சீழ்ரற்ற வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப் பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான பெல் – 212 ரக உலங்குவானூர்தி நேற்றையதினம் (நவம்பர் 30, 2025) வென்னப்புவ, லுணுவிலப் பிரதேசத்தில் ஆற்றில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.
லுணுவில பாலத்திற்கருகில் உணவுப் பொருட்கள் உள்ளிட்ட உபகரணங்களை வழங்கிக் கொண்டிருந்தபோது, உலங்குவானூர்தி அவசரமாகத் தரையிறக்க முற்பட்டு அருகில் உள்ள ஆற்றில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தின்போது, விமானிகள் இருவர் உட்பட 5 விமானப்படை உறுப்பினர்கள் உலங்குவானூர்தியில் இருந்துள்ளனர். பிரதேசவாசிகள் மற்றும் பொலிஸாரின் உதவியுடன் அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
எனினும், பிரதான விமானி விங் கமாண்டர் நிர்மால் சியம்பலாபிட்டிய (41 வயது) உயிரிழந்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்த விமானி, 3,000 மணித்தியாலங்களுக்கும் மேல் விமானப் பயண அனுபவத்தைக் கொண்ட மிகவும் அனுபவம் வாய்ந்தவர் என இலங்கை விமானப்படை விசேட குறிப்பொன்றில் தெரிவித்துள்ளது.
உருக்கமான சமூக ஊடகப் பதிவு: “ஒரு இளம் மகனின் அன்பான தந்தையான நிர்மல், நேற்று டிட்வா சூறாவளியால் அகால மரணமடைந்த இலங்கையர்களின் வரிசையில் இணைந்தார், விலைமதிப்பற்ற இலங்கை விமானியாக நாட்டின் இதயங்களில் அழியாத நினைவை விட்டுச் சென்றார்.”
இந்த விபத்தில் மேலும் நான்கு விமானப்படை அதிகாரிகள் காயமடைந்து மாரவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

