உக்ரைன்- – ரஷ்யப் போர் புதிய பரிமாணம் எடுத்துள்ளது. ஒருபுறம் சமாதான உரையாடல்கள்; அதற்கான முயற்சிகளும் அமைய மறுபக்கத்தில் உக்ரைன் தொடக்கிவைத்துள்ள போர் பரஸ்பரம் இரு நாடுகளையும் தீவிரப் போரை நோக்கித் தள்ளியிருக்கிறது.
ஐரோப்பியர்களுக்காக உக்ரைனியர்கள் கொல்லப்படுகின்ற ஒரு வரலாற்று துயரம் ஜெலன்ஸ்கியின் தலைமையில் நிகழ்ந்து வருகிறது.
இது கிழக்கு ஐரோப்பிய நாடுகள் அனைத்துக்குமான அனுபவமாகவும் அரசியலாகவும் மாறிவிட்டது.
இதன் பின்தளங்கள் முழுவதும் மேற்குலகமும் அமெரிக்காவும் சேர்ந்ததாகவே பார்க்கப்படுகிறது.
இஸ்ரேலின் காசா மீதான தாக்குதலுக்கு எதிரான பாதுகாப்பு சபையில் முன்வைக்கப்பட்ட தீர்மானத்தை அமெரிக்கா தனது வீட்டோவை பாவித்து தடுத்துள்ளது.
டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசாங்கம் வெளிப்படுத்தும் சமாதானம் எதுவென்பது தெளிவாக தெரிகிறது.
அத்தகைய பார்வைக்குள்ளேயே உக்ரைன் விவகாரமும் சமாதான முயற்சிகளும் காணப்படுகிறன. இரு நாடுகளது போர் உத்திகளும் எல்லா சமாதான வாய்ப்புகளையும் தகர்த்து வருகிறது.
இக்கட்டுரையும் உக்ரைன்- ரஷ்ய போரின் அண்மையாக மாற்றங்களை அவதானிப்பதுடன் அதன் விளைவுகளை தேடுவதுமாக உள்ளது.
கடந்த 04.06.2025 அன்று ரஷ்யாவின் இராணுவ இலக்குகளை குறிவைத்து பாரிய தாக்குதலை நடத்தியது உக்ரைன். ஆளில்லா விமானங்களும் ஏவுகணைகளும் ரஷ்யாவின் எல்லைக்குள் நகர்ந்து தாக்குதலை நடத்தியதோடு ரஷ்யாவின் 41 போர் விமானங்களை அழித்துள்ளதாக உக்ரைன் தெரிவித்திருந்தது.
அதனை மேற்குலக ஊடகங்கள் செயற்கைக்கோள் படங்கள் மூலம் உறுதி செய்துள்ளதாக தெரிவித்துள்ளன. அந்த அளவுக்கு உக்கரைனின் தாக்குதல் அமைந்திருந்தது.
1967ஆம் ஆண்டு இஸ்ரேலுக்கு எதிரான போரை அரேபிய நாடுகள் திட்டமிட்ட போது இதே போன்ற தாக்குதலை எகிப்திய இராணுவ தளங்கள் மீது இஸ்ரேலிய இராணுவம் மேற்கொண்டிருந்தது.
அதன் மூலம் அந்தப் போரை முறியடிக்க இஸ்ரேலியர் திட்டமிட்டிருந்தனர். அவ்வாறான ஒரு நகர்வை இந்தப் போரில் உக்ரைன் திட்டமிட்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவித்துவருகின்றன.
ஆனால் அத்தகைய சூழலை ரஷ்யா எதிர் கொள்ளும் நிலையிலேயே உக்ரைனின் நடவடிக்கை உள்ளது.
எகிப்தைப் போன்று போரை தலைகீழாக மாற்றுமா உக்ரைன் தாக்குல் என்பது கேள்விக்குரியதே. காரணம் ரஷ்யா பலமான ஆயுத தளபாடங்களை தயார் செய்யும், ஏற்றுமதி செய்யும் நாடு என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
தொடர்ச்சியாக அதன் பதில் தாக்குதல் மிகத் தீவிரமாக அமையும் என்று ஆரம்பத்திலிருந்தே ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் எச்சரித்திருந்தார்.
அப்படியான சூழலில் உக்ரேனின் நடவடிக்கை சமாதான பேச்சுக்களை முற்றாகவே சீர்குலைக்கும் விதத்தில் அமைந்திருக்கின்றது.
இதற்கான பதிலை 07.06.2025 அன்றைய தினம் ரஷ்யா திருப்பி தாக்குவதன் மூலம் சிலந்தி வலைத் தாக்குதலை முறியடிக்கும் திட்டத்தை தொடங்கியுள்ளது.
உக்ரைன் பிராந்தியங்கள் முழுவதும் 400க்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்களும் 50க்கும் மேற்பட்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் குறுகிய தூர ஏவுகணைகளும் ரஷ்யாவால் பயன்படுத்தப்பட்டு தாக்கப்பட்டுள்ளது. இது உக்ரைனுக்கு பாரிய அழிவுகளை ஏற்படுத்தியிருப்பதாக உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ரஷ்யா தம்மை தாக்கியுள்ளதாக குறிப்பிடுகின்ற ஜெலன்ஸ்கி ஏற்கனவே ரஷ்யா மீதான தாக்குதலை நடத்திய போதும் அதன் வெற்றியை உலகம் முழுவதும் காண்பித்திருந்தார். மீளவும் அதற்கான பதில் தாக்குதலை எதிர்கொள்ள முடியாது திணறுகின்றார்.
தற்போது ஜெலன்ஸ்கி முன்வைக்கும் விவாதம் ரஷ்யா பொதுமக்களைத் தாக்கி அழித்துள்ளது எனவும் தாம் இராணுவ இலக்குகளை மட்டுமே தாக்கியதாகவும். இவ்வாறான விவாதத்திற்கு பதிலளிக்கும் விதத்தில், ரஷ்ய தரப்பு, உக்ரைன் ரஷ்யப் பொதுமக்கள் மீதான தாக்குதலை பட்டியலிட்டுள்ளது.
போர் என்ற வரையறைக்குள் பொதுமக்களும் உள்ளடங்குவர், என்பதை ஜெலன்ஸ்கி அறியாதவராக இருப்பதே வினோதமாக உள்ளது.
இது பரஸ்பரம் போரை நீடிப்பதற்கான நடவடிக்கையாகவே தெரிகிறது. அதற்கான உபாயங்களை உக்ரைனே வகுத்துச் செல்வதாகவே தெரிகின்றது. இதனாலேயே உக்ரைனா அல்லது மேற்கு ஐரோப்பாவா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதனை விரிவாக நோக்குதல் அவசியமானது.
முதலாவது உக்ரைன் தரப்பு தாக்குதலில் சமாதான முயற்சிகளை முற்றாகவே நிராகரிக்கும் விதத்தை நிகழ்த்தியிருந்தது என்பது ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய ஒன்றாக உள்ளது.
காரணம் உக்ரைன்- – ரஷ்ய பிரதிநிதிகள் துருக்கியில் சமாதான உரையாடலை மேற்கொண்டிருக்கின்ற போது ரஷ்யா போர் விமானங்களை உக்ரைன் தாக்கி அழித்துள்ளது. எனவே இந்த போரை முடிவுக்கு கொண்டு வருகின்ற நோக்கம் உக்ரைன் தரப்பிடம் இல்லை என்பது மட்டுமன்றி ஐரோப்பிய தரப்பிடமும் இல்ல என்பதை உணர்த்தப்படுகின்றது.
உக்ரைன் தாக்குதலுக்கு பின்னூட்டமாக மேற்கு ஐரோப்பாவே இருந்துள்ளது. இதனை ஜெர்மனிய சான்சலரின் கூற்று உணர்த்துகிறது.
அதாவது ரஷ்யாவின் இராணுவ மறுசீரமைப்பு பிரசாரத்தின் அளவை அமெரிக்க சட்டமன்ற உறுப்பினர்கள் புரிந்து கொள்ளவில்லை.
ரஷ்யாவுக்குள் என்ன நடக்கின்றது என்று அவர்களுக்கு முழுமையாக தெரியாதுள்ளது என்று டொனால்ட் ட்ரம்புக்கு தெரிவித்திருந்தார்.
ஐரோப்பாவை பொறுத்தவரை ரஷ்யாவின் எழுச்சியும்; மேற்கு ஐரோப்பிய நலன்களை பாதிப்பதாகவே அமையும் என்ற அச்ச உணர்வே பிரதான காரணமாகும்.
அதனால் ரஷ்யாவைப் பலவீனப்படுத்த உக்ரைனையும் அதன் மக்களையும் அதனுடைய உட்கட்டமைப்புகளையும் முழுமையாக பிரயோகித்து நெருக்கடியை கொடுப்பது என்பது பிரதான நோக்கமாக உள்ளது.
அத்தகைய நோக்கத்தை அடையும் விதத்தில் ஐரோப்பியர்கள் ஆயுதங்களையும் பொருளாதார உதவிகளையும் வழங்குவதில் கவனம் செலுத்துகின்றனர்.
அமெரிக்கா வெளியேறிய பின்னர் உக்ரைனது இருப்பையும் அதன் பொருளாதாரத்தையும் ஐரோப்பிய நாடுகளில் நிவர்த்தி செய்து வருகின்றனர். எனவே தற்போது ஐரோப்பாவுக்காகவும் உக்ரேனியர்கள் போரிடுகின்றனர். ஐரோப்பாவின் நலன்களை பாதுகாக்கும் நிகழ்ச்சிக்குள் உக்ரைன் விளங்குகிறது.
இரண்டாவது ரஷ்யர்களைப் பொறுத்தவரை இப்போர் கிழக்கு ஐரோப்பா நோக்கிய மேற்கு ஐரோப்பாவின் படையெடுப்பையும் மேற்குலகத்தின் விஸ்தரிப்பையும் முறியடிப்பதே அதன் பிரதான நோக்கமாக உள்ளது.
அதிக தேசிய இனங்களையும் தேசிய பிரச்சினையையும் தேசிய அரசுகளையும் அதிகம் கொண்டுள்ள கிழக்கு ஐரோப்பா மீது அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் அதிக கவனம் கொண்டு மேலாதிக்கம் செய்யத் திட்டமிடுகின்றன.
அதற்கான அடிப்படைக் காரணம் ரஷ்யா இருதய நிலம் என்பதாகும். அத்தகைய இருதய நிலத்தின் மீது எப்போதும் கவனம் கொள்ள வேண்டும் என்பதும் அதற்கான அடிப்படை அது எப்போதும் உலகத்தில் எழுச்சி பெறக் கூடிய சக்தியாக மாறும் வலுவை கொண்டது என்றும் அளவீடு செய்துள்ளனர்.
இதனால் ரஷ்யாவும் அதன் பிராந்திய அரசுகளும் பாரியளவிலான பொருளாதார வளர்ச்சியையோ இராணுவ வளர்ச்சியையோ அடைந்துவிடக் கூடாது என்பதில் கவனமும் கரிசனையும் கொண்டவர்களாக ஐரோப்பியர்கள் காணப்படுகின்றார்.
ஆனால் ரஷ்யாவை பொறுத்தவரை இப்போர் பிராந்தியத்தை ரஷ்யாவுக்கு ஏற்ற வகையில் வடிவமைப்பதும் மேற்குலகத்தின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டுவருவதும் மேற்கு ஐரோப்பாவும் அமெரிக்காவும் மேற்கொள்ளும் அனைத்து உத்திகளையும் தகர்த்து அழிப்பதும் என்றும் திட்டமிட்டுள்ளது.
தனது பொருளாதார இருப்புகளையும் முன்னே சோவியத் யூனியனின் இருப்பையும் தகர்த்தெறிந்த மேற்குலகத்தை மீளவும் எதிர்கொள்ள ரஷ்யா ஒரு வலுவான இராணுவ ஆயுத தளபாடங்களைக் கொண்ட அரசு என்ற அடிப்படையில் செயற்படுகிறது.
அது தற்போது உக்ரைன் மீது ஏற்படுத்தியுள்ள இருக்கின்ற தாக்குதல் என்பது ஒரு ஆரம்பமே என ரஷ்ய ஊடகங்கள் கருத்து முன்வைக்கின்றன.
தாக்குதல் தொடர்வதற்கான வாய்ப்பிருப்பதாகவும் உக்ரேனியர்கள் அச்சமடைகின்றனர். ஆனால் இத்தாக்குதலுக்கான அடிப்படையை தோற்றுவித்தவர்கள் உக்ரேனியர்கள் என்பது நன்கு தெரிந்த விடயம்.
உக்ரேனிய பொது மக்கள்; ஊடகங்கள் முன் பேசும்போது மோசமான தாக்குதலுக்கு உக்ரைன் அரசாங்கமே வழிவகுத்துள்ளது என்ற குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.
மேற்கு ஊடகங்களும் உலகளாவிய ரீதியான ஊடகப் பரப்பும் உக்ரைன் மீதான குற்றச்சாட்டுகளை அதிகப்படுத்துகின்றன. குறிப்பாக சமாதான உரையாடல் நிகழ்ந்து கொண்டிருக்கும் போது தாக்குதலை நிகழ்த்தியதை விமர்சிக்கின்றன.
எனவே இப்போது சமாதானப் பேச்சுவார்த்தை என்பது போரை நீடிப்பதாகவே உள்ளது. மேற்கு உலக நாடுகள் தம்மை பாதுகாத்துக் கொள்ள இத்தகைய போர் அவசியமெனக்கருதுகின்றன. ரஷ்யாவின் அணுகுமுறையை தடுத்து நிறுத்துவதற்கான சுவராக உக்ரைனை பாவிக்க திட்டமிட்டுள்ளன.
இதனால் உக்ரைனின் உட்கட்டமைப்பும் காலப்போக்கில் அழிவுக்கு உள்ளாகின்ற துயரத்தை எதிர்நோக்குகின்ற நிலை தவிர்க்க முடியாததாகும். இப்போரை நிறுத்துவது என்பது சாத்தியமற்றது மட்டுமின்றி இதனால் ஏற்படக்கூடிய ஐரோப்பிய சிதைவு என்பது மீளவும் போரின் ஒரு புதிய வடிவத்தை உலகம் சந்திப்பதற்கான முனைப்பை கொண்டுள்ளதாகவே தெரிகிறது.
ரீ.கணேசலிங்கம்-யாழ்பல்கலைகழகம்-