உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நிறைவுக்கு வந்ததன் பின்னர் வடக்கு, கிழக்கில் ஆட்சி அமைப்பதற்காக தமிழ்த் தேசியக் கட்சிகள் தமக்கிடையில் கூட்டிணைந்து பல்வேறு சுற்றுப்பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தன.
இலங்கைத் தமிழரசுக்கட்சிக்கும், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணிக்கும் இடையிலும், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணிக்கும், தமிழ்த் தேசிய பேரவைக்கும் இடையிலும், இறுதியாக இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும், தமிழ்த் தேசிய பேரவைக்கும் இடையிலும் அப்பேச்சுவார்த்தைகள் நடைபெற்றிருந்தன.
இருப்பினும், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி கோரிய ஆறு சபைகளுக்கான ஆட்சி அதிகாரத்தை தமிழரசுக்கட்சி வழங்குவதற்கு தயாராக இருக்கவில்லை. அதேபோன்று, தமிழ்த் தேசிய பேரவையும் ‘கொள்கை உடன்பாடு’ விடயத்தினை முன்னிலைப்படுத்தியதால் தமிழரசுடன் இணைய முடிந்திருக்கவில்லை.
இவ்வாறான நிலையில் தான் தமிழ்த் தேசிய பேரவையும், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியும் கடந்த 2ஆம் திகதி ‘கொள்கை உடன்பாட்டில்’ கையொப்பமிட்டு கூட்டிணைந்து கொண்டன.
இந்த இணைவின் மூலமாக தமிழ்த் தேசிய பேரவை முன்னிலை வகிக்கும் மூன்று சபைகளிலும், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி ஆதிக்கம் செலுத்தும் ஐந்துக்கு மேற்பட்ட சபைகளிலுமாக ஏறக்குறைய பத்துக்கும் மேற்பட்ட சபைகளில் ஆட்சி அமைக்கும் நிலைமைகள் ஏற்பட்டுள்ளன.
மறுபக்கத்தில் தமிழரசுக் கட்சி முன்னிலை பெற்ற சபைகளில் ஆட்சி அமைக்க முடியாத நிலைகளே தோன்றியிருந்தன.
இவ்வாறான சூழலில் தான் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் கடந்த புதன்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள ஈ.பி.டி.பியின் தலைமையகத்துக்கு நேரில் சென்று யாழ். மாநகர சபை உட்பட தாங்கள் முன்னிலை பெற்ற சபைகளில் ஆட்சி அமைப்பதற்கான ஆதரவினைக் கோரியிருந்தார்.
ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி மற்றும் தமிழ்த் தேசிய பேரவை ஆகியவற்றுடனான பேச்சுக்கள் நடைபெற்ற தருணத்திலேயே சி.வி.கே.சிவஞானம், டக்ளஸுடன் உரையாட ஆரம்பித்திருந்தார். எனினும் அவை உத்தியோகப்பற்றற்ற தொலைபேசி உரையாடல்களாகத் தான் இருந்தன.
இந்நிலையில் இறுதியாக உத்தியோகபூர்வமாக சி.வி.கே.நேரில் சென்று டக்ளஸின் ஆதரவினைக் கோரியிருக்கின்றார். இந்த விடயம் தமிழ்த் தேசிய தளத்திலும், தமிழரசுக்கட்சிக்குள்ளும் பாரிய எதிர்ப்புக்களை தோற்றுவித்துள்ளது.
முன்னதாக, புளொட் தலைவர் சித்தார்த்தன், கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துடன் உடன்பாட்டைச் செய்துவிட்டு, டக்ளஸுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முனைந்திருந்தார். அதனை டக்ளஸே உறுதிப்படுத்தியிருந்தார். எனினும், கஜேந்திரகுமார், சித்தார்த்தன் மீது ‘அன்பாக’ கடிந்து கொண்டமையால் அந்தச் சந்திப்பு நடைபெற்றிருக்கவில்லை.
இதனால், கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ் தேசிய பேரவை, ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி ஆகிய தரப்பின் கூட்டு தப்பிப் பிழைத்துக்கொண்டது. எனினும் அந்தக் கூட்டணியில் சமவத்துவக் கட்சியின் பொதுச்செயலாளர் சந்திரகுமார் பங்கேற்றிருப்பது விமர்சனங்களை உருவாக்கியுள்ளது.
அவர் டக்ஸுடன் இருந்தவர் என்பது ஒரு விமர்சனம். மற்றைய விமர்சனம் சுமந்திரனால் குறித்த கூட்டுக்குள் அனுப்பி வைக்கப்பட்டவர் என்பதாகும். எவ்வாறாயினும், கடுந்தமிழ்த் தேசியம் பேசிய கஜேந்திரகுமார், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியுடன் கூட்டு வைத்துக்கொண்டமை அவரது ஆதரவாளர்களுக்கு மத்தியில் விமர்சனத்தை உருவாக்கியுள்ளது.
குறித்த இணைவை தமிழரசுக்கட்சியின் ஆதரவாளர்கள் மிகமோசமாக வெளிப்படுத்தினார்கள். கடுமையாக விமர்சிக்கவும் செய்தனர். ஈற்றில், தமிழரசுக்கட்சியின் பதில் தலைவர், ஸ்ரீதர் தியேட்டருக்குச் சென்று டக்ளஸை சந்தித்தமை அதனைவிடவும் மோசமான விமர்சனத்தை தோற்றுவித்திருக்கின்றது.
குறித்த சந்திப்புக்குச் செல்வதற்கு முன்னதாக சிவஞானம் சிறிதரன், மூன்று நான்கு தடவைகள் சி.வி.கேயை தொடர்பு கொள்ள முனைந்திருந்தார். ஆனால், முடிந்திருக்கவில்லை. டக்ளஸுடன் சந்திப்பு முடியும் வரையில் அன்றைய நாளில் சி.வி.கே. எவருடைய தொலைபேசி அழைப்புக்கும் பதிலளிக்கவில்லை.
இதனால் குறித்த சந்திப்பில் பங்கேற்க வேண்டாம் என்று குறிப்பிட்டு சிறிதரன் எம்.பி. குறுந்தகவலொன்றை அனுப்பி வைத்துள்ளார். எனினும், சி.வி.கே. சந்திப்பை நிறைவு செய்திருந்தார். அதனைத்தொடர்ந்து சிறிதரனுக்கும், சி.வி.கே.க்கும் இடையில் உரையாடலொன்றும் நடைபெற்றுள்ளது. அது கடும் வாதப்பிரதிவாதங்களுக்கு உள்ளாகியதாக தகவல்.
அதேபோன்று சமூக ஊடகங்களில் சி.வி.கே.யின் செயற்பாட்டிற்கு கடுமையான எதிர்ப்புக்கள் எழுந்தபோது, சுமந்திரனும் சி.வி.கேயுடன் உரையாடல்களைச் செய்துள்ளார்.
இதனையடுத்து நேற்று முன்தினம் ஊடகவியலாளர் மாநாட்டைக் கூட்டி தாங்கள் மத்திய குழுவிலும் அரசியல் குழுவிலும் முன்னிலைபெற்ற சபைகளில் ஆட்சி அமைப்பதற்காக தமிழ்க் கட்சிகளுடன் உரையாடுவதென்று தீர்மானம் எடுத்தோம் (குறித்த கூட்டங்கள் நிறைவடைந்ததன் பின்னர் முன்னிலைபெற்ற சபைகளில் ஆட்சி அமைப்பதற்கு தமிழ்த்தேசியக் கட்சிகளுடன் உரையாடி ஒத்துழைப்பை பெறுவோம் என்றே அறிவிக்கப்பட்டது) என்று ‘தேசியத்தை’ தவிர்த்து சுமந்திரன் மற்றும் சி.வி.கேயால் வியாக்கியானம் வழங்கப்பட்டது,
இதற்குள் சி.வி.கேயின் செயற்பாட்டைக் காட்டமாகக் கண்டித்தும் விளக்கம் கோரியும் சிறிதரன் கடிதமொன்றை அனுப்பி வைத்தார். அதுமட்டுமன்றி, மறைந்த தலைவர் மாவை. சோ.சேனாதிராஜாவின் அனுதாபப் பிரேரணை மீதான உரையின்போது டக்ளஸை கடுமையாக விமர்சித்து கட்சி கொள்கையின் அடிப்படையில் பயணிக்க வேண்டும் என்று உரையாற்றினார்.
இவ்வாறு சுமந்திரன் அணியும், சிறிதரன் தரப்பும் ஏட்டிக்குப்போட்டியாக தாக்குதல்களை நடத்திக்கொண்டிருக்கையில் நேற்று முன்தினம் மாலை 7 மணியளவில் மெய்நிகர் வழியில் தமிழரசுக்கட்சியின் அரசியல்குழுக் கூட்டம் நடைபெற்றது. குகதாசன், கலையரசன் தவி ர்ந்த ஏனையவர்கள் பங்கேற்றார்கள். இதில் சி.வி.கே., டக்ளஸுடன் சந்திப்பை நடத்தியதை சிறிதரன் மிகக் கடுமையாக சாடினார்.
அப்போது, மத்தியகுழு, அரசியல் குழுக்கூட்டத்தின் தீர்மானத்துக்கு அமைவாகவே அவர் சந்திப்பைச் செய்தததாக நியாயம் கற்பிக்கப்பட்டது. எனினும், அவ்வாறு தீர்மானம் எடுக்கப்படவே இல்லை என்று சிறிதரன் சுட்டிக்காட்டினார்.
இதற்குள் சாணக்கியன், கூட்டத்தீர்மானங்களை சிறிதரன் வெளியில் சொல்கிறார் என்று ஆரம்பித்து, மாவையின் இறுதிச் சடங்கிற்கு டக்ளஸ் வந்ததையும், அந்தியேட்டிக்கு வந்ததையும் சுட்டிக்காட்டியதோடு, டக்ளஸ், மாவையை கொல்ல முயன்றார் என்று பாராளு மன்றில் உரையாற்றியதையும் இணைத்து கருத்துக்களை வெளிப்படுத்தினார்.
சிறிதரனைத்தவிர, ஏனையவர்கள் சி.வி.கே. டக்ளஸுடன் உரையாடியது சரியென்ற தொனிப்பொருளில் இருக்கவும் சிறிதரன் தனது நிலைப்பாட்டை கட்சிக்குள்ளும் வெளியிலும் வெளிப்படுத்த உள்ள சுதந்திரத்தினை குறிப்பிட்டு சாணக்கியனுக்கு பதிலடி வழங்கினார்.
இவ்வாறு ஒருவரையொருவர் மாறிமாறி விமர்சனம் செய்து கொண்டிருந்த நிலையில் சுமந்திரன், தமிழரசுக்கட்சி முன்னிலை பெற்ற இடங்களில் மேயர், தவிசாளர் பதவிகளுக்கான வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள் என்று சுருக்கமாகக் கூறி முடித்துவிட்டார்.
இதற்குள், பதவிகளும், ஆசனங்களும் தேவையாக இருந்தால் நாங்களே தருகின்றோம். ஆனால் தமிழ்த் தேசியத்துக்கு விரோதமாக இருக்கின்ற தரப்புடன் இணைய வேண்டாம் என்று கஜேந்திரகுமாரும், செல்வம் அடைக்கலநாதனும் கூட்டாக கோரியுள்ளனர்.
ஆனால் அதற்கு பதிலளிப்பதற்கு தமிழரசுக்கட்சி தயாரில்லை. தற்போது தமிழரசுக்கட்சி ஜனநாயக தமிழரசுக்கட்சியின் பங்காளிக்கட்சியான ஜனநாயக போராளிகள் கட்சியை வளைத்துப்போடுவதற்கு முயற்சித்துக்கொண்டிருக்கின்றது.
இதற்குள் தமிழரசுக்கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர், தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட பொறுப்பாளரும், அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகருடன் உரையாடியதாகவும் தகவல்கள் உள்ளன.
அப்போது இராமலிங்கம் சந்திரசேகர் யாழ். மாநகர சபையை விட்டுத்தாருங்கள் ஏனைய அனைத்திலும் ஆதரவளிக்கின்றோம் என்று நிபந்தனையை போட்டுள்ளார். அதற்குமேல் பேச்சுக்கள் தொடரவில்லையாம் என்றும் கூறப்படுகின்றது.
நாமலை அவசரமாக அழைத்த மஹிந்த
நாமல் ராஜபக் ஷவை அவசரமாக மஹிந்த ராஜபக் ஷ இந்த வாரத்தின் நடுப்பகுதியில் அழைத்துள்ளார். தந்தையின் திடீர் அழைப்பையடுத்து கொழும்புக்கு அண்மித்த பகுதியிலிருந்த நாமல் தடாலடியாக விஜேராமவுக்குச் சென்றுள்ளார்.
அப்போது, ‘உள்ளூராட்சி மன்றங்களில் ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட தரப்புக்கள் ஆட்சி அமைப்ப தற்குரிய சபைகளில் பெரமுனவும் ஆதர வினை வழங்க வேண்டும். இந்த விடயத்தில் பேச்சுக்களை நடத்துவதையோ, ஊடகங்களில் கருத்துக் களை வெளியிடுவதையோ தவிர்த்து சரியாக காய்களை நகர்த்த வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளார்.
அப்போது, நாமல் ராஜபக்ஷ ‘நாங்கள் எதிர்ப்புக்களை வெளியிடப்போவதில்லை. நீங்கள் கூறியதன் படியே செய்கின்றோம்’ என்று பதிலளித்துள்ளார்.
அப்போது மஹிந்த புன்னகையுடன், ‘நீங்கள் வேலைப்பளுவுடன் இருப்பீர்கள் சென்று வாருங்கள்’ என்று அனுப்பி வைத்துள்ளார்.
ரணிலின் இராஜயோகம்
அண்மையில் விருந்துபசாரமொன்றுக்கு சென்றிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்க்கட்சியில் உள்ள சில உறுப்பினர்களுடன் உரையாடிக்கொண்டிருந் தார்.
அப்போது அங்கு வருகை தந்திருந்த, தொழிலதிபர் ஒருவர், ‘சேர் எப்படியிருக்கின்றீர்கள். நீங்கள் ஜனாதிபதியாகிய அனுபவத்தை ஒரு தடவை கூறுங்கள்.அதனை நான் உங்களிடமிருந்து கேட்க வேண்டும் என்று ஆசைப்படுகின்றேன் ’என்றார் பீடிகையுடன்.
அப்போது, ரணில் விக்கிரமசிங்க, ‘அதுவொரு நீண்ட கதை. இப்போது கூற முடியாது. ஆனால் ஒரு சிறு விடயத்தினை பகிருகின்றேன். நான் ஜனாதிபதியாவதற்கு முன்னர் எனக்கு இராஜயோகம் இருக்கின்றது என்று ஜோதிடர் ஒருவர் சொன்னார். அப்போது நான் அவரிடம் தேர்தல் அண்மைக்காலங்களில் இல்லையே என்றேன். அச்சமயத்தில் அவர் நீங்கள் தேர்தல் மூலமாக ஜனாதிபதியாகப் போவதில்லை என்றார்.
அதேபோல் தான் இறுதியில் நடந்து முடிந்தது. நான் தேர்தலுக்குச் செல்லாமல் ஜனாதிபதியாகி விட்டேன் என்றார். அதன்போது குறித்த தொழிலதிபர், அந்த இராஜயோகம் இன்னமும் இருக்கிறதோ தெரியவில்லை என்று கேள்வியொன்றை தொடுத் தார்.
அப்போது ரணில் விக்கிரமசிங்க புன்னகையுடன், நான் மீண்டும் அந்த ஜோதிடரிடம் செல்லவில்லை. ஆனால் அரசாங்கம் போகின்ற போக்கைப் பார்க்கின்றபோது அந்த இராஜயோகம் நிறைவடையவில்லை என்றே கருதுகின்றேன் என்று கூறவும் அங்கிருந்தவர்கள் ‘கொல்’ என்று சிரித்தனர்.
கொள்கலன்கள் விவகாரம்
கொழும்புத் துறைமுகத்திலிருந்து எவ்வித பரிசோதனைகளும் இன்றி சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்த கொள்கலன்கள் விடுவிக்கப்பட்ட சர்ச்சை தொடர்பில் பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் அரசாங்கத்தின் மௌனமே, அனைவரது அவதானத்தையும் ஈர்த்துள்ளது. யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான இராமநாதன் அர்ச்சுனா இது தொடர்பில் புதிய கருத்தொன்றை பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். குறித்த கொள்கலன்களில் பிரபாகரனின் ஆயுதங்கள் இருந்ததாகவும், அவை தாய்லாந்திலிருந்து கொண்டு வரப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறிருப்பினும், இந்த கொள்கலன்கள் குறித்து விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையில், சமூகத்தில் கூறப்படுவதைப் போன்று பாரதூரமான பொருட்கள் எவையும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ரணிலுக்கு தகவல் கிடைத்திருக்கிறது.
இது தொடர்பில் முறைப்பாடளித்திருந்த தொழிற்சங்கத்தையும் அரசாங்கம் தன்வசப்படுத்தியுள்ளது. எவ்வாறிருப்பினும் எதிர்காலத்திலும் இந்த விவகாரம் தொடர்பில் தொடர்ந்தும் கேள்வியெழுப்ப எதிர்க்கட்சிகளின் கூட்டணி தீர்மானித்துள்ளது.
புலிகளின் ஆயுதங்கள்
கொழும்பு துறைமுகத்திலிருந்து எவ்வித சோதனைகளுமின்றி விடுவிக்கப்பட்ட கொள்கலன்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் ஆயுதங்களே காணப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்திருந்தார்.
எனினும் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ள இந்த விடயம் முற்றிலும் ஆதாரமற்றதாகும், அத்தகைய குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதற்கு எவ்வித ஆதரமும் இல்லை.
தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய விடயங்களை இவ்வாறு அரசியலாக்கவோ அல்லது தவறாக சித்தரிக்கவோ கூடாது. துறைமுகத்தில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக 323 கொள்கலன்கள் எவ்வித சோதனைகளும் இன்றி விடுவிக்கப்பட்டதாக பாதுகாப்பு செயலாளர் சம்பத் துய்யகொந்த மறுத்திருந்தார்.
ஆனால், குறித்த கொள்கலன்கள் சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டவை என்றும், அவற்றில் அபாயகரமான பொருட்கள் காணப்பட்டதாகவும் பல தரப்பினராலும் தெரிவிக்கப்பட்டது.
அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர மற்றும் பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில ஆகியோர் இது தொடர்பில் தெரிவித்திருந்த கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தன.
தயாசிறி ஜயசேகர கடந்த புதன்கிழமை இவ்விடயம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலமளித்திருந்தார். இந்நிலையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இவ்வாறானதொரு விடயத்தை வெளியிட்டுள்ளார்.
ஜனாதிபதி பதில்
பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்த இந்த கருத்து தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை.
மாறாக ஊடகம் ஒன்று கேட்ட கேள்விக்கு சிறு விளக்கத்தை மாத்திரமே குறிப்பிட்டிருந்தது. இது குறித்து பாதுகாப்பு அமைச்சில் கேட்ட போது, உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி இதுவரையில் தீர்மானிக்கவில்லை என்று குறிப்பிட்டனர்.
இது இவ்வாறிருக்க மறுபுறம், ‘அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சிறைக்கு சென்றிருக்க மாட்டார்கள்’ என்று மொறட்டுவையில் கடந்த வாரம் நீதி அமைச்சர் தெரிவித்த கருத்து, எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பல தரப்பினர் மத்தியிலும் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. அவரது இந்த கருத்தானது நீதித்துறையின் சுதந்திரத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட ஒரு பாரிய தாக்குதலாகும் என்றும் பலராலும் விமர்சிக்கப்படுகிறது.
எதிர்க்கட்சிகளின் ஒன்றிணைவு
உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சி உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஆரம்பமானவுடன், சிதறிக் கிடந்த எதிர்க்கட்சிகள் மீண்டும் ஒன்றிணைந்ததை அவதானிக்க முடிந்தது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சியமைத்து ஆறு மாதங்கள் என்ற குறுகிய காலத்துக்குள் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்த திறன், கூட்டு எதிர்க்கட்சியின் திறமையால் கூட்டணி அடைந்த சாதனையாகும் என அரசியல் விமர்சகர்கள் நம்புகின்றனர்.
எதிர்க்கட்சிகளின் இந்த ஒன்றிணைந்த கூட்டணிக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே மூலகர்த்தா ஆவார். இக்கூட்டணி பலம் பெற, அதன் பின் இருந்து உழைத்தவரும் அவர்தான்.
முதன் முதலாக ஐக்கிய தேசியக் கட்சி இந்த எதிர்க்கட்சிகளின் கூட்டணியை ஆரம்பித்தது. அதன் பின்னர் படிப்படியாக ஏனைய அனைத்துக் கட்சிகளும் ஐ.தே.க.வைச் சுற்றித் திரண்டன. இதன் ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கொழும்பிலுள்ள தனிப்பட்ட அலுவலகத்தில் இடம்பெற்றது.
ரணில் இதற்காக ஒரு புதிய அணியை முன்னிறுத்தி, அதனை வழிநடத்தினார். அவரால் முன்னிறுத்தப்பட்ட அந்த அணியிலிருந்தோர் தமக்கு ஒதுக்கப்பட்ட பணியை மிகச் சிறப்பாகச் செய்தனர்.
தற்போது பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தரப்பிலிருந்து பல புதிய குரல்கள் பலம் மிக்கவையாக முன்னிலை வகிக்கின்றன. நாமல் ராஜபக் ஷ, சாமர சம்பத், டி.வி.சானக மற்றும் தயாசிறி ஜயசேகர ஆகியோர் இதில் உள்ளடங்குகின்றனர் என்பதே அரசியல் விமர்சகர்களின் ஒருமித்த கருத்தாகவுள்ளது.
இந்நிலையில் எதிர்க்கட்சியிலிருந்து இந்த வலுவான குரல்கள் தோன்றியதன் ஊடாக, பாரம்பரிய எதிர்க்கட்சித் தலைவராகவே செயற்பட்டுக் கொண்டிருக்கும் சஜித் பிரேமதாசவின் பதவிக்கான வகிபாகம், நீர்த்துப்போகச் செய்யப்பட்டுள்ளமை சகலருக்கும் தெளிவாகத் தெரிகிறது.
உள்ளூராட்சி சபைகளுக்கான பிரதிநிதிகளை நியமிப்பதில் முக்கிய பங்கு வகித்த, ரணில் விக்கிரமசிங்கவால் நியமிக்கப்பட்ட குழு உறுப்பினர்களிடம் கட்சியின் எதிர்காலப் பணிகளை வழிநடத்தும் பொறுப்பையும் ஒப்படைக்க ரணில் தீர்மானித்துள்ளார். இந்த புதிய குழுவானது ஐ.தே.க.வின் எதிர்காலத்துக்கான திட்டமிடல்களை தயாரிக்கும் பணிகளையும் முன்னெடுக்கவுள்ளது. இந்தக் குழு ஒரு அணியாக செயல்படும்.
ரணிலுக்கு எதிராக சதியா?
இந்தப் புதிய குழுவின் செயற்பாடுகள் குறித்து கட்சியின் பல மூத்த தலைவர்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளதாகவும் தெரியவருகிறது. எந்த பணிகளை முன்னெடுத்தாலும், இதுபோன்ற சில பழமைவாதிகள் கட்சி நவீனமாக மாறுவதை விரும்பவில்லை என்று ரணிலுக்கு தகவல் கிடைத்திருக்கிறது.
இந்த நவீனமயமாக்கலுக்கு எதிராக அவர்கள் பல்வேறு சதித் திட்டங்களில் ஈடுபட ஆரம்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மூத்த உறுப்பினர்கள் சிலர் கட்சியில் தமக்கான இடத்தை இழந்து விடுவோம் என்ற அச்சத்தினாலேயே இவ்வாறு புதியவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதை எதிர்க்கின்றனர்.
அடுத்த வாரம் ஐ.தே.க. தலைமையகமான சிறிகொத்தாவில் கட்சியின் சிறப்பு செயற்குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த செயற்குழுக் கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் இந்த சிக்கல் தொடர்பாக சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளார்.
எதிர்க்கட்சிகள் பெரும்பான்மையைப் பெற்றுள்ள உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் இது குறித்த பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
‘நாய்களை குளிப்பாட்டுவதற்கு அழைத்துச் செல்வதைப் போன்று, விருப்பமில்லாமல் தான் சஜித் இந்த பேச்சுவார்த்தைகளில் பங்கேற்கின்றார்’ என பல எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கூறினர்.
ஆரம்பத்தில் இந்த பேச்சுவார்த்தைகளிலிருந்து விலகி இருக்க முயன்ற சஜித் பிரேமதாசவுக்கு, பின்னர் வேறு எதுவும் செய்வதற்கு வழியின்றி பேச்சுவார்த்தைகளில் பங்கேற்க வேண்டியேற்பட்டது.
ஆனால், ரணில் அந்தப் பேச்சுவார்த்தைகள் எதிலும் பங்கேற்காமலிருப்பதற்கு தீர்மானித்துள்ளார். எனினும் அவரது அனுமதியுடனும் வழிகாட்டலுடனும் அவரால் நியமிக்கப்பட்ட குழு பேச்சுவார்த்தைகளை சிறப்பாக முன்னெடுத்துச் செல்கின்றது. இவற்றுக்கு மத்தியில் கட்சிகளுக்கு இடையில் பேச்சுவார்த்தையின் போது எழுந்த பிரச்சினைகள் குறித்து சம்பந்தப்பட்ட கட்சிகளுடன் பேசித் தீர்ப்பதற்கு ரணில் நடவடிக்கை எடுத்திருந்தார்.