– உதவிய 24 வயது நண்பன் உட்பட இருவரும் கைது
தனது 70 வயது காதலியிடம் இருந்து ரூ. 1 இலட்சத்து 60,000 பெறுமதியான தங்க நகைகளைச் கொள்ளையடித்து தப்பிச் சென்ற காதலனும் திருட்டுக்கு உதவிய காதலனின் நண்பரையும் வாஹல்கட பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள வாஹல்கட பகுதியைச் சேர்ந்த 70 வயதுடைய பெண்ணின் காதலன் என்று கூறப்படும் 30 வயதுடைய ஒருவரும் அவருக்கு ஆதரவளித்த 24 வயதுடைய ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தப் பெண் தனது கணவர் மற்றும் பிள்ளைகளை பிரிந்து பல்வேறு பகுதிகளில் வீட்டு வேலை செய்து வருகின்றார். தற்போது வென்னப்புவ பகுதியில் வசித்து வரும் வயோதிபர் ஒருவரை பராமரித்து வருகின்றார்.
ஒரு வருடத்திற்கு முன்பு கலேவெல பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த போது அவரது தொலைபேசிக்கு மிஸ் கால் வந்ததாகவும் பின்னர் வந்த அழைப்பின் அடிப்படையில் இருவரும் அடையாளம் காணப்பட்டதாகவும் பல சந்தர்ப்பங்களில் சந்தித்து கொண்டதாகவும் பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
வாஹல்கட குளகாகரைக்கு இந்தப் பெண் சென்ற போது பெண்ணின் தங்க ஆபரணங்கள் கொள்ளை இடம்பெற்றுள்ளதுடன் அதனைத் தடுப்பதற்கு முயற்சித்த ஏற்பட்ட கைக்கலப்பில் பெண் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வாஹல்கட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் டபிள்யூ.ஏ.ஏ.சம்பத் தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.