காவற்துறையினரை மோதி விபத்துக்குள்ளாக்கும் விதத்தில் டிப்பர் வாகனத்தை செலுத்தி தப்பி சென்ற டிப்பர் வாகன சாரதியை சுமார் 04 கிலோ மீற்றர் தூரம் துரத்தி சென்று காவற்துறையினர் கைது செய்துள்ளனர்.

பளை பகுதியில் இருந்து மணல் ஏற்றி வந்த டிப்பர் வாகனத்தினை நுணாவில் பகுதியில் சாவகச்சேரி காவற்துறையினர் மறித்த வேளை வாகனத்தினை காவற்துறையினரை மோதும் விதமாக செலுத்தி அங்கிருந்து டிப்பர் வாகனத்துடன் சாரதி தப்பியோடியுள்ளார் .

தப்பியோடிய டிப்பர் வாகனத்தினை காவற்துறையினர் தமது வாகனத்தில் துரத்தி சென்று சுமார் 4 கிலோ மீற்றர் தூரத்தில் மட்டுவில் பகுதியில் வீதி வளைவொன்றில் டிப்பர் வாகனத்தினை மேற்கொண்டு செலுத்த முடியாத நிலையில் வாகனத்தினை கைவிட்டு சாரதி தப்பி செல்ல முற்பட்ட வேளை பின் தொடர்ந்து சென்ற காவற்துறையினர் சாரதியை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சாரதியையும் , மீட்கப்பட்ட டிப்பர் வாகனத்தினையும் , சாவகச்சேரி காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ள காவற்துறையினர் சாரதியிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

அனுமதியின்றி மணல் ஏற்றி வந்தமை, சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி வாகனம் செலுத்தியமை, காவற்துறையினரின் சமிக்கைக்கு கட்டுப்படாமை, விபத்தை ஏற்படுத்தும் வகையில் வாகனம் செலுத்தியமை,

பிரதான வீதியில் ஆபத்தான முறையில் வாகனத்தை செலுத்தியமை போன்ற பல்வேறு குற்றச்சாட்டுக்களின் கீழ் சாரதிக்கு எதிராக சாவகச்சேரி நீதிமன்றில் வழக்கு தொடர காவற்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்

 

Share.
Leave A Reply