நுகேகொடையில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் பொதுக்கூட்டத்தில், நாமல் ராஜபக்ஷ உரையாற்றும் நேரத்தில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதித் லோக்குபண்டார கைத்துப்பாக்கியுடன் மேடையில் நின்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரது கழுத்துப்பை, கைப்பிடியில் இருந்த துப்பாக்கி, மற்றும் “சுடத் தயார்நிலை” போன்ற அணுகுமுறைகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.
இதையடுத்து, பாதுகாப்பமைச்சு இந்த சம்பவம் தொடர்பான விசாரணையை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளது. குறிப்பாக,
உதித் லோக்குபண்டார வைத்திருந்த துப்பாக்கி சட்டரீதியானதா?
பாதுகாப்பு அனுமதியுடன் இருந்தாலும், பொதுமக்கள் முன் இவ்வாறு கையாள அனுமதிக்கலாமா?
என்ற கோணங்களில் விசாரணை நடைபெறவுள்ளது.
நுகேகொட பகுதியின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம், உதித் லோக்குபண்டாரிடம் விளக்கம் கோரியுள்ளது. மேலும், இந்த சம்பவம் குறித்து உதித் மற்றும் நாமல் ராஜபக்ஷ ஆகியோரிடமும் வாக்குமூலம் பெற பொலிஸார் தயாராகி வருகின்றனர்.
இதேவேளை, கைத்துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நாமல் ராஜபக்ஷ அறியவில்லை என பொதுஜன பெரமுன வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

