கடும் பொருளாதார நெருக்கடியில் பிரிட்டன் நாடு சிக்கிக்கொள்ள, `உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடு’ என்ற பட்டம் இந்தியாவுக்குக் கிடைத்தது.

தற்போது, ஜப்பானின் பொருளாதாரம் சுருங்கிக்கொண்டிருக்கும் நிலையில், `நான்காவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறிவிட்டது’ என்று அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது நிதி ஆயோக்! (NITI Aayog )

உண்மையிலேயே ஜப்பானின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி) மதிப்பை இந்தியா முந்திவிட்டதா… இந்தியர்களின் வாழ்க்கைத்தரமும், தனிநபர் வருமானமும் பா.ஜ.க ஆட்சியில் உயர்ந்திருக்கின்றனவா?

`ஜப்பானை முந்திவிட்டோம்!’

நிதி ஆயோக் அமைப்பின் தலைமைச் செயல் அதிகாரி பி.வி.ஆர்.சுப்பிரமணியம், “நாம்தான் உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடு.

என்னுடைய தரவுகளைவைத்து இதை நான் சொல்லவில்லை. சர்வதேச நாணய நிதியத்தின் (ஐ.எம்.எஃப்) தரவுகளின்படி இந்தியா, ஜப்பானைவிடப் பெரிய பொருளாதார நாடாக மாறிவிட்டது’’ என்று செய்தியாளர் சந்திப்பைக் கூட்டி அறிவித்தார்.

மேலும், “அமெரிக்கா, சீனா, ஜெர்மனி மட்டுமே இந்தியாவைவிடப் பெரிய பொருளாதார நாடுகளாக இருக்கின்றன. நாம் திட்டமிட்டபடி சரியாக முன்னேறிச் சென்றால், மூன்று ஆண்டுகளில் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாறிவிடலாம்’’ என்றார்.

இந்த அறிவிப்பு வெளியானவுடன், பிரதமர் மோடியும், மத்திய அமைச்சர்களும் மார்தட்டிக்கொள்ளத் தொடங்கிவிட்டனர்.

பா.ஜ.க ஆதரவாளர்கள், பிரதமர் மோடியை வெகுவாகப் பாராட்டித் தள்ளினர். இப்படியாகக் கொண்டாட்டங்கள் ஒருபுறமிருக்க, இதையொட்டி காரசார விவாதங்களும் நாடு முழுவதும் கிளம்பியிருக்கின்றன.

`ஐ.எம்.எஃப் தரவே, அரசின் தரவுதான்!’

ஐ.எம்.எஃப் கணிப்புப்படி 2026-ல், இந்தியாவின் ஜி.டி.பி மதிப்பு 4,187.017 பில்லியன் (4 ட்ரில்லியன்) அமெரிக்க டாலரை எட்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதே ஆண்டில், ஜப்பானின் ஜி.டி.பி 4,186.431 பில்லியன் அமெரிக்க டாலராக இருக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.

அதாவது ஐப்பானின் ஜி.டி.பி-யைவிட, இந்தியாவின் ஜி.டி.பி மதிப்பு, 0.586 பில்லியன் அமெரிக்க டாலர் அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.

இது, `2026 நிதியாண்டின் இறுதிக்கான கணிப்பு’ என்கிறது ஐ.எம்.எஃப். (The International Monetary Fund (IMF)

ஆனால், 2025-ம் நிதியாண்டிலேயே ஜப்பானை முந்திவிட்டதாக அறிவித்து, குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறார் சுப்பிரமணியம்.

இந்த நிலையில், பி.டி.ஐ செய்தி ஊடகத்துக்குப் பேட்டியளித்த நிதி ஆயோக் உறுப்பினர் அர்விந்த் விர்மானி, “இந்தியா, நான்காவது பெரிய பொருளாதார நாடாக மாறும் முயற்சியில் இருக்கிறது. இந்த ஆண்டின் 12 மாத ஜி.டி.பி தரவுகளைக்கொண்டே நாம் நான்காவது இடத்துக்கு முன்னேறிவிட்டோமா என்பதை உறுதிப்படுத்த முடியும்.

2025-ம் ஆண்டின் இறுதிக்குள் இந்தியா நான்காவது இடத்தை அடையும் என நம்புகிறேன்’’ என்று தெரிவித்திருக்கிறார்.

`இந்தியா’ கூட்டணியைச் சேர்ந்தவர்களோ, “நாட்டில் நிலவும் பிரச்னைகளையும், அரசு மீதான அதிருப்தியையும் திசைதிருப்பவே இந்த விஷயத்தை இப்போது அறிவித்திருக்கிறது மத்திய அரசு.

ஐ.எம்.எஃப் அமைப்பு, தாமாக முன்வந்து தரவுகளைச் சேகரிக்கும் அமைப்பல்ல. அந்தந்த நாடுகள் கொடுக்கும் பொருளாதாரத் தரவுகளைக்கொண்டே ஜி.டி.பி கணிப்புகளை வெளியிடுகிறது.

தரவுகளைத் தவறாக வெளியிட்டு, எண் கணித விளையாட்டில் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் மத்திய அரசு, ஐ.எம்.எஃப்-க்கும் தவறான தரவுகளைக் கொடுத்திருக் கலாம்’’ என்று சந்தேகம் கிளப்புகின்றன.

காங்கிரஸ் தலைவர் பவன் கேரா, “எண்களைவைத்து பா.ஜ.க அரசு விளையாடிக் கொண்டிருக்கும் அதே சூழலில், 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலைவாய்ப்பின்மை உச்சம் தொட்டிருக் கிறது.

ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்குமான இடைவெளி அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இ.எம்.ஐ-களோடு மிடில் கிளாஸ் மக்கள் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.

சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் மூழ்கிக் கொண்டிருக்கின்றன. ஐந்தாறு பணக்காரர்களின் செல்வத்தை மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டு, தரவுகளை வெளியிடுகிறது மத்திய அரசு.

இந்தியா நான்காவது இடத்தை எட்டிவிட்டதாகச் சொல்லிக் கொண்டாடும் பிரதமர் மோடி, நம் நாட்டின் தனிநபர் வருமானம் குறித்து வாய் திறக்கவே மாட்டார்’’ எனக் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

இந்தியா Vs ஜப்பான்: தனிநபர் வருமானம்!

தற்போதைய நிலவரப்படி, இந்தியாவின் தனிநபர் வருமானம், ஆண்டுக்கு சுமார் 2 லட்சம் ரூபாய்.

அதுவே ஜப்பானின் தனிநபர் வருமானம், சுமார் ரூ. 29 லட்சத்தைத் தாண்டுகிறது. பொருளாதார வல்லுநர்கள் சிலர், “ஜப்பான் பொருளாதாரத்தை நாம் எட்டிப் பிடித்துவிடவில்லை.

அவர்களது பொருளாதாரம் சரிந்துகொண்டே வந்ததன் பலனாக, நாம் அதை முந்திச் செல்லவிருக்கிறோம்.

`எதிர்வரும் நிதியாண்டில், ஜப்பானின் ஜி.டி.பி-யை விட இந்தியாவின் ஜி.டி.பி 0.586 பில்லியன் அமெரிக்க டாலர் அதிகமாக இருக்கும்’ என்று கணித்திருக்கிறது ஐ.எம்.எஃப்.

அதாவது, ஜப்பானைவிட 0.014% ஜி.டி.பி அதிகம். அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, உலகப் பங்குச் சந்தைகள் ஆட்டம் கண்டிருக்கின்றன.

உலகப் பொருளாதாரத்திலும் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில், `0.014%’ என்ற கணிப்பு நடக்காமல் போகவும் வாய்ப்பிருக்கிறது’’ என்கிறார்கள்.</

`பொறாமைப்படும் எதிர்க்கட்சிகள்!’

பா.ஜ.க நிர்வாகிகளோ, “இந்தியா நான்காவது பெரிய பொருளாதார நாடானதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் பொய்யைப் பரப்பிக்கொண்டிருக்கிறது

காங்கிரஸ். பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியா உறுதியான வளர்ச்சியைப் பெறுவது, எதிர்க்கட்சிகளைப் பொறாமையில் ஆழ்த்தியிருக்கிறது.

எனவேதான், மக்கள்தொகை மிக மிகக் குறைவாக இருக்கும் நாடுகளின் சராசரி தனிநபர் வருமானத்தையும், 140 கோடி மக்கள்தொகை கொண்ட இந்தியாவின் தனிநபர் வருமானத்தையும் ஒப்பிட்டு உளறிக்கொண்டிருக்கின்றன. `

மூன்றாவது முறை பிரதமரானால், இந்தியாவை மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக்குவேன்’ என்று வாக்குறுதியளித்திருந்தார் பிரதமர் மோடி.

அதை நிச்சயம் விரைவில் நிறைவேற்றிக் காட்டுவார்’’ என்கின்றனர் உறுதியாக.

`மத்திய அரசின் சாதனைகள்’ என்று பா.ஜ.க-வினர் பல்வேறு விஷயங்களை அடுக்கினாலும், இந்தியாவுக்கு வந்துகொண்டிருந்த நிகர அந்நிய நேரடி முதலீடுகள், கடந்த நிதியாண்டைவிட இந்த (2024 – 2025) நிதியாண்டில் 96% சரிவைச் சந்தித்திருப்பதாகச் சொல்கிறது மத்திய ரிசர்வ் வங்கி.

அதேபோல, இந்திய மக்கள் நகைகளை அடகுவைத்து கடன் வாங்குவதும் அதிகரித்திருப்பதாகச் சொல்கிறது.

இந்திய மக்கள்தொகையில் 10% பேர்தான் இந்தியாவின் 73% சொத்துகளை வைத்திருப்பதாகச் சொல்கின்றன OXFAM நிறுவனத்தின் தரவுகள்.

இந்தத் தரவுகளையெல்லாம் ஒருபோதும் கணக்கில் எடுத்துக்கொள்ளாத மோடி அரசு, அவர்களது சொந்தத் தரவுகளைக் கொண்டே வாதங்களை முன்வைத்துக் கொண்டிருக்கிறது. எதிர்வாதங்கள் முன்வைக்கப்படும்போது, அவற்றைச் சிறிதும் கண்டுகொள்வதில்லை

2010-ம் ஆண்டில், 6 ட்ரில்லியன் அமெரிக்க டாலரைத் தொட்டிருந்த ஜப்பானின் பொருளாதாரம், தற்போது, 4.18 ட்ரில்லியன் அமெரிக்க டாலராகச் சுருங்கியிருக்கிறது.

ஜப்பானில் வயதானவர்களின் மக்கள்தொகை கூடிக்கொண்டே சென்றதன் விளைவாக, அங்கு உற்பத்தித்துறை தேக்கமடைந்தது.

அதுதான், அந்த நாட்டின் ஜி.டி.பி சரிவுக்குக் காரணமாக அமைந்தது.

அதுவே இந்தியாவில் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், பொருளாதார மந்தநிலையிலும் ஜி.டி.பி ஓரளவு வளர்ச்சி பெற்றுவருகிறது.

மத்திய அரசு, புதிய வேலைவாய்ப்புகளையும், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சித் திட்டங்களையும் உருவாக்கி, இந்திய இளைஞர் சக்தியைச் சரியாகப் பயன்படுத்த வேண்டும். அப்படிச் செய்தால், ஆரோக்கியமான முறையில், `மூன்றாவது பெரிய பொருளாதார நாடு’ என்ற பெருமையை விரைவில் இந்தியா நிச்சயம் அடையும்!

Share.
Leave A Reply