சீமெந்து தூள் ஏற்றிச் சென்ற கனரக வாகனத்துடன் முச்சக்கர வண்டி மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் உயிரிழந்துள்ள சம்பவம் கொழும்பு – சிலாபம் பிரதான வீதியின் கொச்சிக்கடை எனும் இடத்தில் சனிக்கிழமை (22) இரவு 10.00 மணியளவில் நிகழ்ந்துள்ளது.

கொச்சிக்கடை – மனவேரிய பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய சிவலிங்கம் யோகராஜா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

விபத்தில் சிக்கிய முச்சக்கர வண்டியில் மேலும் இருவர் பயணித்ததுடன், அவர்களுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

சீமெந்து தூள் ஏற்றிச் சென்ற கனரக வாகனம் புத்தளத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த போது கொச்சிக்கடை நகரின் பிரதான வீதியூடாக வந்த முச்சக்கர வண்டி கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி கவிழ்ந்து குறித்த கனரக வாகனத்தின் மீது மோதியுள்ளதுடன் இதன்போது முச்சக்கர வண்டியின் ஓட்டுநர் வாகனத்திலிருந்து தூக்கி வீசப்பட்டு, குறித்த கனரக வாகனத்தில் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

விபத்துடன் தொடர்புடைய கனரக வாகனம் பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான விசாரணைகளை கொச்சிக்கடை பொலிஸ் போக்குவரத்து பிரிவின் அதிகாரி அனுராத தேசப்பிரிய தலைமையிலான அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply