அனிருத் மற்றும் காவ்யா ஒரு வருடத்திற்கும் மேலாக காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் பரவின.
சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்ட ஒரு விஷயம் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் மற்றும் தொழிலதிபர் காவ்யா மாறன் திருமணம் குறித்த வதந்திகள்.
கடந்த சில வாரங்களாக இந்தச் செய்தி இணையத்தில் காட்டுத்தீ போல பரவி வந்தது. குறிப்பாக ரெடிட் மற்றும் பிற சமூக வலைத்தளங்களில், அனிருத் மற்றும் காவ்யா ஒரு வருடத்திற்கும் மேலாக காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் பரவின.
இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, அனிருத் தனது எக்ஸ் பக்கத்தில், (முன்னாள் ட்விட்டர்) அதிரடியான ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
“திருமணமா? லோல்… அமைதியா இருங்கப்பா. வதந்திகளைப் பரப்புவதை நிறுத்துங்கள்” (Marriage ah? lol .. Chill out guys. Pls stop spreading rumours.) என்று அவர் குறிப்பிட்டிருந்தது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
அனிருத்தின் இந்த பதிவு, அவர் மீதான தனிப்பட்ட வாழ்க்கைக் குறித்த யூகங்களுக்கு ஒரு தெளிவான பதிலைக் கொடுத்துள்ளது.
திருமண வதந்திகளில் அடிபட்ட காவ்யா மாறன், ஐபிஎல் அணியான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் சி.இ.ஒ ஆவார். இவர் சன் குழுமத்தின் தலைவரும் நிறுவனருமான ஊடக அதிபர் கலாநிதி மாறனின் மகள். ஐபிஎல் போட்டிகளின் போது அவர் மைதானத்தில் இருப்பதை பார்க்கலாம். அவரது உணர்ச்சிபூர்வமான எதிர்வினைகள் சமூக வலைத்தளங்களில் அடிக்கடி வைரலாகி ட்ரெண்டிங்கில் இடம்பிடித்துள்ளன.