கனடாவில் இலங்கைத் தமிழ் தம்பதியரின் மகன் சுட்டுக் கொல்லப்பட்ட விடயம் தொடர்பில் 17 வயது இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கனடாவின் ஒன்ராறியோவிலுள்ள Scarboroughவில் வாழ்ந்துவரும் அமலதாஸ் மரியதாசன், ஜூடின் பாசில் தம்பதியரின் மகன் டானியல் அமலதாஸ்.
அமலதாஸ் மரியதாசன், ஜூடின் பாசில் தம்பதியர், 1993ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து கனடாவுக்கு புலம்பெயர்ந்தவர்கள் ஆவர். தம்பதியருக்கு கனடாவில் பிறந்த மகன் டானியல் அமலதாஸ் (19).
கடந்த வியாழக்கிழமை, அதாவது, ஆகத்து மாதம் 21ஆம் திகதி, 2.00 மணியளவில், Scarborough டவுன் சென்றரிலுள்ள ஷாப்பிங் மாலுக்கு எதிரே பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்திருக்கிறார்கள் அமலதாஸ் ஜூடின் தம்பதியர்.
அப்போது திடீரென பொலிசாரும் மருத்துவ உதவிக்குழுவினரும் ஷாப்பிங் மாலுக்கு விரைய, யாருக்கோ ஏதோ பிரச்சினை என்பதை அறிந்துள்ளார்கள் அமலதாஸ் ஜூடின் தம்பதியர்.
ஆனால், அவர்களுக்குத் தெரியாது, அங்கு ஒரு இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்டதும், அது தங்கள் மகன் டானியல்தான் என்பதும்.
பின்னர் அவர்கள் வீடு திரும்பிய நிலையில், மகனைக் காணாமல் அவனை மொபைலில் அழைக்க, மகனை தொடர்புகொள்ள முடியவில்லை.
டானியல் வீடு திரும்பவேயில்லை. மாறாக, வீட்டுக்கு பொலிசார்தான் வந்துள்ளார்கள். பொலிசார் துப்பாக்கிச்சூடு குறித்து கூறியபோதுதான் ஷாப்பிங் மாலில் தங்கள் மகன் கொல்லப்பட்டது குறித்து அவர்களுக்குத் தெரியவந்துள்ளது.
மகனை இழந்த தம்பதியர் கண்ணீர்
டானியலை கொலை செய்ததாக 17 வயது இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளாரக்ள்.
தங்கள் மகனுக்கு எதனால் இப்படி நடந்தது என்று தங்களுக்குத் தெரியவில்லை என்று கூறும் அமலதாஸ் ஜூடின் தம்பதியர் கண்ணீர் விட்டுக் கதறிக்கொண்டிருக்கிறார்கள்.
கனடா பாதுகாப்பான நாடு, எங்கள் பிள்ளைகள் இங்கு பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்று நினைத்தோம் என்கிறார் ஜூடின். மகனை இழந்து கதறும் அவர்களுக்கு ஆறுதல் சொல்ல வார்த்தையில்லை!