பாடசாலை மாணவி ஒருவர் பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு கர்ப்பமான சம்பவம் தொடர்பில், தலைமறைவாகியிருந்த பிரதான சந்தேகநபர் 55 நாட்களின் பின்னர் கல்முனை தலைமையக பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அம்பாறை மாவட்டம், கல்முனை கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் கனிஷ்ட பிரிவில் கல்வி கற்று வந்த மாணவியே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த மாணவி கல்முனையில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பெண் குழந்தை ஒன்றை பிரசவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் விவாகரத்து பெற்றுப் பிரிந்து வாழ்கின்றனர். குடும்பத்தில் இரண்டாவது பிள்ளையான குறித்த மாணவி, தனது தாயாருடன் ஏற்பட்ட தகாத தொடர்பில் இருந்த நபரினாலேயே பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டுள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

பாதிக்கப்பட்ட மாணவி கடந்த இரண்டு மாதங்களாக பாடசாலைக்குச் செல்லாதது குறித்து பாடசாலை நிர்வாகம் மாணவியின் தாயாரிடம் வினவியுள்ளது.

இதன்போது தாயார் முரண்பாடான பதில்களை வழங்கியதால் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, விடயத்தை அறிந்த மாணவியின் தந்தை, கடந்த 2025.12.01 அன்று கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

முறைப்பாட்டிற்கமைய கல்முனை தலைமையக பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவு பொலிஸார் விரிவான விசாரணைகளை மேற்கொண்டனர்.

இச்சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் மாணவியின் தாயார் முன்னதாக கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில், இச்சம்பவத்துடன் தொடர்புடைய 45 வயதுடையவரும் இரண்டு பிள்ளைகளின் தந்தையுமான பிரதான சந்தேகநபர் தலைமறைவாகியிருந்தார். சுமார் 55 நாட்களுக்குப் பின்னர் அவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அஸாரின் வழிகாட்டுதலின் கீழ், கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த களுவாராய்ச்சி தலைமையில், பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவு பொலிஸார் சந்தேகநபரை கைது செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply