சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான ஞானசேகரன் குற்றவாளி என சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அவர் மீது சாட்டப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுகளும் நிரூபணமானதாக அறிவித்த நீதிபதி எம். ராஜலட்சுமி, ஞானசேகரன் குற்றவாளி எனத் தீர்ப்பு வழங்கியுள்ளார். தண்டனை விவரங்கள் ஜூன் 2ஆம் தேதி அறிவிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
காவல் துறை தரப்பு வழக்கறிஞர் மேரி ஜெயந்தி சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, “ஞானசேகரன் மீது குற்றம் சுமத்தப்பட்ட 11 பிரிவுகளிலும் அரசுத் தரப்பு வழங்கிய சாட்சியங்களின் அடிப்படையில் அவர் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் ஞானசேகரன் தனக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்குமாறு கேட்டுக் கொண்டார், தனது குடும்பம் தன்னை நம்பியுள்ளது என்று தெரிவித்தார். இதற்கு அரசுத் தரப்பில் கடுமையான ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டு, அதிகபட்ச தண்டனை விதிக்க வேண்டுமெனக் கோரப்பட்டது,” என்றார்.
தீர்ப்பை வரவேற்ற அதிமுக, பாஜக
இந்தத் தீர்ப்பை வரவேற்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, “மக்கள் மன்றத்தில் இந்த வழக்கு குறித்து, ஸ்டாலின் மாடல் அரசு மீது நிலவும் முக்கியமான கேள்விகளுக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை.
இந்த வழக்கில் முதலில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் உடனடியாக விடுதலை செய்யப்பட்டது ஏன்? விடுதலை மற்றும் மீண்டும் கைதுக்கு இடையில் என்ன நடந்தது? ஞானசேகரன் வீட்டுப் படுக்கையறையில் அமர்ந்து பிரியாணி சாப்பிடும் அளவுக்கு நெருக்கமாக இருந்த ஸ்டாலின் அரசின் அமைச்சர் மற்றும் சென்னை துணை மேயர் இந்த வழக்கில் விசாரிக்கப்படாதது ஏன்? SIT-ல் பணியாற்றிய டிஎஸ்பி ராகவேந்திரா ரவி ராஜினாமா செய்தது ஏன்? உயர் அதிகாரிகள் அழுத்தம் என்று வந்த செய்திகளுக்கு என்ன விளக்கம்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, “சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை நடத்திய திமுக நிர்வாகி ஞானசேகரன், குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்து இருப்பது வரவேற்கத்தக்கது.
இதுபோன்ற குற்றங்கள் மீண்டும் நடக்காதபடி, நீதிமன்றம் கடுமையான தண்டனை வழங்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.
வழக்கின் பின்னணி என்ன?
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த டிசம்பர் 23ஆம் தேதி பொறியியல் படிக்கும் மாணவி ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான வழக்கில் இன்று (மே 28) தீர்ப்பு வந்துள்ளது. இந்த வழக்கில் ஞானசேகரன் என்பவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சென்னையிலுள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் பொறியியல் படிக்கும் மாணவி ஒருவர் டிசம்பர் 23ஆம் தேதியன்று இரவு உணவுக்குப் பிறகு, மாணவர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தங்களை அச்சுறுத்தியதாகவும் பிறகு தனது நண்பரை அங்கிருந்து விரட்டிவிட்டு, தன்னை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாகவும் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் மறுநாள் காலையில் அந்த மாணவி புகார் அளித்தார். இந்த விவகாரம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
மாணவி அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கோட்டூர்புரம் உதவி ஆணையர் தலைமையில் நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அந்த நேரத்தில் அப்பகுதியில் உள்ள செல்போன் டவரில் பதிவான எண்களை வைத்து காவல்தறையினர் விசாரணை நடத்தினர்.
அதன் அடிப்படையில் தன்னை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய நபரை மாணவி அடையாளம் காட்டினார். இதையடுத்து டிசம்பர் 25ஆம் தேதியன்று 37 வயதான ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் கோட்டூர்புரத்தில் உள்ள நடைபாதையில் பிரியாணி கடை வைத்து வியாபாரம் செய்து வருபவர் என காவல்துறை தெரிவித்தது.
இந்தச் சம்பவத்தை முன்வைத்து எதிர்க்கட்சிகள் மிகப்பெரிய அளவில் கண்டனம் தெரிவித்தன.
இதற்கிடையில் டிசம்பர் 26ஆம் தேதியன்று காலையில், மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை பொதுவெளியில் வெளியானது.
மாணவிக்கு நடந்த அசம்பாவிதங்கள் பற்றிய விரிவான தகவல்கள் மட்டுமின்றி, அவரது பெயர், அலைபேசி எண், படிக்கும் பாடப்பிரிவு, முகவரி உள்ளிட்ட அனைத்து தகவல்களும் அதில் இடம் பெற்றிருந்தன.
சில தொலைக்காட்சி நிறுவனங்கள் அவரது தனிப்பட்ட விவரங்கள் தவிர்த்து, எந்தெந்தப் பிரிவுகளில் குற்றம் சாட்டப்பட்ட நபர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்ற தகவல் அடங்கிய முதல் தகவல் அறிக்கையை ஒளிபரப்பின.
பாதிப்பிற்கு உள்ளான மாணவி, தன்னைத் துன்புறுத்திய நபர் செல்போனில் யாருடனோ பேசியதாகவும் அவரை ‘சார்’ என அழைத்ததாகவும் தனது புகாரில் கூறியிருந்தார். இதை வைத்து எதிர்க்கட்சிகள் “யார் அந்த சார்?” எனக் கேள்வியெழுப்பின.
”எஃப்.ஐ.ஆர் வெளியானதற்கு தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இருக்கலாம், அது வெளியானது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது” என்று சென்னை காவல் ஆணையர் அருண் தெரிவித்தார். இது தொடர்பான அவருடைய செய்தியாளர் சந்திப்பே சர்ச்சைக்கு உள்ளானது.
குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன்
இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றக் கோரி அ.தி.மு.க. வழக்கறிஞர் வரலட்சுமி, பா.ஜ.க. வழக்கறிஞர் மோகன்தாஸ் ஆகியோர் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தனர்.
அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகள் அடங்கிய சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்து டிசம்பர் 28ஆம் தேதி உத்தரவிட்டது. இதற்குப் பிறகு, குற்றம்சாட்டப்பட்ட ஞானசேகரனை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை நகர காவல் ஆணையர் கடந்த ஜனவரி 5ஆம் தேதி உத்தரவிட்டார்.
வழக்கின் புலனாய்வு தொடர்ந்து நடந்து வந்த நிலையில் பிப்ரவரி 24ஆம் தேதியன்று சைதாப்பேட்டை ஒன்பதாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஞானசேகரனுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இதற்குப் பிறகு இந்த வழக்கு மார்ச் 7ஆம் தேதியன்று சென்னை மகளிர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. ஞானசேகரனுக்கு என வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகாத நிலையில், சட்டப் பணிகள் குழுவின் சார்பில் அவருக்காக இரு வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டனர்.
இதற்குப் பிறகு, தனக்கு எதிராகக் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானவை என்றும் இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்றும் ஞானசேகரன் தரப்பில் தாக்கல் செய்த மனுவை மகளிர் நீதிமன்றம் கடந்த ஏப்ரல் 8ஆம் தேதியன்று தள்ளுபடி செய்தது. அன்றைய தினமே அவர் மீதான குற்றச்சாட்டுகளும் பதிவு செய்யப்பட்டன.
பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுதல், ஆதாரங்களை அழித்தல், சட்டவிரோதமாகக் கட்டுப்பாட்டில் வைத்திருத்தல், புகைப்படம் எடுத்து வெளியிடுதல் உள்ளிட்ட பல குற்றங்களுக்காக தகவல் தொழில்நுட்பச் சட்டம், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம், பிஎன்எஸ் சட்டம் ஆகியவற்றின் கீழ் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
ஏப்ரல் 23ஆம் தேதியன்று மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி எம். ராஜலட்சுமி முன்பாக சாட்சிகளின் விசாரணை தொடங்கியது. தினந்தோறும் நடத்தப்பட்ட இந்த விசாரணையில் காவல்துறை தரப்பில் 29 பேர் சாட்சியம் அளித்தனர். 75 ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இதற்குப் பிறகு மே 20ஆம் தேதி முதல் மே 23ஆம் தேதிவரை இரு தரப்பிலும் தங்கள் இறுதி வாதங்களை முன்வைத்தனர். காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.பி.மேரி ஜெயந்தி, குற்றம் சாட்டப்பட்ட ஞானசேகரனுக்கு எதிரான அனைத்துக் குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கபட்டு இருப்பதால் அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இந்த வழக்கில் மே 28ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திய ஒரு பாலியல் குற்ற வழக்கில் ஆறு மாதங்களுக்குள் புலனாய்வும் நீதிமன்ற விசாரணையும் முடிவடைந்து தீர்ப்பு வந்துள்ளது.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஞானசேகரனுக்கு எதிராக மேலும் பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
–