வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்கிரமசேகர சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம், சுமார் 15 இலட்சம் ரூபாய் ஒப்பந்தத்தின் பேரில் நடத்தப்பட்டது என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொலையாளி கைது செய்யப்பட்டபோது, இந்தக் கொலை ‘டுபாய் லொக்காவின்’ ஒப்பந்தத்தின் பேரில் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
சம்பவத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் உட்பட 6 சந்தேக நபர்களிடம் பொலிஸ் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு தற்போது விசாரணை நடத்தி வருகிறது.
வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்கிரமசேகர கடந்த புதன்கிழமை, பிரதேச சபையின் பொது மக்கள் தினத்தில் தனது அலுவலகத்தில் இருந்தபோதே சுட்டுக் கொல்லப்பட்டார்.
மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்ற சந்தேக நபர்களைக் கண்டுபிடிக்க பல விசேட பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை ஆரம்பித்தன.
இதற்காக சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரணை நடத்தப்பட்டு வந்தது.
இதன்படி, சந்தேக நபர்கள் கேகிராவ பகுதியில் மறைந்திருப்பது அடையாளம் காணப்பட்டது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள், மேலும் பல பொலிஸ் குழுக்களுடன் இணைந்து, நேற்று (26) அதிகாலை கேகிராவ 50 வீட்டு தொகுதி பகுதியில் பயன்படுத்தப்படாத காணியில் இருந்த வீட்டினை முற்றுகையிட்டனர்.
அங்கு பெண் ஒருவர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களில் கொலைச் சம்பவத்தின் போது மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவரும் கைதாகியிருந்தார்.

