலைவரை கொன்றதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்தது.

Share.
Leave A Reply