ஃபைனான்ஸ் தொழிலதிபர்களுடன் நெருக்கமாக இருந்து, அதை வீடியோவாகவும் எடுத்து, மிரட்டிப் பணம் பறித்துவந்த முன்னாள் காவலர்கள், ரௌடிக் கும்பலை நெருக்கத் தொடங்கியிருக்கிறது பழனி காவல்துறை.
மூன்று பேர் கைதுசெய்யப்பட்டிருக்கும் இந்த செக்ஸ் மோசடி விவகாரத்தில், ரகசிய வீடியோ எடுத்த முறையும், அதன் பின்னால் நடந்திருக்கும் சதியும் `பகீர்’ கிளப்புகின்றன.
ஃபைனான்ஸ் அதிபர்கள்தான் ‘டார்கெட
திண்டுக்கல் மாவட்டம், பழனியைச் சேர்ந்தவர் சுகுமார். ஃபைனான்ஸ் தொழில் செய்துவரும் இவர்,
நேதாஜி நகரைச் சேர்ந்த ராணிசித்ரா என்பவருக்கு 5 லட்சம் ரூபாய் வட்டிக்குப் பணம் கொடுத்திருக்கிறார்.
வட்டி வசூலுக்குச் சென்றபோது, அவருக்கும் ராணிசித்ராவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட, நாளடைவில் இருவரும் நெருங்கமாகியிருக்கின்றனர்.
இந்த நிலையில், தன்னுடன் தனிமையில் இருந்ததை ரகசிய கேமரா மூலம் வீடியோ எடுத்து, நகையும் பணமும் கேட்டு ராணி சித்ராவும், அவருடைய கூட்டாளிகளான நாராயணன், ரௌடி துர்க்கைராஜ் ஆகியோரும் மிரட்டுவதாக, பழனி நகர காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கிறார் சுகுமார்.
அதைத் தொடர்ந்து, ராணிசித்ராவைக் கைதுசெய்த போலீஸ், இந்த செக்ஸ் மோசடிப் பின்னணியில் உடந்தையாக இருந்த மேலும் இருவரைக் கைதுசெய்திருக்கிறது.
ராணிசித்ராவின் செக்ஸ் மோசடி நெட்வொர்க் குறித்து நம்மிடம் பேசிய காவல்துறை அதிகாரிகள் சிலர், “ஃபைனான்ஸ் அதிபர் சுகுமார் எங்களிடம் புகாரளித்தபோது,
இது தனிநபர் ஒருவர் பாதிக்கப்பட்ட புகாராகத்தான் இருக்குமென நாங்கள் நினைத்தோம். ஆனால், ராணிசித்ராவைக் கைதுசெய்து விசாரித்த பிறகுதான், எங்களுக்கே பல அதிர்ச்சிகள் காத்திருந்தன.
பழனி, பாலசமுத்திரத்தைச் சேர்ந்தவர்தான் இந்த ராணிசித்ரா. 2005-ல் இரண்டாம் நிலைக் காவலராகப் பணியில் சேர்ந்தார்.
பணிக்கு வராத காரணத்தால் ஒழுங்கீன அடிப்படையில் 2008-ல் பணியிலிருந்து நிரந்தரமாக நீக்கம் செய்யப்பட்டார்.
அப்போதுதான், காவல்துறையில் தன்னுடன் பணியாற்றி, தன்னைப்போலேவே ஒழுங்கீன அடிப்படையில் பணிநீக்கம் செய்யப்பட்ட காவலர் நாராயணன் என்பவருடன் ராணிசித்ராவுக்குப் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.
குறுக்குவழியில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று திட்டமிட்ட இருவரும், இந்த செக்ஸ் மோசடித் திட்டத்தைக் கையிலெடுத்திருக்கின்றனர்.
அதற்காக, பழனி, நேதாஜி நகரில் ஒரே குடியிருப்பில் பின்பகுதியில் ராணிசித்ராவும், முன்பகுதியில் நாராயணனும் தனித்தனியே வீடெடுத்துத் தங்கியிருக்கின்றனர்.
இதில், நாராயணன் வீட்டின் இரண்டு அறைகளிலும் ரகசிய கேமராவைப் பொருத்தியிருக்கின்றனர்.
ஃபைனான்ஸ் அதிபர்கள்தான் இவர்களின் ‘டார்கெட்.’ அவர்களிடம் பணம் வாங்குவதுபோல் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளும் ராணிசித்ரா,
வட்டி வசூலுக்காக வீட்டுக்கு வரும் ஃபைனான்ஸ் அதிபர்களுடன் நெருங்கிப் பழகியிருக்கிறார்.
“அவர் வீட்டுல ஜாலியா இருக்கலாம்… வர்றீங்களா?
நெருக்கம் அதிகமானவுடன், ‘என்னோட நண்பர் நாராயணன் குடும்பத்தோட வெளியூருக்குப் போயிட்டாரு. அவர் வீட்டுச் சாவி என்கிட்டதான் இருக்கு. அவர் வீட்டுல ஜாலியா இருக்கலாம்… வர்றீங்களா?’ எனக் கூறி, அந்த ஃபைனான்ஸ் அதிபர்களை நாராயணன் வீட்டுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.
ரகசிய கேமரா பொருத்தப்பட்ட அறையில் அவர்களோடு உல்லாசமாக இருந்து, அதை வீடியோவாகவும் பதிவுசெய்திருக்கிறார் ராணிசித்ரா.
ஓரிரு நாள்கள் கழித்து சம்பந்தப்பட்ட ஃபைனான்ஸ் அதிபர்களுக்கு போன் செய்யும் நாராயணன், ‘ஆளில்லாதபோது என் வீட்டுக்குள் வந்து உல்லாசமாக இருந்திருக்கிறீர்கள்.
அது தொடர்பான வீடியோ அனைத்தும் என்னிடம் இருக்கின்றன. அதுமட்டுமல்லாமல் என் வீட்டில் இருந்த நகை, பணத்தையும் காணவில்லை.
என்னுடைய பணம், நகையைத் தராவிட்டால், இருவரும் இருக்கும் வீடியோவை உங்கள் வீட்டுக்கே அனுப்பிவிடுவேன்’ என்று மிரட்டிப் பணம் பறித்திருக்கிறார்.
பணம் தர மறுப்பவர்களை ரௌடி துர்க்கைராஜன் மூலமும் மிரட்டியிருக்கிறார் நாராயணன். ராணிசித்ராவும் ஃபைனான்ஸ் அதிபர்களுக்கு போன் செய்து, ‘நாராயணன் கேட்பதைக் கொடுத்துவிடுங்கள்.
இல்லாவிட்டால் வீடியோவை வெளியிட்டுவிடுவார்கள்’ என்று பயந்ததுபோல் பேசுவாராம்.
இவர்களின் இந்த செக்ஸ் மோசடிக்கு ஃபைனான்ஸ் அதிபர் சுகுமாரும் இரையாகியிருக்கிறார்.
‘100 பவுன் நகையுடன் 60 லட்சம் ரூபாய் பணத்தைக் கொடுக்காவிட்டால், வீடியோவை உன் குடும்பத்தினருக்கு அனுப்பிவிடுவேன்’ என்று நாராயணன், சுகுமாரை மிரட்டியிருக்கிறார்.
‘‘பணம் தராவிட்டால், கொலைசெய்துவிடுவேன்’ என்று ரௌடி துர்க்கைராஜ் மிரட்டவும், பயந்துபோன சுகுமார் பழனி நகர காவல் நிலையத்தில் புகாரளிக்கவே, ராணிசித்ராவின் செக்ஸ் மோசடி நெர்வொர்க் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.
சமூகத்தில் நல்ல அந்தஸ்தில் இருப்பதால், புகாரளிக்க முன்வராமல் வீடியோவுக்கு பயந்தே பலரும் லட்சக்கணக்கில் பணத்தையும் நகையையும் ராணிசித்ரா கும்பலிடம் இழந்திருக்கின்றனர்” என்கின்றனர்.
விரிவாக இந்த வழக்கு தொடர்பாக, பழனி நகர காவல் நிலைய ஆய்வாளர் மணிமாறனிடம் பேசியபோது, “ராணிசித்ராவிடம் நடத்திய விசாரணையில், நிறைய பேருடன் அவருக்குத் தொடர்பு இருப்பது தெரியவந்திருக்கிறது.
அவரது செல்போனில் பலரையும் ஆபாச வீடியோ எடுத்துவைத்திருக்கிறார். ஆனால், மிரட்டிப் பணம் பறித்ததாக சுகுமாரைத் தவிர வேறு யாரும் புகாரளிக்கவில்லை.
வேறு யாரேனும் ராணிசித்ரா மீது புகாரளிக்கும் பட்சத்தில் உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
‘ஒரு மனிதனை ஏமாத்தணும்னா, அவனோட ஆசையைத் தூண்டணும்’ என்பதைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு, ஸ்கெட்ச் போட்டு வசூலில் கொழித்திருக்கிறது ராணிசித்ரா டீம்.
காவல்துறை தீர விசாரித்து, இந்த செக்ஸ் மோசடியின் பின்னணியில் இருப்பவர்கள் அனைவரையும் சட்டத்தின் முன்பு நிறுத்த வேண்டும்.