சென்னையில் 1990 ஜூன் 19 ஆம் திகதி ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் ( ஈ.பி. ஆர்.எல்.எவ். ) பொதுச் செயலாளர் கே. பத்மநாபாவும் வேறு 14 பேரும் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டின் சமகால அரசியல் மீது ஒரு நீடித்த தாக்கத்தைக் கொண்டிருந்தது.
கோடம்பாக்கத்தில் சனசந்தடி மிகுந்த ஒரு மாடிக்குடியிருப்பில் இடம்பெற்ற அந்த தாக்குதலில் பெரும்பாலான அதன் தலைவர்கள் கொல்லப்பட்டதால் ஈ.பி.ஆர்.எல்.எவ். இயக்கத்துக்கு பாரதூரமான பாதிப்பு ஏற்பட்டது.
அந்த படுகொலைகள் பெரும் பரபரப்பையும் சர்ச்சையையும் தோற்றுவித்திருந்தன. அன்றைய திராவிட முன்னேற்றக் கழக அரசாங்கமும் முதலமைச்சர் மு. கருணாநிதியும் கடுமையான அரசியல் தாக்குதல்களுக்கு இலக்காகவேண்டி வந்தது.
அதற்கு பிறகு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம், காங்கிரஸ் போன்ற கட்சிகள் தி.மு.க. அரசாங்கத்துக்கு எதிராக இடையறாது முன்னெடுத்த எதிர்ப்பிரசாரங்கள் 1991 ஜனவரியில் அந்த அரசாங்கம் கலைக்கப்படும் வரை தொடர்ந்தன.
கருணாநிதியும் அவரது நிருவாகமும் பாதுகாப்பு நிலைவரத்தை கையாளுவதில் ” மனவலிமையற்றதாக ” இருந்ததாகவும் சட்டம் , ஒழுங்கை பேண முடியாமல் இருந்ததாகவும் காரணம் கூறப்பட்டே அரசாங்கம் கலைக்கப்பட்டது.
தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின முக்கியமான பகையாளி இயக்கமான ஈ.பி. ஆர்.எல்.எவ்.வினால் “1990 படுகொலைகளின் விளைவாக ஏற்பட்ட வெற்றிடத்தை ஒருபோதுமே நிரப்பக்கூடியதாக இருக்கவில்லை ” என்று சுகு என்றும் அறியப்படுகின்ற அந்த இயக்கத்தின் முன்னாள் மத்திய குழு உறுப்பினரான சிறீதரன் திருநாவுக்கரசு கூறுகிறார்.
இயக்கம் பல்வேறு சுற்று மாற்றங்களுக்கு உள்ளானது. இலங்கையில் தற்போது ஈ.பி.ஆர்.எல்.எவ். வடமாகாணத்தின் சில பகுதிகளில் — யாழ்ப்பாணம் , வவுனியா — மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட ஆதரவை கொண்டிருக்கிறது.
தி.மு.க.வுக்கு எதிரான தாக்குதல்கள்
‘ தி இந்து ‘ வின் காப்பகத்தில் கிடைக்கக்கூடியதாக இருக்கும் ஆவணங்களின் பிரகாரம் அன்று தி.மு.க.வுக்கு எதிரான அரசியல் தாக்குதல்களை தீவிரமாக முன்னெடுத்தவர்களில் ஒருவர் காங்கிரஸ் தலைவர் பி.சிதம்பரம்.
படுகொலைகள் இடம்பெற்றதற்கு மறுநாள் செய்தியாளர்கள் மாகாடொன்றில் பேசி சிதம்பரம் ( அவர் பிறகு மத்திய நிதியமைச்சராகவும் உள்துறை அமைச்சராகவும் பதவி வகித்தார் ) “தொடர்ச்சியாக மக்களை தவறாக வழிநடத்தியமைக்காக” முதலமைச்சர் மக்களிடமும் சட்டசபையிலும் மன்னிப்புக் கேட்கவேண்டும் என்று கோரினார்.
மாநிலத்தில் விடுதலை புலிகளின் நடவடிக்கைகள் குறித்து எதிர்க்கட்சிகள் திரும்பத்திரும்ப எச்சரிக்கை செய்த போதிலும், அந்த இயக்கத்தின் முகாமோ அல்லது இராணுவ நடவடிக்கையோ தமிழ்நாட்டில் கிடையாது என்று முதலமைச்சர் கூறிவந்ததாக தெரிவித்த சிதம்பரம் தார்மீக அடிப்படையில் அவர் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தினார்.
தி.மு.க.வை மிகவும் கடுமையாக விமர்சிப்பவராக விளங்கிய அன்றைய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் வாழப்பாடி கே. இராமமூர்த்தி மாநிலம் படிப்படியாக ” ஒரு பஞ்சாப்பாக அல்லது காஷ்மீராக” மாறிவருகிறது என்று குறிப்பிட்டார்.
ஆனால், இரு காங்கிரஸ் தலைவர்களும் பல வருடங்களுக்கு பிறகு கருணாநிதியின் நேச அணிகளாக மாறுவதில் எந்தவிதமான தயக்கத்தையும் கொண்டிருக்கவில்லை என்பது வேறு விடயம்.
ஜெயலலிதாவின் நிலைப்பாடு
தி.மு.க. அரசாங்கத்தை கண்டனம் செய்வதில் அண்ணா தி.மு.க. வின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா எந்தளவுக்கும் குறைந்தவராக இருக்கவில்லை.
1990 ஜூலையில் ‘ தி இந்து ‘வுக்கு அளித்த நேர்காணல் ஒன்றில் ஜெயலலிதா படுகொலைகளை ” மன்னிக்கமுடியாத ஒரு குற்றச்செயல் ” என்று வர்ணித்தார். கருணாநிதி பொறுப்பை ஏற்கக்கூடிய ஒருவர் அல்ல என்பதால் அவரை பதவியில் இருந்து ஜனாதிபதி நீக்கவேண்டும் என்று அவர் கோரினார்.
தி.மு.க.வின் ஒரு நேசக்கட்சியான இந்திய மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியற்குழு ” ஐக்கியப்பட்ட இலங்கை கட்டமைப்புக்குள் ” தமிழ்ச் சிறுபான்மை இனத்தவர்களின் மெய்யான கோரிக்கைகளை முன்னெடுக்கும் சக்திகளை பத்மநாபா பிரதிநிதித்துவப்படுத்தி நின்றார் என்று குறிப்பிட்டது.
சென்னை நகரின் மத்தியில் இடம்பெற்ற அந்த கொடூரமான கொலைகள் விடுதலை புலிகளினால் தோற்றுவிக்கப்ட்ட பாரதூரமான அச்சுறுத்தலை வெளிக்காட்டுவதாகவும் “எந்தவிதமான தடையுமின்றி அந்த இயக்கம் நாசகார நடவடிக்கைகளை தொடருவதற்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறது” என்றும் அரசியற்குழு கூறியது.
படுகொலைகள் தி.மு.க. அரசாங்கத்துக்கு பாரிய அவமதிப்பு என்று பாரதிய ஜனதா கட்சியின் துணைத்தலைவர் கே. ஜனா கிருஷ்ணமூர்த்தி குறிப்பிட்டார். தமிழ்நாட்டை தீவிரவாதிகள் ஒரு ” திறந்த சத்திரமாக ” பயன்படுத்துவதற்கு தி.மு.க. அரசாங்கம் அனுமதித்துவிட்டதாக அவர் குற்றச்சாட்டினார்.
ஆனால், படுகொலைகளை கண்டனம் செய்த கருணாநிதி பதவி விலகுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை நிராகரித்தார். கரூரில் ஜூூல 10 ஆம் திகதி பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றிய அவர் எதற்காக தான் பதவிவிலக வேண்டும் என்று கேள்வியெழுப்பினார்.
” ஏன் பதவி விலகவேண்டும்? இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள். நான் பதவியில் இருந்து இறஙகினால், இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படமாட்டார்களா? படுகொலைகளை அடுத்தே என்னை பதவி விலகுமாறு கேட்கப்படுகிறது.
எதற்காக பத்மநாபா கொலையையும் தி.மு க.வையும் இணைத்து என்னை பதவி விலகுமாறு பிரசாரம் செய்யப்படுகிறது? சென்னை விமான நிலையத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 40 பயணிகள் [ 1884 ஆகஸ்டில் ] கொல்லப்பட்டபோது அன்றைய பிரதமர் இந்திரா காந்தியும் தமிழ்நாட்டில் பதவியில் இருந்த முதலமைச்சர் எம்.ஜி. இராமச்சந்திரனும் பதவி விலக முன்வந்தார்களா? என்று கருணாநிதி கேள்வி எழுப்பினார்.
“மாறுவேடத்தில் வந்தார் பதமநாபா “
“பொதுவில் தமிழ்த் தீவிரவாதிகளினாலும் குறிப்பாக, விடுதலை புலிகளினாலும் தோற்றுவிக்கப்படுகின்ற அச்சுறுத்தலை கையாளும் விடயத்தில் எந்தவிதமான அரசியல் தடங்கலும் இருக்கவில்லை ” என்று சில தினங்கள் கழித்து பொலிஸ் இயக்குநர் நாயகம் (டி.ஜி.பி.) பி.துரை கூறினார்.
1976 ஆம் ஆண்டில் இருந்து இலங்கை தமிழ் தீவிரவாத இயக்கங்கள் மத்தியிலான உட்பகை மோதல்களை தமிழ்நாட்டு மக்கள் பார்த்துக்கொண்டு வருகிறார்கள்.1982, 1984, 1986 ஆண்டுகளில் துப்பாக்கிச் சூடடுச் சம்பவங்கள் இடம்பெற்றிருந்தன என்று கூறிய துரை தமிழ்நாடு இன்னொரு பஞ்சாப்பாக அல்லது காஷ்மீராக மாறுவதாக கூறப்படும் கருத்தை ” தவறானது ” என்று குறிப்பிட்டார்.
பத்மநாபா சென்னை நகருக்கான தனது வருகை குறித்து அறிவித்திருந்தால் பொலிசார் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருப்பார்கள் என்று கருணாநிதி கூறியதாக வெளியான செய்திகள் குறித்து கருத்து தெரிவித்த துரை ஈ.பி.ஆர்.எல்.எவ். தலைவர் தனது தாடியையும் அகற்றி மாறுவேடத்தில் தான் சென்னைக்கு வந்தார் என்று குறிப்பிட்டார்..
ஈ.பி.ஆர். எல்.எவ். தலைவர்களின் இறுதிச்சடங்குகளை நடத்துவதற்கு அதிகாரிகளும் எவ்வாறு உதவினார்கள் என்பதை சிறீதரன் திருநாவுக்கரசு நினைவுபடுத்துகிறார்.
முதலில் வெளிநாட்டு பிரஜைகளின் பூதவுடல்கள் அரசாங்க எஸ்டேட்டில் உள்ள ராஜாஜி மண்டபத்துக்கு அண்மையாக மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுவதற்கு அனுமதிக்கப்பட்டது. அந்த நேரத்தில் ஈ.பி.ஆர்.எல்.எவ். உறுப்பினர்களுக்கு இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தந்த தார்மீக மற்றும் உணர்வுபூர்வமான ஆதரவு பெரிதும் நினைவுகூரத்தக்கது என்று அவர் கூறினார்.
ஒரு வருடத்திற்குள் மாநிலத்தில் அதுவும் ஜனாதிபதி ஆட்சியின் கீழ் இன்னொரு அதிர்ச்சிகரமான சம்பவம் இடம்மெற்றது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி ஒரு பொலிஸ் சுப்பிரிண்டன் உட்பட 15 பேருடன் சேர்த்துக் கொல்லப்பட்டார்.
ரி. இராமகிருஷ்ணன்
( தி இந்து )