இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி சவாலான காலகட்டம் ஒன்றுக்குள் காலடி எடுத்து வைத்திருக்கிறது.
அந்த கட்சி தன்னை மீளமைத்துக் கொள்வதில் அல்லது வலுப்படுத்திக் கொள்வதில் அக்கறை செலுத்துவதை விடுத்து, உள்ளக முரண்பாடுகளை கூர்மைப்படுத்துவதிலேயே கவனம் செலுத்தி வருகிறது.
அண்மையில் அடுத்தடுத்து நடந்த அரசியல் குழுக் கூட்டங்களில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள், அவசரமானவையாக இருந்தனவே தவிர, அவசியமானவையாக இருக்கவில்லை.
தமிழ் அரசுக் கட்சிக்கு வெளியே இருப்பவர்கள், பிற கட்சிகளில் உள்ளவர்கள் கூட, இந்த நிலைமைக்காக அனுதாபப்படுகின்ற சூழல் ஏற்பட்டிருக்கிறது.
தமிழ் அரசுக் கட்சிக்கு வாக்களிக்காத, அதனை ஆதரிக்காத- அதனுடன் இணைந்து செயல்படாதவர்கள் கூட, தமிழ் அரசுக் கட்சியின் இப்போதைய செயல்பாடுகள் விடயத்தில் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.
பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனுக்கு எதிராக தமிழ் அரசுக் கட்சி எடுக்க முனையும் தீர்மானம் தான், இப்போதைய சர்ச்சைகளுக்கு காரணம்.
அரசியலமைப்பு பேரவையில் உறுப்பினராக இருக்கும் சிறிதரன், அரச தரப்புடன் இணைந்து வாக்களித்து வருகிறார் என்ற குற்றச்சாட்டை முன்னிறுத்தி, அவரை அந்தப் பதவியில் இருந்து விலகுமாறு அரசியல் குழுவில் தீர்மானிக்கப்பட்டது.
அளிக்கப்பட்ட காலஅவகாசத்துக்குள் அவர் பதவி விலக மறுத்த நிலையில், அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தொடங்கியிருக்கிறது தமிழ் அரசுக் கட்சி.
கடைசியாக திருகோணமலையில் நடந்த தமிழ் அரசுக் கட்சியின் அரசியல் குழுக் கூட்டத்தில் தாம் பதவி விலகப் போவதில்லை என சிறிதரன் தெளிவாக கூறியிருக்கிறார்.
இது தமிழ் அரசுக் கட்சியினால் தரப்பட்ட பதவியல்ல என்றும், அதனால் அதனை மீளப் பெறுமாறு கட்சியால் கூற முடியாது என்றும், அந்த முடிவை தானே எடுக்க முடியும் எனவும் சிறிதரன் வாதிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, அவரை அரசியல் குழு எப்படி தமிழ் அரசு கட்சியின் பாராளுமன்றக் குழு தலைவராக நியமித்ததோ, அதுபோலவே அந்தப் பதவியில் இருந்து அவரை நீக்குவதற்கும் தீர்மானித்திருப்பதாக சுமந்திரன் கூறியிருக்கிறார். இந்த தகவல் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
மட்டக்களப்பில் நடந்த நிகழ்வு ஒன்றில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த போது, கட்சியின் பதில் பொதுச்செயலாளரான எம்.ஏ.சுமந்திரன் இதனை உறுதிப்படுத்தியிருக்கிறார்.
ஆனால், அதே நேரத்தில் கட்சி இன்னமும் அவ்வாறான தீர்மானத்தை எடுக்கவில்லை என, கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே. சிவஞானம் ஊடகங்களுக்கு கூறியிருந்தார். சிறிதரன் பதவி விலகுவதற்கு ஒரு வார காலஅவகாசம் கொடுக்கும் வகையில் தான், இது பற்றி அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
எவ்வாறாயினும், சிறிதரனுக்கு எதிரான நடவடிக்கை விடயத்தில், தமிழ் அரசுக் கட்சியின் அரசியல் குழு கிட்டத்தட்ட ஒருமித்த நிலையில் உள்ளதாகத் தெரிகிறது.
அதிலுள்ளவர்கள் அனைவரும், இந்த நடவடிக்கை விடயத்தில், எம்.ஏ. சுமந்திரனின் வழிகாட்டலையும் தீர்மானங்களையும் ஏற்றுச் செயல்படுகின்றவர்கள்.
தமிழ் அரசுக் கட்சி இப்பொழுது முற்று முழுதாக சுமந்திரனின் கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டது.
இவ்வாறான நிலையில், இந்த நிலைமை ஆச்சரியமானதல்ல.
சிறிதரன் மீது எடுக்கப்படுகின்ற நடவடிக்கைகள், கட்சியை மேல் மட்டத்தில் உடைக்காது, ஆனால், கீழ் மட்டத்தில் அது அரித்து, பலவீனப்படுத்தும்.
உயர் மட்டத்தில் உள்ளவர்கள் சுமந்திரனின் செயற்பாடுகளை எதிர்க்கத் திராணியற்றவர்களாக இருக்கின்றனர்.
அவரது தயவை நம்பி இருப்பவர்கள், அவரை எதிர்க்காமல் இருப்பதால், அவரால் உயர் மட்டத்தில் தான் விரும்புகின்ற தீர்மானங்களை எடுக்க முடிகிறது.
ஆனால், அடுத்தடுத்த கட்டங்களில் உள்ளவர்கள் இந்த தீர்மானத்தை ஆதரிக்கிறார்களா என்ற கேள்வி இருக்கிறது. அதைவிட கட்சிக்கு வாக்களிக்கின்றவர்கள் இதனை ஏற்றுக் கொள்வார்களா என்ற மிகப் பெரிய சந்தேகமும் உள்ளது.
சிறிதரன் தமிழ் அரசுக் கட்சியை பொறுத்தவரையில் முக்கியமானதொரு தலைவர். ஜனநாயக ரீதியாக அந்தக் கட்சியின் தலைவராக கூட தெரிவு செய்யப்பட்டவர்.
அவரால் அந்தப் பதவியை கைப்பற்ற முடியாதபடி தடுக்கப்பட்டதுடன் இன்று கட்சிக்குள்ளேயே ஓரங்கட்டப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்.
இந்தச் சூழலில் தான், அவருக்கு எதிரான நகர்வுகள் தீவிரம் பெற்றிருக்கின்றன.
இது தமிழ் அரசுக் கட்சிக்கு ஏற்படக் கூடிய பாதிப்பு மாத்திரம் அல்ல, அதற்கு அப்பால் தமிழ் தேசிய அரசியலில் தாக்கம் செலுத்தக் கூடியது.
அரசியலமைப்பு பேரவையில் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டார், இராணுவ பின்னணி கொண்டவர்களை ஆதரித்தார் என்ற குற்றச்சாட்டுகளை கூறக்கூடிய தார்மீக உரிமை சுமந்திரனுக்கு இருப்பதாக யாரும் கூறமாட்டார்கள்.
ஏனென்றால், அவர் கடந்த காலங்களில் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்துடன் எப்படி இணைந்து செயற்பட்டார் என்பது உலகறிந்த உண்மை.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முடிவுகளை ஆதரித்து விட்டார் என்று சிறிதரன் மீது பழி போடுகின்ற இதே சுமந்திரன், ஜே.வி.பி.யை வடக்கிற்கு கொண்டு வந்து சேர்ப்பதில் முக்கிய பங்கு வகித்திருந்தார்.
யாழ்ப்பாணத்தில் ஜே.வி.பி.யின் மே தின பேரணியில் சுமந்திரன் முன்னிலை வகித்துச் சென்றதை யாரும் மறந்திருக்கமாட்டார்கள். அப்படிப்பட்டவர் இன்று சிறிதரனை அரசதரப்புக்கு ஆதரவானவர் என அடையாளப்படுத்தி, தமிழ் தேசிய அரசியலில் இருந்து வெளியேற்ற முனைவது அபத்தமான செயற்பாடு.
சிறிதரனை தமிழ் அரசுக் கட்சியில் இருந்து அகற்றுவதற்கு எடுக்கப்படுகின்ற முயற்சி, அந்தக் கட்சிக்குள் முரண்பாடுகளை இன்னும் தீவிரப்படுத்தும்.
ஏனென்றால், சிறிதரன் வெளியேறினாலோ, அல்லது வெளியேற்றப்பட்டாலோ, அது வடக்கில் தமிழ் அரசுக் கட்சியின் வாக்கு வங்கியில் பெரும் உடைமை ஏற்படுத்தும்.
அத்தகைய ஒரு சூழலை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு, அந்த கட்சியின் தலைமைத்துவம் செயற்படுகிறது என்றால், அது நிச்சயமாக தமிழ்த் தேசிய அரசியலுக்கு பொருத்தமற்றது.
ஏனென்றால், தமிழ்த் தேசிய அரசியலை வலுப்படுத்துதல், இன்றைய முக்கியமான தேவையான இருக்கிறது.

சிங்கள பௌத்த பேரினவாத அரசியல் தமிழ் மக்கள் மத்தியில் ஊடுருவுகின்ற சூழலில், தமிழ் அரசுக் கட்சியை சிதைக்கும் வகையில் முடிவுகளை எடுப்பது எந்த வகையிலும் தமிழ்த் தேசிய அரசியல் தலைமைக்குரிய பண்பாக இருக்க முடியாது.
சிறிதரனுக்கு எதிரான முயற்சிகள் தீவிரம் அடைந்துள்ள சூழலில், அவர் மீது தமிழ் அரசுக் கட்சி எடுக்கப் போகும் எந்த நடவடிக்கையும் ஆபத்தான விளைவுகளையே ஏற்படுத்தும்.
இதனை சுட்டிக்காட்டுபவர்கள் மீதும் சுமந்திரன் கடும் வெறுப்பை வெளிப்படுத்துகிறார்.
மட்டக்களப்பில் நடந்த நிகழ்வில், அவர் சமூக ஊடகங்களை கடுமையாக விமர்சித்திருந்தார்.
சிறிதரன் விவகாரத்தில் தமிழ் அரசுக் கட்சி உள்ளக நடவடிக்கைகளை எடுப்பதை விட்டுவிட்டு, அதனை வெளிச்சம் போட்டு பிரசாரப்படுத்தி மோசமாக்குவதிலேயே கவனம் செலுத்துகிறது.
இது கட்சிக்குள் எடுக்கப்படுகின்ற நடவடிக்கை அல்ல.
தமிழ் தேசிய அரசியல் பரப்பில் சிறிதரனை குறி வைத்து நகர்த்தப்படும் நடவடிக்கை.
இந்த நடவடிக்கை சிறிதரனிடமிருந்து பாராளுமன்ற குழு தலைவர் பதவி, அரசியலமைப்பு பேரவை உறுப்பினர் பதவிகளைப் பறிப்பதை மாத்திரமல்ல, பாராளுமன்ற உறுப்பினர் பதவியைக் கூட பறிக்கும் நோக்கம் கொண்டது. அதன் ஊடாக நேரடி ஆதாயம் அடையக் கூடியவர் சுமந்திரன் என்பது வெளிப்படையான உண்மை. சிறிதரனின் பாராளுமன்ற ஆசனம் வெறிதானால், அதன் நேரடி பலன் சுமந்திரனுக்கு கிடைக்கும்.
அவரே பட்டியலில் அடுத்த இடத்தில் இருப்பவர். ஆக தனிப்பட்ட அரசியல் நலன்கள் அடைவதற்காக முன்நகர்க்கப்படும் காய் நகர்த்தல்கள், இலங்கை தமிழ் அரசுக் கட்சியை முட்டு சந்தியில் கொண்டு வந்து நிறுத்தப் போகிறது.
அத்தகைய ஒரு மோசமான நிகழ்ச்சி நிழலுக்குள் தமிழ் அரசுக் கட்சி சிக்கிப் போய் இருக்கிறது.
தமிழ் அரசுக் கட்சியின் இந்தப் பலவீனம், ஒட்டுமொத்த தமிழ்த் தேசிய அரசியலையும் சிதைக்கும்.
ஏனென்றால் 2004 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தமிழ் அரசுக் கட்சி தான் தமிழ்த் தேசிய அரசியலின் முகமாக பார்க்கப்பட்டு வருகிறது. அதனை சிதைத்து சின்னாபின்னம் ஆக்கும் ஒரு நடவடிக்கையாகவே, தமிழ் தேசியக் கூட்டமைப்பு உடைக்கப்பட்டது.
இப்பொழுது அதனை ஒட்ட வைக்க முயற்சி முன்னெடுக்கப்பட்டாலும் கூட, அது சுய இலாப நோக்குடையது என்பதில் சந்தேகம் இல்லை.
இந்த நிலையில் தமிழ் அரசுக் கட்சியை உடைத்து சிறிதரனை வெளியேற்றுவது அல்லது அதற்கு ஈடான ஏதேனும் நடவடிக்கைகளை முன்னெடுப்பது, தமிழ் தேசிய அரசியலை மேலும் பலவீனப்படுத்தும்.
இத்தகைய ஒரு நிலையை எதிர்பார்த்தே இந்தக் காய்கள் நகர்த்தப்படுகிறதா என்ற சந்தேகம் இப்போது வலுவடைந்திருக்கிறது.
-கபில்-

