ஐபில் தொடரில் மும்பை வீழ்த்தி பஞ்சாப் அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கும் இந்த தொடரில், புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த பஞ்சாப் – பெங்களூர் அணிகளுக்கு இடையிலான முதல் அரையிறுதி போட்டி கடந்த மே.29ம் திகதி நடைபெற்றது.
இதில், பஞ்சாப்பை வீழ்த்தி முதல் அணியாக பெங்களூர் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. தோல்வி கண்ட பஞ்சாப் கிங்ஸ் 2வது தகுதி சுற்றுக்கு தகுதி பெற்றது.
தொடர்ந்து, எலிமினேட்டர் போட்டியில் குஜராத் – மும்பை அணிகள் கடந்த 30ம் தேதி மோதின. இதில் குஜராத்தை வீழ்த்தி மும்பை அணி அபார வெற்றி பெற்று 2வது தகுதி சுற்றுக்குள் நுழைந்தது. இந்த நிலையில், 2வது தகுதி சுற்று ஆட்டம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று (ஜுன் 1) நடைபெற்றது. இதில் முதல் தகுதி சுற்றில் தோல்வி கண்ட பஞ்சாப், வெளியேற்றுதல் சுற்றில் வெற்றி பெற்ற மும்பை அணியுடன் மோதியது.
இந்த போட்டிக்கான நாணய சுழற்சியில் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதற்கிடையே நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் மழை பெய்ததன் காரணமாக ஆட்டத்தை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் 7.30 மணியளவில் தொடங்க வேண்டிய ஆட்டம் சுமார் 2.15 மணி நேரம் தாமதமாக தொடங்கியது. இருப்பினும் ஓவர்கள் எதுவும் குறைக்கப்படவில்லை.
இதனையடுத்து மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா, ஜானி பேர்ஸ்டோ ஆகியோர் களமிறங்கினர். இதில் ரோகித் சர்மா 8 ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார்.
பின்னர் வந்த திலக் வர்மாவுடன் பேர்ஸ்டோ ஜோடி சேர்ந்தார். இதில் பேர்ஸ்டோ 38 ஓட்டங்களிலும் திலக் வர்மா 44 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். இவர்களையடுத்து களம்கண்ட கேப்டன் ஹர்திக் பாண்டியா 15 ஓட்டங்களில் வெளியேறினார்.
தொடர்ந்து, ஆடிய சூர்யகுமார் யாதவ் 44 ஓட்டங்களிலும், நமன் திர் 37 ஓட்டங்களிலும் அவுட் ஆகினர். இறுதியில் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 203 ஓட்டங்கள் எடுத்தது.
இதையடுத்து 204 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி விளையாடியது. பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய பிரப்சிம்ரன் சிங் 6 ஓட்டங்களிலும் பிரியான்ஷ் ஆர்யா 20 ஓட்டங்களிலும் வெளியேறினர். இதையடுத்து கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயருடன், ஜோஷ் இங்கிலிஸ் ஜோடி சேர்ந்தார்.
இவர்களில் ஜோஷ் இங்கிலிஸ் 38 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து நேஹல் வதேரா-ஸ்ரேயாஸ் ஐயர் ஜோடி சேர்ந்து அதிரடியாக ஆடி ஓட்டங்களை குவித்தனர். நேஹல் வதேரா 48 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். சஷாங்க் சிங் 2 ஓட்டங்களில் ரன் அவுட் ஆனார். இறுதிவரை நிலைத்து நின்று அதிரடி காட்டிய ஸ்ரேயாஸ் ஐயர் 87 ஓட்டங்கள் விளாசினார்.
இறுதியில் பஞ்சாப் அணி 19 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 207 ஓட்டங்கள் குவித்தது. இதன்மூலம் பஞ்சாப் அணி 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மும்பை அணியில் அஸ்வணி குமார் 2 விக்கெட்டுகளும், ஹர்திக் பாண்டியா மற்றும் டிரெண்ட் போல்ட் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இந்த வெற்றியின் மூலம் மும்பை அணியை வீழ்த்தி பஞ்சாப் அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. 11 ஆண்டுகளுக்குப் பிறகு பஞ்சாப் அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. நாளை நடைபெறும் ஐபிஎல் 2025 இறுதிப்போட்டியில் பஞ்சாப் அணியுடன், பெங்களூரு அணி மோத உள்ளது.