நுவரெலியா கிரகரி வாவியின் கரையோரத்தில் புதிதாக பிறந்த சிசுவொன்றின் சடலம் ஒன்று இன்று (1) காலை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

கிரகரி வாவியில் படகு சவாரி செய்யும் ஊழியர்கள் மற்றும் உயிர் காப்பு பொலிஸார், நுவரெலியா பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து குறித்த சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த நுவரெலியா பொலிஸார் தடயவியல் பரிசோதனைகளை மேற்கொண்டு விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சிசுவின் தொப்புள் கொடியின் ஒரு பகுதி இருப்பதால், இந்தப் பிரசவம் வைத்தியசாலையில் நடைபெற்ற ஒன்றாக இருக்காது என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இதனையடுத்து பொலிஸார், நீதிமன்ற உத்தரவை பெற்று, சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.

சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் எவரும் இதுவரையில் கைது செய்யப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர் .

இந்நிலையில் சம்பவம் தொடர்பான விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply