– மூவருக்கு 90 நாட்கள் தடுப்புக் காவல் விதிப்பு

நாட்டில் யுத்தம் இடம்பெற்ற காலத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளால் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களை தெற்கின் பாதாள உலக உறுப்பினர்கள் மற்றும் திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்ட குழுக்களுக்கு வாடகைக்கு வழங்கிய குற்றச்சாட்டின் பேரில், கைதுசெய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களை 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்க கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன அனுமதி வழங்கியுள்ளார்.

கடந்த ஜூலை 21 ஆம் திகதியன்று கிரிபத்கொடை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட ஒரு சந்தேகநபரால் தெரிவிக்கப்பட்ட தகவலுக்கமைய, டி56 ரக துப்பாக்கி, 30 தோட்டாக்களுடன் மூன்று சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டதாக பயங்கரவாத விசாரணைப் பிரிவு அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

அதன்படி, 56 ரக துப்பாக்கியை வவுனியாவிலிருந்து கொழும்புக்கு கொண்டுச்சென்று, குற்றமொன்றுக்காக, அதனை மூன்றாம் தரப்பினரிடம் ஒப்படைத்து, அதன் பின்னர் வவுனியாவிற்கு திருப்பியனுப்பும் திட்டங்கள் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டதாக பயங்கரவாத விசாரணைப் பிரிவு அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

விசாரணையின்போது பெறப்பட்ட தகவல்களுக்கமைய வவுனியா குற்றப்பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் குழு முக்கிய சந்தேக நபருடன் நெருங்கிய தொடர்புடைய இரு சந்தேகநபர்களை செட்டிகுளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நேரியகுளம் பகுதியில் வைத்து கைதுசெய்துள்ளனர்.

சந்தேகநபர்களின் வீடு மற்றும் தோட்டத்திற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களையும் பொலிஸார் பறிமுதல் செய்ததாக அவர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், தமிழீழ விடுதலைப்புலிகளின் கால ஆயுதங்கள் தெற்கில் குற்றச் செயல்களில் பயன்படுத்துவதற்காக சேமித்து வைக்கப்பட்டிருந்தனவா? அல்லது பணத்திற்காக பாதாள உலகக்குழு மற்றும் திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுக்களுக்கு வாடகைக்கு விடப்பட்டதா? என்பதைத் தீர்மானிக்க விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

Share.
Leave A Reply