மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மணமுனை பாலத்தின் கீழ் உள்ள வாவியில் வலை வீசி மீன் பிடிப்பதற்காக சென்ற நபர், வெள்ளிக்கிழமை (29) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.எம்.ஐ.ரத்நாயக்க தெரிவித்தார்.

வியாழக்கிழமை (28) பகல் 1 மணி அளவில் மீன்பிடிக்கச் சென்ற குறித்த நபரை காணவில்லை என உறவினர்கள் தேடிக் கொண்டிருந்த நிலையில் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஆற்றில் இறங்கிய இவர் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது ஆழமான பகுதிக்கு தவறுதலாக சென்றதால் அதிலிருந்து மீள முடியாமல் காணாமல் போயுள்ளதாக தெரியவருகிறது.

கோவில் குளம் பிரதேசத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான 49 வயதுடைய கறுவல் தம்பி தங்கவேல் என்பவரே உயிரிழந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் அழைப்பின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற திடீர் மரண விசாரணை அதிகாரி வடிவேல் மணிகரன் முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டு, உடற்கூற்று பரிசோதனைக்காக சடலத்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தார்.

மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Share.
Leave A Reply