– புவியரசியலில் விரியும் புதிய சா்ச்சைகள்!

பீஜிங் நகரில் நடைபெற்ற முக்கியமான சந்திப்பு ஒன்று, தெற்காசியப் புவியியல் அரசியலில் புதிய அலையை எழுப்பியுள்ளது. சீனா, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூடிய இந்த முக்கியமான சந்திப்பில், சீனா–பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தை (CPEC) ஆப்கானிஸ்தானுக்கு விரிவாக்கம் செய்வதற்கான முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த புதன்கிழமை (21) நடைபெற்ற இந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையில், பாகிஸ்தானின் துணைப் பிரதமர் மற்றும் வெளியுறவு அமைச்சர் இஷாக் தார், சீனாவின் வெளியுறவு அமைச்சர் வாங் யி, மற்றும் ஆப்கானிஸ்தானின் இடைக்கால வெளியுறவு அமைச்சர் அமீர்கான் முத்தக்கி ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த சந்திப்பில் இராஜதந்திர ஈடுபாடுகள், வர்த்தகம், உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து விரிவான விவாதம் நடைபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

The Belt-and-Road initiative and the rising importance of China’s Western cities

பெல்ட் அண்ட் ரோட் முன்முயற்சி”யின் புதிய பரிமாணம்

வளர்ச்சித் திட்டங்களுக்கான தங்களின் உறுதியை வெளிப்படுத்தும் வகையில், மூன்று நாடுகளும் சீனாவின் பெல்ட் அண்ட் ரோட் முன்முயற்சியின் (பிஆர்ஐ) ஒத்துழைப்பை ஆழமாக்குவதற்கும், சீனா–பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தை ஆப்கானிஸ்தானுக்கு நீட்டிப்பதற்கும் ஒப்புதல் அளித்துள்ளன.

இந்த சந்திப்பிற்குப் பிறகு எக்ஸ் தளத்தில் பதிவிட்ட பாகிஸ்தான் அமைச்சர் இஷாக் தார், “பாகிஸ்தான், சீனா மற்றும் ஆப்கானிஸ்தான் பிராந்திய அமைதி, நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சிக்காக ஒன்றிணைந்து நிற்கின்றன“ என்று தெரிவித்துள்ளார்.

அண்மைக் காலமாக இந்தியாவுடனான பதற்றம் அதிகரித்துள்ள பின்னணியில், பாகிஸ்தான் அமைச்சர் இஷாக் தாரின் சீன விஜயமும், இந்தக் கருத்தும் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்தியாவின் எதிர்ப்பும் புவியியல் அரசியல் சவால்களும்

சீனா–பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தை எந்த மூன்றாம் நாட்டிற்கும் விரிவாக்கம் செய்வதை இந்தியா தனது கடுமையான எதிர்த்து வருகிறது.

தென்கிழக்கு ஆசியாவின் கடலோர நாடுகளில் வர்த்தகப் பாதைகளை புதுப்பிப்பதை நோக்கமாகக் கொண்ட சீனாவின் ‘பெல்ட் அண்ட் ரோட் முன்முயற்சியின்‘ ஒரு பகுதியாக அமைந்துள்ள சீனா–பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம், இப்போது ஆப்கானிஸ்தானை உள்ளடக்கிய வகையில் விரிவடைந்துள்ளது. இது பிராந்திய அரசியலில் புதிய சர்ச்சைகளை உருவாக்கியிருக்கிறது.

எதிர்காலத்தின் நோக்கும் புதிய சாத்தியங்கள்

இந்த மூன்று நாடுகளின் கூட்டு ஒப்பந்தங்கள் பிராந்தியத்தில் புதிய பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கும் அதே வேளையில், புவியியல் அரசியல் சமநிலையில் மாற்றங்களையும், பதற்றங்களையும் ஏற்படுத்தக்கூடும் என்று நம்பப்படுகிறது.

ஆப்கானிஸ்தானின் பொருளாதார மீட்சிக்கு இந்த சீனா–பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் எந்த அளவிற்கு உதவும் என்பதும், மத்திய ஆசியாவிலிருந்து அரபிக்கடல் வரையிலான வர்த்தகப் பாதையில் இது எவ்வாறு தாக்கம் செலுத்தும் என்பதும் உலக அரசியலில் கவனத்துடன் கண்காணிக்கப்படும் விஷயங்களாக உள்ளன.

ஆப்கானிஸ்தான் வழியாக சீனாவின் ஆதிக்கக் கனவு

21ஆம் நூற்றாண்டின் ஆரம்பம் முதலே, உலக அரசியலில் சீனா ஒரு சக்தியாக தன்னைக் காட்டிக்கொள்ள முயன்று வருகிறது.

தனது வணிக ரீதியிலான செயல்பாடுகள், பாரிய முதலீடுகள் மற்றும் பன்முக வேலைத்திட்டங்களின் வழியாக, தனது சாம்ராஜ்ய விரிவாக்கத்தை சீனா நடத்திக்கொண்டே இருக்கிறது. இதற்காக பல நாடுகளை இலக்கு வைத்து பல பில்லியன் அமெரிக்க டொலா்களை முதலீடு செய்து வருகிறது.

இதன் ஒரு முக்கிய வெளிப்பாடாகத் திகழ்வது தான் சீனா–பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் (China-Pakistan Economic Corridor – CPEC). இந்த வழித்தடம் பாகிஸ்தானின் குவாதர் (Gwadar) துறைமுகத்திலிருந்து சீனாவின் சின்ஜியாங் மாகாணத்தில் உள்ள காஷ்கார் நகரம் வரை பரந்து விரிகிறது. ஆனால் சமீபகாலமாக, இந்தப் பாதையை ஆப்கானிஸ்தானின் தரை வழியாகவும் விரிவுபடுத்த சீனாவால் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது.

இது வெறும் வணிக இலக்குகளை அடையும் திட்டம் மட்டும் அல்ல. இதன் பின்னணியில் சீனாவின் பொருளாதார ஆதிக்கம், புவியியல் அரசியல் செல்வாக்கு மற்றும் பாதுகாப்பு விவகாரங்கள் பெரிதும் உள்ளன.

ஆப்கானிஸ்தான்: புதிய வாயிலாக மாறும் பழைய போர்க்களம்

2021ம் ஆண்டு அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் இருந்து தனது படைகளை திரும்பப் பெற்றுக் கொண்டதன் பிறகு, அந்நாடு ஒரு அரசியல் உறுதித்தன்மை இல்லாத நிலையில் உள்ளது.

தாலிபான்களின் கைக்கு ஆட்சி சென்றதால், மேற்கத்திய நாடுகள் ஆப்கானிஸ்தானை தூரத்தில் வைத்தே பார்க்க ஆரம்பித்தன. இந்தச் சூழலை “வாய்ப்பாக” மாற்றிக்கொண்டிருக்கிறது சீனா.

சமீபத்தில் சீன அதிகாரிகள் மற்றும் தாலிபான் இடையே நடைபெற்ற உரையாடல்களில், CPEC திட்டத்தை ஆப்கானிஸ்தான் வரை விரிவுபடுத்துவதற்கான திட்டங்கள் முக்கியமாக பேசப்பட்டுள்ளன. இவ்வாறு சீனா மேற்கொள்ளும் முயற்சிகள், ஒரே நேரத்தில் பல நோக்கங்களைக் கொண்டிருக்கின்றன.

ஆப்கானில் கட்டமைக்கப்படவுள்ள வீதிகளை மத்திய ஆசியாவின் நுழைவாயிலாக பயன்படுத்த முடியும் என்று சீனா கருதுகிறது.

பாகிஸ்தானில் செய்யப்பட்டுள்ள சீன முதலீட்டின் பாதுகாப்பை ஆப்கானிஸ்தான் ஊடாகவும் செயல்படுத்துவதன் மூலம் பிராந்தியத்தில் தனது தற்காப்பு வளையத்தையும், பலத்தையும் கூட்டிக்கொள்ள சீனா முயற்சி செய்கிறது.

பாகிஸ்தானின் அரசியல் பங்கு

CPEC திட்டத்தின் ஆரம்ப நாளில் இருந்து பாகிஸ்தான் மிகுந்த உற்சாகத்துடன் இருந்தது. ஆனால் சமீபத்திய ஆண்டுகளில் பாகிஸ்தானின் உள்நாட்டு பொருளாதார வீழ்ச்சி, பாதுகாப்பு சவால்கள் மற்றும் தீவிரவாதத் தாக்குதல்களின் காரணமாக, CPEC முன்னேற்றத்தில் தடைகள் ஏற்பட்டன.

இதனால் சீனா, தன் நலன்களுக்காக தன் பாதைகளைத் தானாகவே விரிவுபடுத்தும் நிலைக்கு வந்துள்ளது. பாகிஸ்தான், ஒருவகையில், தனக்குத் தேவையான முதலீடுகளைப் பெறும் நிலையில் இருக்கிறதே தவிர, மேற்படி திட்டங்களை தனது முழுமையான கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.

பலூச்சிஸ்தான் மாகாணத்தில் சீனா கட்டமைக்கும் குவாதா் துறைமுகத்திற்கு எதிராக அந்த மண்ணின் மைந்தா்கள் கடும் எதிர்பார்ப்பைத் தெரிவித்து, தமது போராட்டங்களை நடாத்தி வருகின்றனா்.

இந்தியாவின் கவலைகள்: புவியியல் அரசியல் சிக்கல்கள்

இந்தியா, ஆரம்பத்திலிருந்தே சீனாவின் CPEC – The China-Pakistan Economic Corridor (CPEC) திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளது. காரணம்,

இந்த வழித்தடம் இந்தியாவிற்குரிய காஷ்மீர் பிரதேசமான பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக செல்கிறது. இது இந்தியாவின் பாதுகாப்பிற்கு பெரும் சவாலாக இருப்பதாக இந்தியா கருதுகிறது. சீனா இப்போது, இந்த வழித்தடத்தை ஆப்கானிஸ்தான் வழியாக மத்திய ஆசியா நோக்கி செல்லும் வகையில் விரிவுபடுத்தப் பார்க்கிறது.

அதேசமயம், சீனா, பாகிஸ்தான் மற்றும் தாலிபான் ஆட்சி கொண்ட ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று சக்திகளும் இணைந்து, இந்தியாவுக்கு எதிராக ஒரு புவியியல் வளையத்தை அமைக்க முயற்சி செய்வதற்கான அபாயமும் இருக்கின்றன.

ஆதிக்க அரசியலா?, அல்லது பொருளாதார நலன்களா?

CPEC ஒரு வணிகத் திட்டமா, அல்லது சீனாவின் புவியியல் அரசியல் செல்வாக்கை அமெரிக்காவின் தலையீடு குறைந்த பகுதியில் தனது ஆதிக்கத்தை உருவாக்கும் ஒரு முயற்சியா என்ற கேள்வி நாளுக்கு நாள் தீவிரமாகிறது.

ஆப்கானிஸ்தான் போன்ற உறுதித்தன்மையற்ற நாட்டை இந்த திட்டத்தில் இணைத்துக்கொள்வது, ஒரு வகையில் பயங்கரவாத அமைப்புகளுக்கு கூட வாய்ப்புகளை வழங்லாம் என்ற ஐயங்களும் எழுகின்றன.

– ஆதவன்

Share.
Leave A Reply