ஈரான் அணுவாயுதத்தை உற்பத்தி செய்யும் கட்டத்தை அடைந்து விட்டது. அதனை தடுத்தாக வேண்டும் என்று கூறி கடந்த 13 ஆம் திகதி (ஜுன்) முதல் ஈரான் மீதான தாக்குதல்களை இஸ்ரேல் ஆரம்பித்தது.
சுமார் 12 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட இப்போரின் போது ஈரானின் அணுசக்தி நிலையங்கள், இராணுவ கட்டமைப்புக்கள், உட்கட்டமைப்பு வசதிகள், படைத் தளபதிகள், அணு விஞ்ஞானிகள் என பேதமின்றி அனைத்தும் குறித்து வைத்து தாக்கப்பட்டன.
அதிலும் ஈரானின் நடான்ஸ், போர்டோவ், இஸ்பகான் அணுசக்தி நிலையங்கள் மீது பல தடவைகள் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. இத்தாக்குதல்களுக்கு பதிலடியாக ஈரானும் இஸ்ரேல் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை முன்னெடுக்கவே செய்தது.
என்றாலும் இஸ்ரேலின் இத்தாக்குதல்கள் திடீரென திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டவை அல்ல என்பதை அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பில் கிளிங்டனின் கூற்றுக்கள் எடுத்துக்காட்டுகின்றன.
நான் ஜனாதிபதி பதவியில் இருக்கும் போதே (1993-2001) ஈரான் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டமிட்டார் என்றுள்ளார் அவர்.
அதேநேரம் அமெரிக்க ஜனாதிபதியான பரக் ஒபாமாவின் பதவிக் காலத்திற்கு (2009-2017) முன்னர், ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தவும் இஸ்ரேல் ஒரு திட்டத்தைத் தயாரித்த விடயமும் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
போக்குவரத்து ஹெலிகொப்டர்களைப் பயன்படுத்தி கமாண்டோக்களை அவ்விடத்தில் தரையிறக்கி, அவர்கள் உள்ளே சண்டையிட அனுமதிக்கவும் அதன் ஊடாக வெடிபொருட்களை நிரப்பி உள்ளே இருந்து வெடிக்கச் செய்யவும் திட்டமிடப்பட்டிருந்ததே அத்திட்டமாகும்.
இத்திட்டம் சம்பந்தப்படுபவர்களுக்கு மிகவும் ஆபத்தானது என்பதால் அதனை இஸ்ரேல் அன்று ஈரானில் முன்னெடுக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் ஈரானின் ஏவுகணை மற்றும் அணுசக்தி திட்டத்தை முற்றிலும் அழிப்பதே தமது நோக்கம் என்று குறியுள்ள இஸ்ரேலின் பிரதமர், இஸ்ரேலின் இருப்புக்கே அது ஓர் அச்சுறுத்தல் எனவும் கூறியுள்ளார்.
ஆனால் தனது அணுசக்தித் திட்டம் முற்றிலும் அமைதியானது என்றும் அணு ஆயுதத்தை உருவாக்க தாம் ஒருபோதும் முயற்சி செய்யவில்லை என்று ஈரான் கூறி வருகிறது.
ஈரானின் அணுசக்தி திட்டத்தை சர்வதேச அணுசக்தி முகவரகம் கடந்த 20 வருடங்களாக கண்காணித்து வருகிறது.
35 நாடுகள் அங்கம் வகிக்கும் இம்முகவரகம் இத்தாக்குதல் நடத்தப்படுவதற்கு முதல் நாள் நடத்திய கூட்டத்தில், ஈரான் தனது அணுசக்திப் பரவல் தடைகளை மீறியுள்ளதாக முதன்முறையாகக் குறிப்பிட்டது.
அது தொடர்பில் நிறைவேற்றிய பிரேரணைக்கு அமெரிக்கா, பிரான்ஸ், பிரித்தானியா உள்ளிட்ட 19 நாடுகள் ஆதரவாகவும் ரஷ்யா, சீனா, புர்கினோ பாசோ ஆகிய நாடுகள் எதிராகவும் வாக்களித்தன. 11 நாடுகள் இவ்வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.
அதனைத் தொடர்ந்து அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட ஆயுதக் கட்டுப்பாட்டு சங்கத்தின் அணுசக்தி பரவல் தடுப்பு கொள்கைக்கான பணிப்பாளர் கெல்சி டேவன்போர்ட், ஃபோர்டோவ் தளம் செயல்பாட்டில் இருக்கும் வரை, ஈரான் அணுவாயுதம் தொடர்பான அபாயத்தை ஏற்படுத்தும் நிலைமையில் தான் இருக்கும்.
அத்தளத்தில் செறிவூட்டலை அதிகரிக்கவோ அல்லது யுரேனியத்தை வேறு இடத்துக்கு மாற்றவோ ஈரானுக்கு வாய்ப்பு இருக்கிறது” என்று கூறினார்.
இவ்வாறான நிலையில் மறுநாள் 13 ஆம் திகதி ஈரானின் அணுசக்தி நிலையங்கள் உள்ளிட்ட பல முக்கிய இலக்குகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.
அதன் ஊடாக நடான்ஸில் யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தின் தரைக்கு மேலே உள்ள பகுதியை அழித்ததாக இஸ்ரேல் கூறியது. இதனால் அங்கு மின் இழப்பு ஏற்பட்டுள்ளதோடு அந்நிலையத்தில் உள்ள நிலக்கீழ் செறிவூட்டல் கூடங்களுக்கும் சேதம் ஏற்பட்டிருக்கலாம் என்றது சர்வதேச அணுசக்தி முகவரகம்.
அம்முகவரகத்தின் தலைவரான ரஃபேல் க்ரோஸி, இஸ்ரேல் முதல் நாள் நடத்திய தாக்குதலில் நடான்ஸ் அணுசக்தி நிலையம் முற்றிலும் அழிக்கப்படாவிட்டாலும் கடுமையாகச் சேதமடைந்துள்ளது.
இஸ்ஃபஹான் நிலையத்தில் நான்கு கட்டடங்கள் வெளிப்படையாக சேதமடைந்துள்ளன. ஃபோர்டோவ் நிலையத்திற்கு, எந்தத் தீங்கும் ஏற்படவில்லை, அதைத் தாக்குவது ஒரு சவால் மிக்க காரியம் என்று கூறினார்.
இத்தாக்குதல்களைத் தொடர்ந்து வியன்னாவில் நடந்த சர்வதேச அணுசக்தி முகவரகத்தின் அவசரகால அமர்வில் பேசிய அவர், சேதமடைந்த நடான்ஸ் தளத்திலிருந்து கதிர்வீச்சு மற்றும் இரசாயன மாசுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனாலும் நடான்ஸ், இஸ்ஃபஹான் அணுசக்தி தளங்களுக்கு வெளியே கதிர்வீச்சு அளவுகள் சாதாரணமாகவே காணப்படுகிறது என்றுள்ளார்.
இந்நிலையங்கள் மீதான ஒவ்வொரு தாக்குதல்களின் பின்னரும் அணுசக்தி முகவரகத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்த கூற்றுக்கள் அந்நிலையங்கள் மீது இஸ்ரேல் மீண்டும் மீண்டும் தாக்குதல்கள் நடத்த துணைபுரிகின்றனவா என்ற கேள்வியையும் பரவலாக ஏற்படுத்தியது. இந்நிலையங்கள் மீதான தாக்குதல்களுக்கும் க்ரோஸியின் அறிவிப்புகளுக்கும் இடையில் தொடர்பு இருக்கலாமோ என்ற ஐயமும் நிலவவே செய்கிறது.

இவ்வாறு உச்சபட்ச கொதிநிலையடைந்துள்ள ஈரான் அணுசக்தி திட்டத்தின் இரண்டாவது முக்கிய தளமான ஃபோர்டோ எரிபொருள் செறிவூட்டல் நிலையம் தெஹ்ரானுக்கு தென்மேற்கே சுமார் 95 கிலோ மீற்றர் தூரத்தில் காணப்படும் ஹசன்அகா மற்றும் ஃபோர்டோ மலை சிகரங்களுக்கு இடையில் ஆழமான பள்ளத்தாக்கில் 80-90 மீற்றர் (260-300 அடி) வரையான ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
வான்வழித் தாக்குதல்கள் மற்றும் பதுங்குகுழிகளை தாக்கியழிக்கும் குண்டுகளில் இருந்து பாதுகாப்பு பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் இது அமைக்கப்பட்டுள்ள இந்நிலையத்தின் நிர்மாணப்பணிகள் 2006 அளவில் தொடங்கியதாக நம்பப்படுகிறது. இது 2009 இல் செயற்பாட்டுக்கு வந்ததோடு அதனை ஈரான் அதிகாரபூர்வமாக ஒப்புக்கொண்டது.
இவ்வாறு ஆழத்தில் அணுசக்தி செறிவூட்டல் நிலையத்தை ஈரான் அமைப்பதற்கு காரணம் இல்லாமல் இல்லை என்பதே ஆய்வாளர்களின் கருத்தாகும்.
அதாவது 1981 இல் ஈராக்கின் அணுசக்தி நிலையத்தின் மீது இஸ்ரேல் திடீரென தாக்குதல் நடத்தி அழித்தது. அதனை கருத்தில் கொண்டு தான், ஃபோர்டோவின் இரண்டு செறிவூட்டல் மண்டபங்களை ஈரான் மலைகளுக்குள் அரை மைல் ஆழத்தில் அமைத்திருக்குமென லண்டனின் த டெலிகிராப் தெரிவித்திருக்கிறது.
என்றாலும் 2015 இல் ஈரான், கூட்டு விரிவாக்கல் நடவடிக்கைத் திட்டத்தின் (ஜே.சி.பி.ஒ.ஏ) கீழ், ஃபோர்டோவில் செறிவூட்டலை நிறுத்தி, அவ்விடத்தை ஒரு ஆராய்ச்சி மையமாக மாற்ற ஒப்புக்கொண்டது.
இருப்பினும், 2018 ல் அமெரிக்கா ஒப்பந்தத்திலிருந்து விலகிய பிறகு, ஈரான் அந்நிலையத்தில் யுரேனியம் செறிவூட்டலை மீண்டும் தொடங்கியது.
இந்நிலையத்தின் மீது 13 ஆம் திகதி முதல் பல தடவைகள் இஸ்ரேல் குண்டுகளை வீசியது. அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட பதுங்கு குழிகளை தாக்கியழிக்கும் ஜி.பி.யூ-28, பி.எல்.யூ-109 ஆகிய குண்டுகளை எப்-15 போன்ற போர் விமானங்களைப் பயன்படுத்தி இங்கு வீசியுள்ளன. இவை நிலத்திற்குள் மிகவும் ஆழமற்ற இலக்குகளை ஊடுருவி தாக்கக்கூடிய குண்டுகளாகும்.
ஆனாலும் ஃபோர்டோவ் அணுசக்தி நிலையம் போன்ற வலுவூட்டப்பட்ட தளங்களின் அதிக ஆழத்தை அடையும் திறன் கொண்ட குண்டுகள் இஸ்ரேலிடம் இல்லை.
அதனால் ஃபோர்டோவை முடக்கவோ அல்லது குறைந்தபட்சம் அந்த வசதியை பயனற்றதாக மாற்றவோ முடியாது.
இது அதிக வலிமை கொண்ட உருக்கினால் அமைக்கப்பட்டுள்ளது. அதனை அமெரிக்காவின் பல மேம்பட்ட ஆயுதங்களைப் பயன்படுத்தினால் தான் செயலற்றதாக்க முடியும் என்று இஸ்ரேலும் அதன் நேச அணியினரும் கருதுகின்றனர்.
இந்நிலையில் தான் இந்நிலையங்கள் மீது பி. 2 குண்டு வீச்சு விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்துமாறு இஸ்ரேல் அமெரிக்காவை பல வாரங்களாகக் கோரி வந்தது.
அற்கேற்ப பி 2 குண்டு வீச்சு விமானங்களைக் கொண்டு மிட்நைட் ஹம்மர் என்ற பெயரில் கடந்த 22ஆம் திகதி ஃபோர்டோ, நடானஸ், இஸ்பகான் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா ஜி.பி.யூ-57 ரக குண்டுகளை வீசியது. அதனை ட்ரம்ப்பே உறுதிப்படுத்தியதோடு தாக்குதலைப் பார்வையிடும் படங்களையும் அவர் வெளியிட்டார். இந்நிலையங்கள் மீளமைக்க முடியாதபடி சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
ஆனால் தாக்குதல் நடத்தப்படுவதற்கு இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னர் 60 சதவீதம் வரை செறிவூட்டப்பட்ட 400 கிலோவுக்கும் மேற்பட்ட யூரேனியத்தைப் பாதுகாப்பாக வேறு இடத்திற்கு மாற்றிவிட்டதாக ஈரானிய தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அத்தோடு போர்டோவ் அணுசக்திப் பகுதியில் வழமைக்கு மாறாக 18-20 ட்ராக்குகள் வரிசையில் காணப்பட்ட செய்மதிப் படங்களையும் சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டன.
அதேநேரம் அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ இந்த அணுசக்தி நிலையம் இக்குண்டுத்தாக்குதலால் பாதிக்கப்படவில்லை என்றுள்ளது.
ஆறு மீற்றர் நீளம் கொண்ட 30 ஆயிரம் இறாத்தல் (14 ஆயிரம் கிலோ) எடை கொண்ட 14 குண்டுகள் இத்தாக்குதலில் பயன்படுத்தப்பட்டதாக அமெரிக்க, இஸ்ரேலிய அதிகாரிகளும் நிபுணர்களும் கூறியுள்ளனர்.
இக்குண்டுகளானது வெடிப்பதற்கு முன் 200 அடி (61 மீற்றர்) வரை நிலத்துக்குள் ஊடுருவிச் சென்று வெடித்து சிதறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதென அமெரிக்க விமானப்படை தெரிவித்துள்ளது.
அதனால் இந்த ஜி.பி.யூ-57 குண்டுகள் நிலத்திற்குள் ஊடுருவும் தூரம், ஈராக்கின் அணுசக்தி நிலையம் தாக்கப்பட்டமை உட்பட கடந்த கால நிகழ்வுகளில் பெற்ற அனுபவங்களின் பின்னணியில் தான் போர்டோவ், நடான்ஸ் நிலையங்களை ஈரான் அமைத்திருக்கும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையம் 80- – 90 மீற்றர் ஆழத்தில் அமைக்கப்பட்டிருப்பதும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். அதனால் இந்நிலையத்தை இக்குண்டுகள் தாக்கி இருக்குமா என்ற கேள்வியும் எழவே செய்கிறது.
மர்லின் மரிக்கார்