•`உன் பொண்ணைக் கொன்னுட்டேன்… இனிமே, என்னை நீ என்ன வேணாலும் செஞ்சுக்க…’ என்று சாதாரணமாகச் சொன்னான். அப்போது, அவன் மிதமிஞ்சிய கஞ்சா போதையில் இருப்பதை அறிந்துகொண்டோம்
தன்னிடம் பேச மறுத்த பள்ளி மாணவியை, வீடு புகுந்து கொடூரமாகக் குத்திக் கொன்ற இளைஞனின் ரத்த வெறியாட்டம், ராணிப்பேட்டையைக் குலைநடுங்கவைத்திருக்கிறது!
ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அருகிலுள்ள புலிவலம் சந்தைமேடு பகுதியைச் சேர்ந்த கார்பென்டர் ஜெகத்குமார்.
இவரின் மனைவி பிரியங்கா. இந்தத் தம்பதிக்கு கார்த்திக், ஜனனி (வயது 15) என இரண்டு பிள்ளைகள். கணவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் ஜெகத்குமாரைப் பிரிந்த பிரியங்கா, திருத்தணியை அடுத்த கே.ஜி.கண்டிகைப் பகுதியில் வசித்து வந்திருக்கிறார்.
மகன் கார்த்திக் தாயுடனும், மகள் ஜனனி தந்தையுடனும் வசித்து வந்திருக்கின்றனர். நடப்பு கல்வியாண்டில் ப்ளஸ் ஒன் செல்லவிருந்த மாணவி ஜனனி, 28-5-2025 அன்று மாலை மிகக் கொடூரமாகக் குத்திக் கொலைசெய்யப்பட்டார்.
பதைபதைக்கவைக்கும் இந்தக் கொடூரத்தைச் செய்தது, சுப்பிரமணி என்ற 20 வயது இளைஞன். கொலை நிகழ்த்தப்பட்டவிதமும், கஞ்சா போதையின் மிதப்பில் கால் மேல் கால் போட்டு கொலையிடத்திலேயே அவன் நாற்காலியில் அமர்ந்திருந்த பின்னணியும் பகீர் கிளப்புகின்றன.
இது குறித்துப் பேசிய மாணவியின் மாமா பாலமுருகன் உள்ளிட்ட உறவினர்கள், “பெற்றோரின் பிரிவுக்குப் பிறகு, இரு பிள்ளைகளுமே தாயுடன்தான் வசித்துவந்தனர்.
அங்கே இவர்கள் தங்கியிருந்த வீட்டுக்கு எதிர்வீட்டில் வசித்தவன்தான் சுப்பிரமணி. கறிக்கடையில் தினக்கூலி வேலை செய்துவந்தவன்,
சில திருட்டு வழக்கிலும் சம்பந்தப்பட்டிருக்கிறான். கஞ்சா அடித்துவிட்டு பொறுக்கித்தனமாக ஊருக்குள் ரகளை செய்கிறவன்.
எதிரெதிர் வீடு என்பதால், ஜனனியிடம் பேசிப் பழக முயன்றிருக்கிறான். ஒருகட்டத்தில் காதலிப்பதாகச் சொல்லி, தொல்லை கொடுக்க ஆரம்பித்திருக்கிறான்.
இந்த விஷயம் தாய் பிரியங்காவுக்குத் தெரியவந்ததையடுத்து, `என் மகளிடம் தேவையில்லாமல் பேசாதே… தொந்தரவு செய்யாதே’ என்று சுப்பிரமணியை எச்சரித்திருக்கிறார்.
அதனால் ஆத்திரமடைந்த சுப்பிரமணி, `உன் பொண்ணு எனக்குத்தான். உன்னால முடிஞ்சதைப் பாரு…’ என பிரியங்காவை மிரட்டியிருக்கிறான்.
அப்போதே போலீஸில் புகாரளித்திருந்தால், சுப்பிரமணி போக்சோவில் கைதுசெய்யப்பட்டிருப்பான்.
ஆனால், மகளின் பெயர் தவறாக அடிப்பட்டுவிடுமே என நினைத்தவர், கடந்த வருடமே தந்தையின் பாதுகாப்பில் இருக்கட்டும் என ஜனனியைப் புலிவலம் சந்தைமேடுக்கு அனுப்பி வைத்துவிட்டார் பிரியங்கா.
பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சிபெற்று, விடுமுறையை ஒட்டி வீட்டில் இருந்தாள் ஜனனி. மே 28-ம் தேதி காலையில் தந்தை ஜெகத்குமார் வழக்கம்போல வேலைக்குச் சென்றுவிட்டார்.
அன்று மாலை 5 மணி இருக்கும்போது, சுப்பிரமணி பைக்கில் வந்து வீட்டை நோட்டமிட்டிருக்கிறான்.
வீட்டுக்குள் ஜனனி, தன் அத்தை மகளுடன் டி.வி பார்த்துக்கொண்டிருப்பதை உறுதிசெய்து கொண்டவன்,
பைப் வழியாக மாடிமீது ஏறி, உள்பக்கப் படிக்கட்டின் வழியாக வீட்டுக்குள் புகுந்து கதவைப் பூட்டியிருக்கிறான்.
பின்னர் தன்னைத் தடுக்க முயன்ற ஜனனியின் அத்தை மகள் வயிற்றில் இரு முறை கத்தியால் குத்தியவன், கதவைத் திறந்து அவளை வெளியே தள்ளிவிட்டிருக்கிறான்.
மீண்டும் கதவை உள்பக்கமாகத் தாழிட்டுக்கொண்ட சுப்பிரமணியைப் பார்த்த ஜனனி, வேகமாக ஓடிச் சென்று கழிவறைக்குள் புகுந்து கதவைப் பூட்டிக்கொண்டிருக்கிறாள்.
ஆனால், கழிவறைக் கதவை உடைத்து, `என்ன லவ் பண்ண மாட்டியா… எனக்குக் கிடைக்காத நீ இனி யாருக்கும் கிடைக்கக் கூடாது!’ என்று சொல்லி ஜனனியின் முகம், மார்புப் பகுதிகளில் சரமாரியாகக் குத்திக் கிழித்திருக்கிறான்.
பாவம் ஜனனி, ரத்த வெள்ளத்தில் அங்கேயே சுருண்டு விழுந்து இறந்திருக்கிறாள்.
தகவலறிந்து ஜெகத்குமார் வர, கடப்பாரையைக் கொண்டு கதவை உடைத்து உள்ளே சென்றோம்.
இறந்துகிடந்த ஜனனியின் உடலுக்கு அருகிலேயே நாற்காலியில் கால் மேல் கால் போட்டு ரத்தக்கறையுடன் அமர்ந்துகொண்டிருந்தான் கொலைகாரன் சுப்பிரமணி.
`உன் பொண்ணைக் கொன்னுட்டேன்… இனிமே, என்னை நீ என்ன வேணாலும் செஞ்சுக்க…’ என்று சாதாரணமாகச் சொன்னான்.
அப்போது, அவன் மிதமிஞ்சிய கஞ்சா போதையில் இருப்பதை அறிந்துகொண்டோம். அவனைப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்துவிட்டோம்.
கொலைகாரனுக்கு விரைவாக தண்டனை வாங்கிக்கொடுத்து தூக்கில் போட வேண்டும்’’ என்றனர் கொதிப்போடு.
இந்த வழக்கை விசாரிக்கும் கொண்டப்பாளையம் போலீஸாரிடம் கேட்டபோது, “கொலையாளி சுப்பிரமணி மீது மரண தண்டனை கிடைக்கக்கூடிய அளவிலான சட்டப் பிரிவு உட்பட ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்திருக்கிறோம்.
பொதுமக்களின் தாக்குதலில் அவன் காயமடைந்திருப்பதால், வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறான்.
இந்தக் கொடூர வழக்கில், அவனுக்கு விரைவாகக் கடுமையான தண்டனை வாங்கித் தரப்படும்’’ என்றனர்.
இதுபோன்ற கொடூரக் குற்றங்களுக்குக் காரணமாக இருக்கும் போதைப்பொருள் விற்பனைக்கு முடிவு கட்டாதது, காவல்துறைக்கு உறுத்தவில்லையா?</