பாம்புக்கு மதுவை ஊற்றி மயக்கமடையச் செய்து, அதனை தோளில் போட்டு சுற்றிக் கொண்டிருந்த இளைஞரை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

தருமபுரி: மது போதையில் கழுத்தில் பாம்பை சுற்றிக் கொண்டு அதன் வாயிலும் மதுவை ஊற்றி, அதற்கு முத்தம் கொடுத்து நடுரோட்டில் சுற்றிய இளைஞரைக் கண்டு அருகிலிருந்தோர் தெறித்து ஓடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தருமபுரி நான்கு வழிச் சாலை அருகே டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. நேற்றிரவு சுமார் எட்டு மணி அளவில் ராஜாபேட்டை பகுதியைச் சேர்ந்த சூர்யா என்ற இளைஞர் கழுத்தில் பாம்பைச் சுற்றிக் கொண்டு மது வாங்க அந்தக் கடைக்கு வந்தார்.

முதலில் அந்த பாம்பை பார்த்தவர்கள் செத்த பாம்பு என நினைத்து பெரிதாக கண்டு கொள்ளவில்லை.

ஆனால் சூர்யாவின் கழுத்தில் போட்டிருந்த பாம்பு நெளிந்ததை பார்த்ததும் உயிருடன் இருப்பதைக் கண்டு, மது வாங்குவதற்காக அங்கு நின்றிருந்தோர் அனைவரும் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

டாஸ்மாக் கடையில் பணியாற்றும் ஊழியர்கள் அந்த இளைஞருக்கு விரைவாக மதுவைக் கொடுத்து ‘உடனே இடத்தை காலி செய்’ என்று அனுப்பி வைத்தனர்.

மது வாங்கிய சூர்யா அந்தப் பாட்டிலை தனது வாயால் திறந்து ஆறடி நீளமுள்ள சாரை பாம்புக்கு அதன் வாயில் மதுவை ஊற்றினார்.

பின்னர் அவர் தொடர்ந்து அரை மணி நேரம் சாரைப் பாம்புக்கு முத்தம் கொடுப்பதும், மீண்டும் மதுவை ஊற்றுவதுமாக சாலையில் அங்கும் இங்கும் நடந்து அட்டகாசம் செய்தார். மேலும் போதை தலைக்கு ஏறிய சாரைப் பாம்பை கழுத்தில் தொங்க விட்டபடி, நான்கு வழிச்சாலை பகுதியில் நடக்கத் தொடங்கினார்.

இளைஞர் ஒருவர் பாம்புடன் சாலையில் சுற்றி திரிந்ததை பார்த்த வாகன ஓட்டிகள் பயந்து எல்லா பக்கமும் சிதறி ஓடினர்.

டிராபிக் சிக்னலில் நின்ற வாகன ஓட்டிகளையும் அச்சுறுத்தும் வகையில் அவர்களிடமும் சூர்யா பாம்பை காட்டி பயமுறுத்தினார். இதனைப் பார்த்த ஒரு சிலர் அட்டகாசம் செய்து கொண்டிருந்த இளைஞனுடன் செல்ஃபி எடுக்க அங்கு ஒன்று கூடினர். அடிக்கடி பாம்புக்கு மதுவை குடிக்க கொடுத்ததால் சிறிது நேரத்தில் அந்த பாம்பு அசைவின்றி கிடந்தது.

சாலையில் செல்லும் பயணிகளுக்கு இடையூறாகவும், ஆம்புலன்ஸுக்கு கூட வழி விடாமலும் இளைஞர் ஒருவர் சுற்றித் திரிவது குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிய வர, தருமபுரி நகர போலீசார் அந்த இடத்திற்கு வந்தனர்.

அப்போது அந்த இளைஞரை பாம்புக்கு முத்தம் கொடுப்பது போல போஸ் செய்ய வைத்து சிலர் அவருடன் செல்ஃபி எடுப்பதையும், சிலர் அவரை நிற்க வைத்து புகைப்படம் எடுப்பதையும் பார்த்து கோபமடைந்த போலீசார் சூர்யாவை எச்சரித்து அனுப்பி வைத்தனர். மது போதையில் இளைஞர் பாம்பை பிடித்து அட்டகாசம் செய்த வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இச்சம்பவம் குறித்து தருமபுரி மாவட்ட காவல்துறை அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

அதில், “சூர்யா (எ) சண்முக சுந்தரம் மதுபானக் கடை ஊழியரிடமும், கடை வாடிக்கையாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து மதுக்கடை மேற்பார்வையாளர் மாணிக்கம் புகாரளித்தார்.

அந்த புகாரின்பேரில் அவர்மீது தருமபுரி காவல் நிலைய குற்ற எண் 330/2025 சட்டப்பிரிவுகள் 292, 296(பி), 351(3) பி.என்.எஸ் படி வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் விசாரணையில் இவர்மீது ஏற்கனவே தருமபுரி காவல் நிலைய குற்ற எண் 177/2025 சட்டப்பிரிவுகள் 296(பி), 115 (2), 188(1), 351(3) பி.என்.எஸ் என்ற அடிதடி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது” என்று கூறப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply