டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடித்த சம்பவம் நடந்து 2 நாட்கள் கடந்துவிட்டன. இதில் குறைந்தபட்சம் 9 பேர் உயிரிழந்துள்ளனர்; 24 பேர் காயமடைந்துள்ளனர்.

தற்போது கூட்ட நெரிசல் மிக்க சாலையில் வெள்ளை நிற ஐ20 கார் வெடிக்கும் தருணத்தைக் காட்டும் சிசிடிவி வீடியோ வெளியாகியிருக்கிறது. செங்கோட்டை மெட்ரோ நிலையத்தின் கேட் எண் 1 அருகே பொருத்தப்பட்டிருந்த போக்குவரத்து கேமராவில் இந்த காட்சிகள் பதிவாகியுள்ளன.

இதில், மெதுவாக நகரும் வெள்ளை நிற ஹூண்டாய் ஐ 20 கார் நெருக்கமாக ஆட்டோக்கள், ரிக்‌ஷாக்கள் மற்றும் மற்ற வாகனங்களால் சூழப்பட்டிருப்பதைக் காணலாம்.

சிசிடிவியில் காட்சிகள் தடைபடும் வண்ணம் சக்தி வாய்ந்தததாக வெடிப்பு நிகழ்ந்துள்ளது. தொடர்ந்து கார் மற்றும் பிற வாகனங்கள் தீப்பற்றி எரிவதைக் காண முடிகிறது. வெடிப்பின் அதிர்வில் சில மீட்டர்கள் தூரத்தில் இருந்த கட்டடங்கள், வாகனங்களும் சேதமடைந்துள்ளன.

மத்திய அரசு “கொடூரமான பயங்கரவாதச் செயல்” என்று விவரிக்கும் இந்த சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) முறையாக விசாரணை நடத்தி வருகிறது.

சிசிடிவி காட்சிகளின்படி சரியாக 6:51 மணிக்கு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. விசாரணையில் வெடித்த காரின் எண் HR 26CE7674 எனக் கண்டறிந்துள்ளனர். Dr உமர் நபி என்பவரால் அந்த கார் ஓட்டிச்செல்லப்பட்டிருக்கிறது,

32 வயது மருத்துவரான அவருக்கு பாகிஸ்தானை தளமாகக் கொண்ட ஜெய்ஷ்-இ-முகமது (JeM) பயங்கரவாத அமைப்போடு தொடர்பு இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

கடந்த சில வாரங்களாக தீவிரவாத தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. இவர்களை ‘வொயிட் காலர் தீவிரவாத தொகுதி’ என அதிகாரிகள் அழைக்கின்றனர். இதுவரை 20 முதல் 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

 

 

Share.
Leave A Reply