இஸ்ரேலிய கடற்படை அதன் நீண்டதூர வான் பாதுகாப்பு (LRAD) படையுடன் இணைந்து 8 ஈரானிய ட்ரோன்களை வீழ்த்தியுள்ளது.
இஸ்ரேல் – ஈரான் மாறிமாறி தாக்குதல்!
அணு ஆயுத விவகாரம் தொடர்பாக, ஈரானைக் குறிவைத்து இஸ்ரேல் கடந்த சில நாட்களாக தாக்குதல் நடத்தி வருகிறது.
அதாவது, அணு ஆயுதத்தைத் தயாரிப்பதில் ஈரான் தீவிரமாக உள்ளது என்றும் அது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறி ஈரான் மீது ‘ஆபரேஷன் ரைசிங் லயன்‘ என்ற பெயரில் கடந்த ஜூன் 13ஆம் தேதி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.
இதற்குப் பதிலடியாக ஈரானுமும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. தற்போது இருநாடுகளும் மாறிமாறி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன.
இதனால், அங்கு நாளுக்கு நாள் போர்ப் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்த தாகுதலில் ஈரானின் முக்கிய தளபதிகள் கொல்லப்பட்டு வருகின்றனர். இதற்கிடையே, அமெரிக்கா தெஹ்ரானில் உள்ள பொதுமக்களை விரைவில் வெளியேறுமாறு எச்சரித்துள்ளது.
இந்த நிலையில், ஈரானிய வான்வழித் தாக்குதல்கள் இரும்புக் குவிமாடத்தை( Iron Dome) உடைத்து டெல் அவிவ், ஜெருசலேம் மற்றும் பிற நகரங்களில் உள்ள கட்டடங்களைத் தாக்கிய பிறகு, இஸ்ரேல் தனது புதிய வான்வழி பாதுகாப்பு அமைப்பான ‘பராக் மேக’னை (“Barak Magen) முதல்முறையாகச் செயல்படுத்தத் தொடங்கியுள்ளது.
புதிய பாதுகாப்பு அமைப்பு, கடந்த ஜூன் 15ஆம் தேதி இரவு ஈரானிய ட்ரோன்களை இடைமறித்ததாக இராணுவம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலிய கடற்படை அதன் நீண்டதூர வான் பாதுகாப்பு (LRAD) படையுடன் இணைந்து 8 ஈரானிய ட்ரோன்களை வீழ்த்தியுள்ளது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் (IDF)இன்படி, இஸ்ரேலிய நீரில் உள்ள சார் 6 ஏவுகணை கப்பலில் இருந்து இந்த இடைமறிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இஸ்ரேலின் ’பராக் மேகன் ’(“Barak Magen” Aerial Defense System)என்றால் என்ன?
எபிரேய மொழியில் இது, ‘மின்னல் கவசம்’ எனப் பொருள் கொள்ளப்படுகிறது. இது, இஸ்ரேலின் சமீபத்திய கடற்படை வான் பாதுகாப்பு அமைப்பாகும்.
இது, பராக் எம்எக்ஸ் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பின் சிறந்த கண்டுபிடிப்பாகும். இது ட்ரோன்கள், குரூஸ் ஏவுகணைகள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகள் போன்ற பல்வேறு வான்வழி அச்சுறுத்தல்களிலிருந்து கடற்படைக் கப்பல்களைப் பாதுகாக்க உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு, சார் 6 கோர்வெட்டுகள் எனப்படும் மேம்பட்ட இஸ்ரேலிய கடற்படைக் கப்பல்களில் பயன்படுத்தப்படுகிறது.
’பராக் மேகன்’ எவ்வாறு செயல்படுகிறது?
பராக் மேகன் ரேடார், கட்டளை அமைப்புகள் மற்றும் பல்வேறு வகையான ஏவுகணைகளைச் சுடக்கூடிய ஸ்மார்ட் செங்குத்து ஏவுகணைகளின் தொகுப்பைப் பயன்படுத்துகிறது.
இவற்றில் குறுகிய தூர, நடுத்தர தூர மற்றும் நீண்ட தூர இடைமறிப்பான்களும் அடங்கும். இவை அனைத்தும் கப்பலில் இருந்து நேராக ஏவப்பட்டு எந்த திசையிலிருந்தும் வரும் அச்சுறுத்தல்களைத் தாக்கும்.
இது, அமைப்புக்கு 360 டிகிரி கவரேஜையும் ஒரே நேரத்தில் பல இலக்குகளைச் சமாளிக்கும் திறனையும் வழங்குகிறது.
இந்தியாவின் பராக்-8
பராக் பாதுகாப்பு அமைப்பின் தரையிலிருந்து, வான் பதிப்பான பராக்-8ஐ உருவாக்க இஸ்ரேல், இந்தியாவுடன் இணைந்து பணியாற்றியுள்ளது.
இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) உடனான இந்தக் கூட்டுத் திட்டம் விமானங்கள், ட்ரோன்கள், கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகளுக்கு எதிராக பாதுகாக்க வடிவமைக்கப்பட்டுள்ளது.
பராக்-8 100 கிமீ வரை வரம்பைக் கொண்டுள்ளது மற்றும் 20 கிமீ உயரத்தில் செயல்பட முடியும். கடற்படை பயன்பாட்டிற்கு குறிப்பிட்ட பராக் மேகனைப் போலல்லாமல், பராக்-8ஐ நிலம் மற்றும் கடல் தளங்களில் இருந்து பயன்படுத்த முடியும்.