‘சேது’ திரைப்படம் பார்த்து விட்டு இயக்குநர் பாலு மகேந்திரா தன்னிடம் கூறிய விஷயங்களை இயக்குநர் பாலா நேர்காணல் ஒன்றில் பகிர்ந்து கொண்டார். குறிப்பாக, பாலு மகேந்திரா தன்னை திட்டியதாக அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு இடம் இயக்குநர் பாலாவிற்கு இருக்கிறது. வர்த்தகம் ஒன்றே குறிக்கோள் என்று இயங்கும் சினிமா துறையில் மாற்றுப் பாதையில் பயணிக்கும் மிகச் சிலரில் இயக்குநர் பாலாவும் ஒருவர்.
நடிகர்களான விக்ரமிற்கு ‘சேது’, சூர்யாவிற்கு ‘நந்தா’, ஆர்யாவிற்கு ‘நான் கடவுள்’, விஷாலுக்கு ‘அவன் இவன்’ என்று மாறுபட்ட கதாபாத்திரங்களை கொடுத்து அதில் வெற்றியும் கண்டவர் பாலா. குறிப்பாக, பாலாவின் இயக்கத்தில் நடித்த போது தங்களுடைய நடிப்பு அடுத்தகட்டம் நோக்கி வளர்ச்சி அடைந்ததாக அவரிடம் பணியாற்றிய பலரும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், ‘சேது’ திரைப்படம் பார்த்து விட்டு இயக்குநர் பாலு மகேந்திரா தன்னிடம் கூறிய விஷயங்களை இயக்குநர் பாலா நேர்காணல் ஒன்றில் பகிர்ந்து கொண்டார். குறிப்பாக, பாலு மகேந்திரா தன்னை திட்டியதாக அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பான வீடியோ கலட்டா தமிழ் சேனல் யூடியூப் சேனலில் பதிவிடப்பட்டுள்ளது.
அந்த வீடியோவில், “சேது திரைப்படம் பார்த்து விட்டு எல்லோர் முன்னிலையிலும் இயக்குநர் பாலு மகேந்திரா என்னை பாராட்டினார். அதன் பின்னர், அவருடைய அலுவலகத்திற்கு வந்து சந்திக்குமாறு என்னிடம் கூறினார். அதேபோன்று, நானும் அவரது அலுவலகத்திற்கு சென்று அவரை சந்தித்தேன்.
அப்போது, ‘ஏன்டா பாலா உனக்கு இவ்வளவு குரூர புத்தி? அப்பாவி பெண் படிப்பதற்காக கல்லூரிக்கு செல்கிறாள். அதே கல்லூரியில் பயிலும் ஒரு ரௌடி அப்பெண்ணை மிரட்டி காதலிக்க வைக்கிறான். பின்னர், ஒரு விபத்தில் அவனுக்கு உடல் நலம் பாதிக்கப்படுகிறது.
இதனால், படத்தில் வரும் கதாநாயகி, அப்பெண்ணின் முறைப்பையன் மற்றும் கதாநாயகன் என எல்லோரது வாழ்க்கையும் முற்றிலும் அழிந்து போவதை போன்று படம் எடுத்திருக்கிறாய். உன்னால் எப்படி இவ்வளவு குரூரமாக சிந்திக்க முடிகிறது?
ஏறத்தாழ நீ உருவாக்கிய ஹீரோயின் என்பவள் உன்னுடைய மகள் போன்றவள். நீ பெற்றெடுத்த பெண்ணை நீயே கழுத்தை நெறித்துக் கொன்று விடுவாயா?’ என்று பாலு மகேந்திரா என்னை கடுமையாக திட்டினார்” என இயக்குநர் பாலா நினைவு கூர்ந்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.