யாழில் இன்று (18) இளைஞர் ஒருவர் திடீரென மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். வண்ணார்பண்ணை, கே.கே.எஸ் வீதியடியைச் சேர்ந்த29 வயதான பாலச்சந்திரன் சசிராஜ் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த இளைஞனின் தாய், தந்தை மற்றும் சகோதரர்கள் கடந்த 16ஆம் திகதி மட்டக்களப்புக்கு சென்றிருந்தனர். இந்நிலையில் குறித்த இளைஞனும் அவரது அண்ணாவும் மட்டுமே வீட்டில் இருந்தனர்.
பின்னர் நேற்றிரவு அவர்களது நண்பர்களை வீட்டுக்கு வரவழைத்து மதுபான பாவனையில் ஈடுபட்டுள்ளனர். அதன்பின்னர் நண்பர்கள் திரும்பிச் சென்றவேளை சகோதரர்கள் இருவரும் உறக்கத்துக்கு சென்றனர்.
பின்னர் குறித்த இளைஞனின் சகோதரன் அதிகாலை 1.30 மணியளவில் குறித்த இளைஞனை காணாத நிலையில் வெளியே வந்து பார்த்துள்ளார்.
இதன்போது குறித்த இளைஞன் கீழே விழுந்து காணப்பட்டார். பின்னர் சகோதரனும் உறவினரும் இணைந்து, அவசர நோயாளர் காவு வண்டி மூலம், அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பித்தனர். இந்நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். மரணத்துக்கான காரணிகள் அறியப்படாத நிலையில் உடற்கூற்று பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது