மோடி புதின் சந்திப்பின் போது கையெழுத்தான ஒப்பந்தங்களில் மிக முக்கியமான ஒன்று S 400 எனப்படும் நவீன ரக வான் பாதுகாப்பு ஏவுகணை ஆகும்.
இந்த ஏவுகணைகளை வாங்க இந்தியா சம்மதம் தெரிவித்து அதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க இரு தரப்பிலும் பரஸ்பரம் ஒப்புதல் தெரிவிக்கப்பட்டது.
இதன் மூலம் இந்திய மற்றும் ரஷ்ய அதிகாரிகள் குழு இதன் விலை, ஒப்பந்த நிர்ணயம், மாறுதல்கள், உதிரி பாக சப்ளை மற்றும் வாரண்ட்டி ஆகியவற்றை விவாதித்து அரசுக்கு அறிக்கை தரும்.
அதனடிப்படையில் இந்திய அரசு ஏவுகணை தயாரிக்கும் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து இந்த ஏவுகணைகளை வாங்கி இந்தியாவில் நிறுவும்.
பொதுவாக இந்த ஏவுகணை உலகின் தலை சிறந்த ஏவுகணை என்றாலும், அதன் தாக்கும் தூரம் நில அமைப்பை பொறுத்து வேறுபடும். S 400 என்பது ஆறு வகையான வான் பாதுகாப்பு ஏவுகணைகளை வீசக் கூடியது. ஆறுவிதமான ஏவுகணைகளையும் அதன் ராடார் அமைப்பு ஒருமித்தே கட்டுப்படுத்த வல்லது.
இதன் மூலம் போர் விமானங்கள், குரூஸ் ரக ஏவுகணைகள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஒரே நேரத்தில் தாக்க முடியும். இதை ரஷ்யா இதுவரை சோதனை செய்து பார்க்கவில்லை என்றாலும் இதனால் முடியும் என்று நம்பப்படுகிறது. அமெரிக்காவின் AEGIS எனப்படும் வான் பாதுகாப்பு அமைப்பு மட்டுமே இதை சோதனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஒரு S 400 வான் பாதுகாப்பு தொகுதியில்
1. வான் பரப்பை கண்காணிக்கும் ராடார்கள் – ஒன்று அல்லது இரண்டு வகையான ராடார்கள்
2. ஏவுகணைகளுக்கு வழி காட்டும் மற்றும் கட்டுப்படுத்தும் ராடார் – ஒரு தொகுதிக்கு ஒன்று
3. ஏவுகணைகளை வீசும் அமைப்பு- ஒரு தொகுதியில் சுமார் 12 வரை இருக்கும்
4. ஏவுகணைகளை கொண்டு செல்லும் வாகனங்கள் மற்றும் அதை லோட் செய்யும் வாகனங்கள்
5. மொத்த அமைப்புக்கும் தேவையான மின்சாரத்தை வழங்கும் ஜெனெரேட்டர் வாகனம்
6. இவை அனைத்தையும் கட்டுப்படுத்தும் கட்டுப்பாட்டு அமைப்பு.
இவை அனைத்தும் ஒரு சேர இருந்தால் மட்டுமே S 400 முழுமையாக இயங்கும், இவற்றில் முக்கியமான ஒன்று செயலிழந்தாலும் மொத்த அமைப்பும் செயல்படாது.
முதலில் S 400 அமைப்பின் வான் பரப்பை கண்காணிக்கும் ராடார், 91N6E Big Bird ராடார் சுமார் 600 கிலோமீட்டர் பரப்பளவு வான் பகுதியை துல்லியமாக கண்காணிக்க வல்லது.
அதோடு மட்டுமல்லாது அதி உயர வான் வெளியையும் கண்காணிக்க வல்லது. இதன் மூலம் மிகவும் கீழ் நிலையில் பறக்கும் சிறிய ஆளில்லா உளவு விமானங்கள் முதல் அதிக உயரத்தில் பறக்கும் பாலிஸ்டிக் ஏவுகணைகளையும் கண்காணிக்கும்,
மேலும் இந்த ராடாரை எதிரியால் மிக விரைவில் செயலிழக்க செய்ய முடியாது, காரணம் இதன் கண்காணிக்கும் தூரம் மற்றும் வெளிவிடப்படும் சக்திவாய்ந்த ராடார் அலைகள் ஆகும்.
இந்த ராடார் சுமார் 300 இலக்குகளை ஒரே நேரம் பின் தொடர்ந்து அதன் அசைவுகளை கண்காணிக்கும். இந்த தகவல்களை அதே நேரம் கட்டுப்பட்டு அமைப்பு மற்றும் ஏவுகணைகளை வழிகாட்டும் ராடருக்கும் பரிமாறும்.
92N6E Grave Stone என்னும் ராடார் தான் ஏவுகணைகளை சரியாக வழிகாட்டி இலக்கை துல்லியமாக தாக்க உதவி புரியும்.
இந்த 92N6E ராடாரின் வழிகாட்டும் அமைப்பு சுமார் 300 கிலோமீட்டர் வரை தான் என்று பல வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் 300 கிலோமீட்டர் சுற்றளவில் வரும் இலக்குகளை சரியாக குறிவைத்து அடிக்க முடியும்.
இந்த ராடாரை எதிரியால் செயலிழக்க செய்வது மிக கடினம், அது மட்டுமல்லாது எதிரியின் பாதுகாப்பு முறைகளையும் சரியாக புரிந்து கொண்டு இலக்கை மட்டுமே தாக்க ஏவுகணைகளுக்கு வழி காட்டும்.
இந்த ராடாரால் சுமார் 100 இலக்குகளை ஒரே நேரத்தில் குறிபார்க்க முடியும், அதோடு ஆறு இலக்குகளை ஒரே நேரத்தில் தாக்க ஏவுகணைகளுக்கு வழி காட்ட முடியும்.
பொதுவாக ஒரு ஏவுகணை வீசும் வாகனத்தில் நான்கு முதல் ஆறு ஏவுகணைகளை பொருத்த முடியும், சுமார் ஒன்று முதல் நான்கு வகையான ஏவுகணைகளை ஒரு வாகனத்தில் நிறுவ முடியும்.
40N6E எனப்படும் இந்த ஏவுகணை சுமார் 400 கிலோமீட்டர் தூரம் வரை சென்று எதிரியின் இலக்கை தாக்கும்.
இதில் இரண்டு வகையான வழிகாட்டும் அமைப்புகள் உள்ளன.
முதல் வழிகாட்டும் அமைப்பு Grave Stone ராடாரின் உதவியுடன் சுமார் 300 கிலோமீட்டர் வரை இலக்கை நோக்கி செல்லும், அதன் பிறகு ஏவுகணையில் உள்ள சிறிய ராடார் அமைப்பு இலக்கை நோக்கி ஏவுகணையை மேலும் சில கிலோமீட்டர் வழி நடத்தும்.
இந்த ஏவுகணை பொதுவாக பாலிஸ்டிக் ஏவுகணைகளை தாக்கி அழிக்க பயன்படுத்தப்படும். இதன் மொத்த எடை சுமார் 2500 கிலோ கிராம்.
இந்த ஏவுகணை மூலம், பாகிஸ்தானின் அணுகுண்டு சுமந்து வரும் ஏவுகணைகளை அவர்களின் வான்வெளியில் வைத்தே அழிக்க முடியும்.
48N6E2/3 என்னும் இந்த ஏவுகணை சுமார் 250 கிலோமீட்டர் தூரம் வரை சென்று எதிரியின் விமானங்களை தாக்க வல்லது.
இந்த ஏவுகணை உருவத்தில் பெரிய இலக்குகளையே தாக்கும், அதாவது தளவாடங்கள் மற்றும் வீரர்களை ஏற்றி செல்லும் ராணுவ விமானங்கள், பறக்கும் ராடார்களை கொண்டு செல்லும் விமானங்கள் (AEWCS), வானிலே எரிபொருள் நிரப்பும் விமானங்கள், குண்டு வீசும் விமானங்கள், போன்றவற்றை தாக்கும்.
இதனால் எதிரியால் படைகளுக்கோ அல்லது போர் விமானங்களுக்கோ வேண்டிய உதவிகளை விமானங்கள் மூலம் செய்ய முடியாது.
9M96/E/E2 எனும் இந்த ஏவுகணை தான் போர் விமானங்கள், ஆளில்லா உளவு விமானங்கள் மிகவும் கீழே பறக்கும் குரூஸ் ரக ஏவுகணைகள் ஆகியவற்றை தாக்கும். இதன் உட்சபட்ச தாக்கும் தூரம் சுமார் 120 கிலோமீட்டர் ஆகும்.
ஆக, மூன்று வகை ஏவுகணைகள் மூன்று வெவ்வேறு வித இலக்குகளுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. அணு ஆயுதம் தங்கி வரும் ஏவுகணைகளை சுமார் 400 கிலோமீட்டர் தொலைவிலும், எதிரி போர் விமானங்களை சுமார் 120 கிலோமீட்டர் தொலைவிலும் வைத்து அழிக்கக்கூடியது இந்த S 400 அமைப்பு.
இதே S 400 அமைப்பை ரஷ்யா தனது நாடு முழுவதும் நிறுவியுள்ளது, அதோடு சுமார் 5 தொகுதிகளை சீனாவிற்கும் விற்பனை செய்துள்ளது. இவற்றை சீனா அடுத்த வருடம் முதல் நிறுவ உள்ளது.
இதே ஏவுகணைகளை சிரியாவிலும் நிறுவியுள்ளது ரஷ்யா, இருப்பினும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா விமானங்கள் இந்த ஏவுகணையின் தாக்கும் தொலைவிற்குள் சென்று இலக்குகளை தாக்கிவிட்டு திரும்ப வந்துள்ளது இதன் மீதுள்ள நம்பிக்கையில் சந்தேகம் ஏற்படுத்துகிறது.
இந்த S400 ஏவுகணைகளையும் செயலிழக்க செய்து தாக்கி அழிக்கும் ஆயுதங்களை ஒரு சில ஐரோப்பிய, அமெரிக்க மற்றும் இஸ்ரேல் நாடுகள் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-கி.பாஸ்கரன்-