“கேரள மாநிலம் கொச்சி பானர்ஜி சாலையில் உள்ள ஒரு பாருக்கு கடந்த 24-ந்தேதி இரவு நடிகை லட்சுமி மேனன் மற்றும் அவரது நண்பர்கள் சிலர் சென்றிருந்தனர்.
அப்போது அவர்களுக்கும், மற்றொரு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டிருக்கிறது.இரு தரப்பினரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பாரில் பரபரப்பு ஏற்பட்டது.
பின்பு அவர்கள் நள்ளிரவு நேரத்தில் பாரில் இருந்து புறப்பட்டு வெளியே சென்றனர். அப்போது நடிகை லட்சுமி மேனன் தரப்பினர், தங்களிடம் தகராறு செய்த எதிர் தரப்பை சேர்ந்த ஐ.டி. ஊழியரான ஆலுவாவை சேர்ந்த அலியார் ஷா சலீம் என்பவரை தங்களது காரில் கடத்தி தாக்கியதாக தெரிகிறது.
பின்பு அவரை ஆலுவா-பரவூர் சந்திப்பில் இறக்கிவிட்டு சென்றிருக்கின்றனர். இந்த சம்பவம் குறித்து ஐ.டி. ஊழியர் எர்ணாகுளம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
தன்னை காரில் கடத்தி தாக்கியபோது லட்சுமிமேனன் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் இருந்ததாக அலியார் ஷா சலீம் தனது புகாரில் தெரிவித்திருந்தார்.
அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் ஐ.டி. ஊழியர் கடத்தல் தொடர்பாக நடிகை லட்சுமி மேனனின் ஆண் நண்பர்கள் மிதுன், அனீஷ் ஆகிய 2 பேரை எர்ணாகுளம் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
காரில் கடத்திச் சென்று தாக்கியபோது நடிகை லட்சுமிமேனன் இருந்ததாக புகார் கொடுத்திருக்கும் ஐ.டி.ஊழியர் தெரிவித்துள்ளார்.
இதனால் போலீசாரின் முதல் தகவல் அறிக்கையில் ஐ.டி.ஊழியர் காரில் கடத்தி தாக்கப்பட்டபோது நடிகை லட்சுமி மேனனும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் கடத்தல் சம்பவம் தொடர்பாக நடிகை லட்சுமி மேனனிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்தனர்.
ஆனால் அவர் தலைமறைவாகிவிட்டார். அவர் எங்கு இருக்கிறார் என்பதும் தெரியவில்லை. இதனால் நடிகை லட்சுமி மேனனை எர்ணாகுளம் போலீசார் தேடி வருகின்றனர்.
ஐ.டி. ஊழியர் கடத்தி தாக்கப்பட்ட வழக்கில் நடிகை லட்சுமி மேனனை போலீசார் தேடி வரும் சம்பவம் தமிழக மற்றும் கேரள திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
2011ஆம் ஆண்டு வினயன் இயக்கிய ‘ரகுவிண்டெ சுவந்தம் ரசியா’ படத்தின் மூலம் அறிமுகமானவர் லட்சுமி மேனன். அதன் பிறகு கும்கி, சுந்தரபாண்டியன், கொம்பன், றெக்க உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.”,