திருமணத்திற்குப் பிறகு முதல்முறையாகக் கணவரைச் சந்திக்கவிருந்த குஷ்புவும், இந்த விமான விபத்தில் பலியாகி இருக்கிறார்.
குஜராத்திலிருந்து இன்று லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா AI171 என்ற விமானம், அடுத்த சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானது. புறப்பட்ட சில நிமிடங்களிலேயே, அந்த விமானம் மேகானி நகர் குடியிருப்புப் பகுதியில் உள்ள பயிற்சி மருத்துவர் குடியிருப்பில் மோதியது.
இந்த விபத்தில், தற்போது வரை 170 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தங்கியிருந்த விடுதியில் மோதியதால் அங்கிருந்த மாணவர்கள் 5 பேர் பலியாகி இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போதைய தகவல்படி, இந்த விமான விபத்தில் யாரும் உயிர் பிழைப்பதற்கு வாய்ப்பில்லை என நகர காவல்துறை தெரிவித்துள்ளது. எனினும், இந்த விமான விபத்து பலருடைய நம்பிக்கைகளுக்கும் கனவுகளுக்கும் முடிவு கட்டியுள்ளது. ஒருவர் மட்டும் உயிர்பிழைத்துள்ளதாக கடைசியாக வந்த தகவல் தெரிவிக்கின்றது.
அந்த வகையில், இந்த விமானத்தில் 230 பயணிகள், 2 விமானிகள், 10 ஊழியர்கள் உள்பட 242 பேர் பயணம் செய்துள்ளனர். அதில், ராஜஸ்தானின் பலோதரா மாவட்டத்தில் உள்ள அரபா கிராமத்தைச் சேர்ந்த குஷ்பு ராஜ்புரோஹித்துவும் ஒருவர்.
இவருக்கு கடந்த ஆண்டு ஜனவரியில்தான் திருமணம் நடைபெற்றது. இவரது கணவர் மன்பூல் சிங் லண்டனில் படித்து வருகிறார்.
இந்த நிலையில், திருமணத்திற்குப் பிறகு முதல்முறையாகக் கணவரைச் சந்திக்கவிருந்த குஷ்புவும் இந்த விமான விபத்தில் பலியாகி இருக்கிறார். இது, அவருடைய குடும்பத்தினரையும் உறவினர்களையும் மிகுந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.