இரானின் நிலத்தடி அணுசக்தி தளங்களைத் தாக்கும் திறன் கொண்ட ஆயுதங்களில் ஒன்று பயன்படுத்தப்படாமல் உள்ளது.

அந்த ஆயுதம் இஸ்ரேலின் கைகளிலும் தற்போது இல்லை.

GBU-57A/B Massive Ordnance Penetrator (MOP) எனப்படும் உலகின் மிகப்பெரிய அணுஆயுதம் அல்லாத “பங்கர் பஸ்டர்” (“bunker buster”) வெடிகுண்டு தான் அந்த ஆயுதம். அது, அமெரிக்காவிற்கு மட்டுமே சொந்தமானதாக உள்ளது.

துல்லியமாக வழிகாட்டப்படும், 30,000 பவுண்ட் (13,600 கிலோ) எடையுள்ள இந்த வெடிகுண்டு, ஒரு மலைக்குள் ஆழமாக புதைக்கப்பட்டுள்ள இரானின் ஃபோர்டோ அணுசக்தி எரிபொருள் செறிவூட்டல் வளாகத்தை ஊடுருவும் திறன் கொண்டதாகக் கருதப்படுகிறது.

இதுவரை, எம்ஓபி வெடிகுண்டை உபயோகிப்பதற்கான அனுமதியை அமெரிக்கா இஸ்ரேலுக்கு வழங்கவில்லை.

GBU-57A/B Massive Ordnance Penetrator (MOP) எனப்படும் ஆயுதம் என்ன செய்யும்? அதன் சவால்கள் என்ன? அதை எவ்வாறு பயன்படுத்த முடியும்?

அமெரிக்க அரசாங்கத்தின் கூற்றுப்படி, GBU-57A/B என்பது, “ஆழமாக புதைக்கப்பட்ட மற்றும் உறுதியாக கட்டப்பட்ட பதுங்கு குழிகள் மற்றும் சுரங்கங்களைத் தாக்கும் திறன் கொண்ட ஒரு பெரிய ஊடுருவக்கூடிய ஆயுதம்”என அறியப்படுகின்றது.

இந்த வெடிகுண்டு சுமார் ஆறு மீட்டர் நீளமுடையது. இது வெடிக்கும் முன் சுமார் 200 அடி (61 மீட்டர்) ஆழத்தில் நிலத்தின் உள்ளே ஊடுருவக்கூடியது என நம்பப்படுகிறது. இதுபோன்ற வெடிகுண்டுகள் தொடர்ச்சியாக வீசப்பட்டால், ஒவ்வொரு வெடிப்பும், நிலத்தை ஆழமாக துளையிட்டு, இலக்கைச் சேதப்படுத்தும் திறனை அதிகரிக்கிறது.

போயிங்கால் தயாரிக்கப்பட்ட எம்ஓபி (MOP), இதுவரை போரில் ஒருபோதும் பயன்படுத்தப்படவில்லை. எனினும், இது அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோ மாகாணத்தில் உள்ள ஒயிட் சாண்ட்ஸ் மிஸைல் ரேஞ்ச் (White Sands Missile Range) என்ற ராணுவ சோதனை மையத்தில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

“அனைத்து வெடிகுண்டுகளின் தாய்” என அழைக்கப்படும் 21,600 பவுண்ட் (9,800 கிலோ) எடையுள்ள Massive Ordnance Air Blast (MOAB) வெடிகுண்டை விட இது அதிக சக்தி வாய்ந்தது. இந்த MOAB, 2017 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் போருக்காக பயன்படுத்தப்பட்டது.

“MOAB போலவே பெரிய அளவிலான ஆயுதங்களை உருவாக்க முயற்சித்த அமெரிக்க விமானப்படை, வெடி பொருளை மிகவும் வலிமையான உலோகப் பெட்டிக்குள் வைத்திருக்கும் வகையில் வடிவமைத்தது.

அதன் விளைவாக உருவானது தான் GBU-57A/B மாசிவ் ஆர்ட்னன்ஸ் பெனட்ரேட்டர்” என்று கூறுகிறார் பிரிட்டனின் ப்ராட்ஃபோர்டு பல்கலைக்கழகத்திலுள்ள அமைதிக் கல்வித் துறையின் பேராசிரியரான பால் ரோஜர்ஸ்.

தற்போது , எம்ஓபி வெடிகுண்டை ஏவுவதற்காக கட்டமைக்கப்பட்டும், நிரலாக்கம் செய்யப்பட்டும் இருப்பது அமெரிக்காவின் B-2 ஸ்பிரிட் என்ற ஸ்டெல்த் பாம்பர் மட்டும் தான்.

B-2 என அழைக்கப்படும் இந்த போர் விமானம், நார்த்ரோப் க்ரம்மன் நிறுவனம் தயாரித்தது. அமெரிக்க விமானப்படையின் ஆயுதக் களஞ்சியத்தில் உள்ள மிகவும் மேம்பட்ட போர் விமானங்களில் ஒன்றாக இந்த விமானம் கருதப்படுகின்றது.

இந்த விமானத்தின் உற்பத்தியாளரான நார்த்ரோப் க்ரம்மனின் கூற்றுப்படி, B-2 விமானம் 40,000 பவுண்டு (18,000 கிலோ) வரை சுமக்கக்கூடியது. ஆனால், இரண்டு GBU-57A/B “பங்கர் பஸ்டர்” வெடிகுண்டுகளை சுமந்து செல்லும் B-2 விமானத்தை வெற்றிகரமாக சோதனை செய்ததாக அமெரிக்க விமானப்படை தெரிவித்துள்ளது. இதன் மொத்த எடை சுமார் 60,000 பவுண்டு (27,200 கிலோ).

குண்டுவீச்சுக்குப் பயன்படும் இந்த நீண்ட தூர கனரக விமானம், எரிபொருள் நிரப்பாமல் சுமார் 7,000 மைல்கள் (11,000 கிமீ) வரை பறக்கக்கூடியது.

பறக்கும் நிலையில் ஒருமுறை எரிபொருள் நிரப்பினால், அதன் வரம்பு 11,500 மைல்கள் (18,500 கிமீ) ஆக அதிகரிக்கிறது. இதன் மூலம், உலகின் எந்தப் பகுதியையும் சில மணி நேரங்களில் இந்த விமானத்தால் அடைய முடியும் என நார்த்ரோப் க்ரம்மன் கூறுகிறது.

இரான் போன்ற நவீன வான் பாதுகாப்பு அமைப்புகளுடன் கூடிய நாட்டிற்கு எதிராக எம்ஓபி வெடிகுண்டு பயன்படுத்தப்பட்டால், B-2 குண்டுவீச்சு விமானங்களுடன் கூடுதல் விமானங்களும் அதில் பங்கேற்க நேரிடும். எடுத்துக்காட்டாக, எதிரியின் பாதுகாப்பு அமைப்புகளுக்கு எதிராக F-22 ஸ்டெல்த் ஸ்ட்ரைக் விமானங்கள் பயன்படுத்தப்படலாம். அதன் பிறகு, சேதத்தை மதிப்பீடு செய்யவும், அதற்குப் பிறகும் தாக்குதல்களைத் தொடரவேண்டுமா என்பதை தீர்மானிக்கவும் ட்ரோன்கள் பயன்படுத்தப்படலாம் என்று பேராசிரியர் ரோஜர்ஸ் கூறுகிறார்.

இந்த எம்ஓபி வெடிகுண்டுகள் அமெரிக்காவிடம் மிகக் குறைந்த அளவு இருப்பதாக அவர் மதிப்பிடுகிறார்.

“அவர்கள் சுமார் 10 அல்லது 20 எம்ஓபி வெடிகுண்டுகளை வைத்திருக்கக்கூடும்” என்கிறார் பேராசிரியர் ரோஜர்ஸ்.

எம்ஓபி வெடிப்பதற்கு முன் மேற்பரப்பில் இருந்து சுமார் 200 அடி (61 மீட்டர்) வரை ஊடுருவிச் செல்லும் திறன் கொண்டதாக நம்பப்படுகிறது.

இரானுக்கு எதிராக எம்ஓபி வெடிகுண்டு பயன்படுத்தப்படுமா?

ஃபோர்டோ என்பது இரானின் இரண்டாவது அணுசக்தி செறிவூட்டல் நிலையமாகும். நடான்ஸுக்கு பிறகு இதுவும் ஒரு முக்கிய மையமாகக் கருதப்படுகிறது.

டெஹ்ரானில் இருந்து தென்மேற்கே சுமார் 60 மைல் (95 கிலோமீட்டர்) தொலைவில் உள்ள கோம் நகருக்கு அருகில், ஒரு மலையின் ஓரத்தில் இந்த நிலையம் கட்டப்பட்டுள்ளது. இந்த நிலையத்திற்கான கட்டுமானம் 2006ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதாக நம்பப்படுகிறது. பின்னர், 2009ஆம் ஆண்டு இந்த நிலையம் செயல்பாட்டுக்கு வந்தது.

இந்த நிலையம் அங்கு செயல்படுவதை, இரான் அதே ஆண்டில் வெளிப்படையாக ஒப்புக்கொண்டது.

80 மீட்டர் (260 அடி) ஆழத்தில் பாறை மற்றும் மண்ணுக்குள் புதைக்கப்பட்டிருப்பதுடன், இரான் மற்றும் ரஷ்ய தயாரிப்புகளான தரையிலிருந்து வானில் தாக்கும் ஏவுகணை அமைப்புகளால், ஃபோர்டோ வளாகம் பாதுகாக்கப்படுகிறது என்றும் கூறப்படுகிறது.

2023ம் ஆண்டு மார்ச் மாதத்தில், சர்வதேச அணுசக்தி நிறுவனம் (IAEA), அந்த தளத்தில் ஆயுத தரத்திற்கு அருகிலுள்ள 83.7% தூய்மையுடைய யுரேனியம் துகள்களைக் கண்டறிந்தது.

இரானின் ஏவுகணை மற்றும் அணுசக்தி திட்டத்தை முற்றிலும் அழிப்பதே, இரான் மீது தாக்குதல் நடத்துவதன் நோக்கம் என இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியிருந்தார். அதனை, “இஸ்ரேலுக்கு ஒரு இருத்தலியல் (existential) அச்சுறுத்தல்” எனவும் அவர் விவரித்தார்.

அந்த நோக்கத்தை அடைய, ஃபோர்டோ வளாகமும் ஒரு முக்கியப் பகுதியாக இருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

“இந்த முழு நடவடிக்கையும்… ஃபோர்டோவை முற்றிலும் நீக்குவதன் மூலம் முழுமை பெறும்” என்று அமெரிக்காவுக்கான இஸ்ரேல் தூதர் யெச்சியல் லீட்டர் வெள்ளிக்கிழமை ஃபாக்ஸ் நியூஸுக்கு தெரிவித்தார்.

ஆனால் எம்ஓபி வெடிகுண்டை தனியாக பயன்படுத்துவதற்கான திறன் இஸ்ரேலிடம் இல்லை. மேலும், அமெரிக்கா நேரடியாக ஈடுபடாமல் அதற்கு அனுமதி அளிக்காது என்று பேராசிரியர் ரோஜர்ஸ் குறிப்பிட்டார்.

“நிச்சயமாக, இஸ்ரேலியர்கள் தனியாக இதைச் செய்ய அமெரிக்கா அனுமதிக்காது. மேலும் இத்தனை பெரிய அளவில் ஊடுருவும் வெடிகுண்டுகளும் இஸ்ரேலிடம் இல்லை” என்று அவர் கூறினார்.

அமெரிக்கா இந்த வெடிகுண்டை பயன்படுத்துமா என்பது, குறிப்பாக அதிபர் டொனால்ட் டிரம்பின் தலைமையின் கீழ், அந்த நாடு தங்களது ஈடுபாட்டை அதிகரிக்க தயாரா என்ற விருப்பத்தைப் பொறுத்தது.

“இஸ்ரேலுக்கு முழுமையாக ஆதரவளிக்க டிரம்ப் தயாராக உள்ளாரா என்பதைப் பொறுத்தது” என்கிறார் பேராசிரியர் ரோஜர்ஸ்.

கனடாவில் நடைபெற்ற G7 மாநாட்டில், அமெரிக்கா ராணுவ நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு என்ன தேவைப்படும் என்று டிரம்பிடம் கேட்கப்பட்டது.

அதற்கு, “நான் அதைப் பற்றி பேச விரும்பவில்லை”என்று டிரம்ப் பதில் அளித்தார்.

 

ஏபிசி நியூஸுடன் நடைபெற்ற சமீபத்திய நேர்காணலில், ஃபோர்டோ மீதான தாக்குதலில் அமெரிக்கா ஈடுபடுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து தூதர் லீட்டரிடம் கேட்கப்பட்டது. இஸ்ரேல், அமெரிக்காவிடம் தற்காப்பு உதவியை மட்டுமே கேட்டுள்ளது என்று அவர் பதில் கூறினார்.

“எங்களிடம் பல திட்டங்கள் உள்ளன. அவை ஃபோர்டோவை சமாளிக்க எங்களுக்கு உதவும்,” என்று அவர் குறிப்பிட்டார்.

“எல்லா விஷயங்களும் வானத்தில் பறந்து தூரத்திலிருந்து குண்டு வீசுவது போன்றவை அல்ல,” என்றும் அவர் கூறினார்.

எப்போதுமே தனது அணுசக்தித் திட்டம் முற்றிலும் அமைதியானது என்றும் அணு ஆயுதத்தை உருவாக்க அவர்கள் எப்போதும் முயற்சி செய்யவில்லை என்றும் இரான் கூறி வருகிறது.

ஆனால் கடந்த வாரம் சர்வதேச அணுசக்தி நிறுவனத்தின் 35 நாடுகளைக் கொண்ட நிர்வாக குழு, 20 ஆண்டுகளில் முதல் முறையாக இரான் தனது அணுசக்திப் பரவல் தடைகளை மீறியதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இரானில் ராணுவ ரீதியாக தலையிட அமெரிக்காவிற்கு என்ன தேவை என்று கனடாவில் நடந்த G7 கூட்டத்தில் டிரம்பிடம் கேட்டபோது, ​​’நான் அதைப் பற்றி பேச விரும்பவில்லை’ என்று அவர் கூறினார்.

‘கேம் சேஞ்சர்’

சமீபத்திய இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களுக்குப் பிறகு, “ஆழமாக புதைக்கப்பட்ட இரானின் அணுசக்தி நிலையங்களை சேதப்படுத்துவதில் இஸ்ரேல் எந்த வகையிலும் வெற்றி பெற்றிருக்க வாய்ப்பு குறைவு தான்” என்று பேராசிரியர் ரோஜர்ஸ் நம்புகிறார்.

“தங்களால் செய்ய முடியாத விஷயத்தைச் செய்ய, இஸ்ரேலுக்கு எம்ஓபி போன்ற சக்திவாய்ந்த ஒரு வெடிகுண்டு தேவைப்படும்,” என்று அவர் கூறினார்.

“ஃபோர்டோ தளம் செயல்பாட்டில் இருக்கும் வரை, இரான் அணு ஆயுதம் தொடர்பான அபாயத்தை ஏற்படுத்தும் நிலைமையில் தான் இருக்கிறது. டெஹ்ரானுக்கு, அந்த தளத்தில் செறிவூட்டலை அதிகரிக்கவோ அல்லது யுரேனியத்தை வேறு இடத்துக்கு மாற்றவோ வாய்ப்பு இருக்கிறது” என்று அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட ஆயுதக் கட்டுப்பாட்டு சங்கத்தின் அணுசக்தி பரவல் தடுப்பு கொள்கைக்கான இயக்குநர் கெல்சி டேவன்போர்ட் கூறுகிறார்.

எம்ஓபி பயன்படுத்தப்பட்டாலும், இரானின் அணு ஆயுதத் தளங்கள் எவ்வளவு ஆழத்தில் இருக்கின்றன, எவ்வளவு பாதுகாப்பாக உள்ளன என்பது தெரியாததால், இந்த ஆயுதத்தைப் பயன்படுத்தினால் வெற்றி கிடைப்பதற்கும் உத்தரவாதம் இல்லை என்று பேராசிரியர் ரோஜர்ஸ் கூறுகிறார்.

“தற்போது உள்ள எந்த ஆயுதத்தையும் விட, இரானின் நிலத்தடியில் ஆழமாக உள்ள அணுசக்தி திறன்களை சேதப்படுத்துவதற்கான சிறந்த வாய்ப்பு இந்த ஆயுதத்திடமே உள்ளது. ஆனால் அதைச் செய்ய முடியுமா என்பது யாருக்குத் தெரியும்!” என்கிறார் பேராசிரியர் ரோஜர்ஸ்.

– இது, பிபிசி   நியூஸ்-

Share.
Leave A Reply