ஈரான் மீதான தாக்குதல் இடம்பெறுவதற்கு முந்தைய மாதங்களில் இஸ்ரேல் நூற்றுக்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்களை ஈரானிற்குள் இரகசியமாக கொண்டு சென்றது என அவற்றை பயன்படுத்தி வான்தாக்குதலை ஈரான் தடுக்க முடியாத நிலையை ஏற்படுத்தியது என அமெரிக்காவின் வோல்ஸ்ரீட் ஜேர்னல் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலின் இந்த நடவடிக்கை குறித்து நன்கறிந்த வட்டாரங்களின் தகவல்களின்படி சூட்கேஸ்கள் டிரக்குகள் டாங்கர்கள் மூலம் இஸ்ரேல் இந்த ஆளில்லா விமானங்களைவெடி பொருட்களுடன் ஈரானிற்குள் கொண்டு சென்றது என தெரிவித்துள்ளன.

ஈரானிற்குள் வர்த்தக நோக்கங்களுடன் செல்லும் வாகனங்களை பயன்படுத்தி ஆளில்லா விமானங்களை மொசாட் கொண்டு சென்றது.

ஈரானிற்குள் இருந்த அதன் முகவர்கள் அவற்றை பொருத்தினார்கள் அதன் பின்னர் வார இறுதி தாக்குதலில் ஈடுபட்ட குழுவினரிடம் கையளித்தனர் என விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஈரானிற்குள் செயற்படும் குழுக்களின் தலைவர்களிற்கு முதலில் மூன்றாவது நாடொன்றில் வைத்து பயிற்சியளித்தது இஸ்ரேல்,அதன் பின்னர் அவர்கள் ஈரானிற்குள் இருந்த தங்கள் அணிகளிற்கு உத்தரவுகளை வழங்கினார்கள்.

நடவடிக்கை ஆரம்பமானதும், இஸ்ரேலின் இரகசிய படைப்பிரிவினர் ஈரானின் வான்பாதுகாப்பு நிலைகளிற்கும் ஏவுகணை ஏவும் பகுதிகளிற்கு அருகிலும் நிலைகொண்டனர்.

வெள்ளிக்கிழமை இஸ்ரேலிய விமானங்கள் தாக்குதலை ஆரம்பித்ததும் இஸ்ரேலின் சில அணியினர் ஈரானின் விமான எதிர்ப்பு பொறிமுறைகளை செயல் இழக்கச்செய்தனர்,ஏனையவர்கள் ஏவுகணை செலுத்திகளை இலக்குவைத்தனர்.

ஏவுகணைகளை கொண்டு செல்வதற்கு பயன்படுத்தப்பட்ட பல டிரக்குகளும் தாக்கப்பட்டன.

ஈரானால் ஏன் ஆரம்பத்தில் பதில் நடவடிக்கைகளை எடுக்க முடியவில்லை என்பதை இஸ்ரேலின் இந்த நடவடிக்கை தெளிவுபடுத்துகின்றது.

புதுமையான விதத்தில் செலவின்றி ஆளில்லா விமானங்களை இஸ்ரேல் பயன்படுத்தியுள்ளது.ரஸ்யாவின் விமானங்களை தாக்குவதற்காக உக்ரைன் இவ்வாறான தந்திரோபாயங்களை பயன்படுத்திய சில நாட்களின் பின்னர் இஸ்ரேல் ஆளில்லா விமானங்கள இவ்வாறான விதத்தில் பயன்படுத்தியுள்ளது.

ஈரான் தனது ஏவுகணைகளை பயன்படுத்துவதற்கு முன்னர் அதனால் ஏற்படக்கூடிய ஆபத்தை இல்லாமல் செய்வதற்கு மொசாட்டின் ஆளில்லா விமான நடவடிக்கை உதவியது என வோல்ஸ்ரீட் ஜேர்னல் தெரிவித்துள்ளது.

பயன்படுத்துவதற்கான நிலையில் காணப்பட்ட பல ஏவுகணைகளை இஸ்ரேலின் விசேட படைப்பிரிவுகள் அதிகாலையில் அழித்தன,

இதன் பிறகே ஈரான் வெள்ளிக்கிழமை முதல் ஏவுகணை தாக்குதலை மேற்கொண்டது.இதனால் குறிப்பிடத்தக்க இழப்புகள் ஏற்பட்டுள்ளன எனினும் இஸ்ரேல் இதனை விட கடுமையான பதில் தாக்குதலை எதிர்பார்த்தது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மொசாட் இந்த நடவடிக்கைக்காக பல வருடங்களாக திட்டமிடல்களை மேற்கொண்டது என வோல்ஸ்ரீட் ஜேர்னல் தெரிவித்துள்ளது.

ஏவுகணைகள் வைக்கப்பட்டுள்ள இடங்கள்,மற்றும் தனது விசேட படைப்பிரிகளை எங்கு நிறுத்தவேண்டும் போன்ற விடயங்கள் குறித்து திட்டமிடல்களில் இஸ்ரேல் பல வருடங்களாக ஈடுபட்டுள்ளது.

Share.
Leave A Reply