2022 ஆம் ஆண்டில் கோட்டாபய அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் உச்சத்தில் இருந்தபோது, நிட்டம்புவ நகரில் வைத்து பொலனறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல மற்றும் அவரது பாதுகாப்பு அதிகாரி ஆகியோர் கொலை செய்யப்பட்ட வழக்கில், தீர்ப்பு அறிவிக்கப்படும் நாள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இந்த இரட்டைக் கொலை வழக்கின் தீர்ப்பு 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14 ஆம் திகதி அன்று வெளியிடப்படும் என்று கம்பஹா மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய விசேட நீதிபதிகள் ஆயம் அறிவித்துள்ளது.

2022 ஆம் ஆண்டு மே மாதம், இலங்கை மிகப் பெரிய பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகி இருந்த காலகட்டத்தில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசுக்கு எதிராக நாடு முழுவதும் மக்கள் வீதியில் இறங்கி பாரிய ஆர்ப்பாட்டங்களை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் 2022 மே 9 ஆம் திகதியன்று, ஆளும் கட்சி ஆதரவாளர்கள் கொழும்பில் உள்ள காலிமுகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆர்ப்பாட்டக்காரர்களைத் தாக்கியதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் வன்முறை வெடித்தது.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல, தமது வாகனத்தில் கொழும்பில் இருந்து பொலனறுவைக்குச் சென்று கொண்டிருந்தபோது, நிட்டம்புவ நகரில் போராட்டக்காரர்களால் வழிமறிக்கப்பட்டார்.

அந்தச் சந்தர்ப்பத்தில் ஏற்பட்ட மோதலில், அவர் தமது பாதுகாப்பு அதிகாரியுடன் கட்டடமொன்றுக்குள் தஞ்சம் புகுந்தார். பின்னர், அவரும் அவரது பாதுகாப்பு அதிகாரியும் அங்கு துப்பாக்கிச்சூட்டுக் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

Share.
Leave A Reply