-`அவருடன் சண்டையிட எனக்குத் தகுதி கிடையாது” – மகள் குறித்து ஏ.ஆர்.ரஹ்மான்

மனைவியுடனான விவாகரத்து அறிவிப்புக்குப் பிறகு லைம்லைட்டில் இருக்கும் AR Rahman, மகளுடனான உறவு பற்றி சமீபத்திய பாட்காஸ்டில் பேசியுள்ளார்.

இந்திய சினிமாவின் முதன்மை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், சில ஆண்டுகளுக்கு முன்பு தனது மகளுடன் பதிவிட்ட புகைப்படம் சர்ச்சையை கிளப்பியது.

அதில், கத்திஜா ரஹ்மான் புர்கா அணிந்திருந்ததால், ரஹ்மான் அவரை புர்க்கா அணிய கட்டாயப்படுத்துவதாக வதந்திகள் பேசப்பட்டது.

சமீபத்தில் நயன்தீப் ரக்ஷித்தின் பாட்காஸ்ட்டில் பேசிய ரஹ்மான், தனது மகளுடனான உறவு குறித்துப் பேசியுள்ளார். பொய்யான வதந்திகள் மற்றும் இணையத்தில் பரவும் எதிர்வினைகளைச் சமாளிக்கும் போது அவரது மகளின் மன உறுதியைப் பாராட்டினார்.

“என் மகளுக்கென்று தனி ரசிகர்கள் இருக்கின்றனர்” – AR Rahman

சர்ச்சை குறித்து ரஹ்மான், “பொது வாழ்க்கையில் இருப்பதற்கான தேர்வை நாமே முடிவு செய்கிறோம்; இங்கு ஒரு பணக்காரரில் இருந்து கடவுள் வரை அனைவருமே மதிப்பாய்வு செய்யப்படுவார்கள்.” எனக் கூறியுள்ளார்.

மகள் பற்றி பேசுகையில், “என் மகளுக்கென்று தனி ரசிகர்கள் இருக்கின்றனர், பிரச்னை என்னவென்றால், அவருடன் சண்டையிடுவதற்கான தகுதி எனக்கு கிடையாது.

அவர் மிகவும் தெளிவாக எழுதப்பட்ட இரண்டு பக்க ஈ-மெயிலை அனுப்புவார், உங்களால் அதைப் பாராட்டத்தான் முடியும். அவரிடம் ‘அப்பாவுக்கு என் கடிதங்கள்’ என்ற தலைப்பில் ஒரு புத்தகம் இருக்க வேண்டும் என நினைக்கிறேன்.”


கத்திஜா ரஹ்மான்

சர்ச்சையின்போது, தனது தந்தையை பாதுகாக்கும் விதமாக, “நான் அணியும் உடைக்கோ அல்லது என் வாழ்க்கையில் நான் எடுக்கும் தேர்வுகளுக்கோ என் பெற்றோருடன் எந்த தொடர்பும் இல்லை என்று நான் கூற விரும்புகிறேன்.” என கத்திஜா பதிலளித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தது.

Share.
Leave A Reply