“அம்பத்தூர்:சென்னை ஐ.சி.எப். ராஜீவ்காந்தி நகரில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு 19 வயதே ஆன இளம் ஜோடி வாடகைக்கு குடி வந்துள்ளனர்.

இருவரும் தங்களுக்கு திருமணமாகி விட்டதாக கூறி ரூ.4 ஆயிரம் வாடகை கொடுத்து சிறிய வாடகை வீட்டில் தங்கியுள்ளனர்.

இந்த நிலையில் நேற்று இரவு 10.30 மணி அளவில் வாலிபர் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஜன்னல் வழியாக பார்த்து உள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் இதுபற்றி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.உடனடியாக ஐ.சி.எப். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உள் பக்கமாக பூட்டப்பட்டிருந்த கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றனர்.

அங்கு அவர்கள் கண்ட காட்சி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.வாலிபர் தூக்கில் தொங்கியபடி காணப்பட்ட நிலையில் அவருடன் தங்கியிருந்த இளம்பெண் பலத்த காயத்துடன் பிணமாக கிடந்தார்.

இருவரின் உடலையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்த போலீசார் அடுத்த கட்ட விசாரணையை தீவிரப்படுத்தினர்.

போலீஸ் விசாரணையில் ஒரே வீட்டில் உயிரிழந்த இருவரும் கல்லூரி மாணவன்-மாணவி என்பது தெரிய வந்தது.

அவர்களது பெயர் ஆகாஷ்-அபிநயா என்பதும் இருவரும் விழுப்புரத்தில் உள்ள அறிஞர் அண்ணா கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளனர் என்பதும் தெரிந்தது.

அபிநயா, பி.ஏ. ஆங்கில பொருளாதாரமும், ஆகாஷ் பி.எஸ்.சி.யும் படித்து வந்த நிலையில் உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில்தான் இருவரும் புராஜக்ட் வேலைக்காக சென்னை செல்வதாக கூறி விட்டு வந்ததும், இங்கு அவர்கள் கணவன்-மனைவி போல உல்லாசமாக குடும்பம் நடத்தி வந்ததும் கண்டு பிடிக்கப்பட்டது.

ஐ.சி.எப். வீட்டில் கடந்த 10 நாட்களாகவே இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று இரவும் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.

அப்போது காதலி அபிநயாவை ஆகாஷ் சரமாரியாக முகத்தில் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் நிலைகுலைந்த அபிநயா சுருண்டு விழுந்து பலியாகி உள்ளார்.

இதனால் பயந்து போன ஆகாஷ் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரிய வந்த நிலையில் எதற்காக இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது என்று தெரியவில்லை.

இது தொடர்பாக போலீசார் இருவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

இருவரின் மரணம் பற்றியும் பெற்றோர் மற்றும் உறவினர்களுகூகு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனை கேட்டு அவர்கள் அதிர்ச்சியில் மூழ்கினார்கள்.

ஆசை ஆசையாய் வளர்த்த தங்களது பிள்ளைகள் இப்படி செய்து விட்டார்களே? என 2 குடும்பத்தை சேர்ந்தவர்களும் வேதனையில் கண்ணீர் வடித்தபடி உள்ளனர்.

அறியாத பருவத்தில் ஏற்படும் காதலுக்கு ஆயுசு குறைவு என்பார்கள். அந்த வரிசையில் ஆகாஷ்-அபிநயாவின் காதலும் சேர்ந்துள்ளது.இளம் காதல் ஜோடி உயிரிழந்த சம்பவம் ஐ.சி.எம். பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.”,

Share.
Leave A Reply