கன்னியாகுமரி மாவட்டத்தில், ஓடும் ரயிலின் படிகட்டில் நின்றவாறு நடனமாடிய இளம்பெண்ணின் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

சமீபகாலமாக, சமூக வலைதளங்களில் அதிக பின் தொடர்பவர்கள் வேண்டும் என்பதற்காக விபரீதமான முறையில் பலர் ரீல்ஸ் எடுப்பதையும் , அதன் முடிவில் அவர்களுக்கு ஏற்படும் விபரீதங்கள் பலவற்றையும் நாம் பார்த்திருப்போம்.

மலை இடுக்கில் நின்று ரீல்ஸ் எடுப்பது, கடல் நடுவே உள்ள பாறையில் ஏறி நின்று சீறி வரும் அலைகளுடன் வீடியோ எடுப்பது, ரெயில் மற்றும் பஸ்களில் தொங்கியபடி படம் எடுப்பது, மோட்டார் சைக்கிள்களில் சாகசம் செய்வது என்று இளைஞர்களும் இளம்பெண்களும் இப்படி ரீல்ஸ் எடுத்து அதை பதிவேற்றி வருகின்றனர்.

இந்தவரிசையில், கன்னியாகுமரி மாவட்டத்தில், ஓடும் ரயிலின் படிகட்டில் நின்றவாறு நடனமாடிய இளம்பெண்ணின் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அதுமட்டுமல்ல, பலரின் கண்டனங்களையும் பெற்று வருகிறது.

நாகர்கோவிலை சேர்ந்த அந்த பெண் நாகர்கோவில் இருந்து சென்னை சென்ற எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணித்தபோது தான் ரீல்ஸ் மோகம் தலைதூக்கி உள்ளது.

அவர், ஓடும் ரெயிலின் படிக்கட்டில் முதலில் இறங்கி நிற்கிறார். பின்னர் படியில் நின்று கொண்டே சினிமா பாடலுக்கு நடனமாடுகிறார். பின்னர் திரும்பி நின்றபடி தொங்கிய நிலையில் செல்கிறார்.

கைகளை அசைத்த படியும், தலையை ஆட்டியபடியும் செல்லும் பெண், பல்வேறு முக பாவனைகளையும் காட்டிச் செல்கிறார். அதனை ரீல்ஸ் வீடியோ எடுத்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.

அதுதான் தற்போது வைரலாகி வருகிறது. இதனை பார்த்த பலரும் தங்கள் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். அவரை பின் தொடர்வோர் கூட கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
ஓடும் ரயிலில் ரீல்ஸ்

மேலும், ஆபத்தை உணராமல், ரீல்ஸ் எடுக்க படிகட்டில் அவர் நடனமாடிய காட்சிகள் வெளியான நிலையில், சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு கண்டனம் தெரிவித்து வருவதோடு, இது தொடர்பாக ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இந்த வீடியோவை அகற்ற வேண்டும் என பலரும் வலியுறுத்தியுள்ளனர்.

Share.
Leave A Reply