குடிசை வாழ்க்கை, தந்தையின் தொழிலில் கிடைக்கும் குறைந்த வருமானம், மிகக் கடுமையான வறுமை, ஆகியவற்றையெல்லாம் எதிர்கொண்டு, அண்மையில் வெளியான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் விஞ்ஞானப் பிரிவில் திருகோணமலை மாவட்டத்திலே முதலிடத்தைப் பெற்றுள்ளார் மீரசா பாத்திமா முஸாதிகா எனும் மாணவி.
இலங்கையில் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் மருத்துவக் கல்விக்கான ஒதுக்கீடு உண்டு என்பதால், திருகோணமலை மாவட்டத்திலேயே முதலிடம் பெற்றுள்ள முஸாதிகா இலங்கையில் உள்ள எந்த முன்னணி பல்கலைக்கழகத்திலும் எம்.பி.பி.எஸ் படிக்க முடியும்.
கடந்த வருடம் உயர்தர பரீட்சையில் தேர்வான மாணவர்களே, எதிர்வரும் ஏப்ரல் மாதமளவில்தான் பல்கலைக்கழகம் செல்கிறார்கள். அந்த வகையில், அடுத்த வருடம்தான் முஸாதிகா பல்கலைக்கழகம் செல்ல முடியும்.ஆனால், இவ்வருடம் தேர்வான மாணவர்கள் ஜூன் மாதமளவில் பல்கலைக்கழகத்தில் சேர்க்க முடியும் என்று உயர் கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
முஸாதிக்கா அவர்களின் வீட்டுக்கு கிழக்கு மாகாண ஆளுனர் அனுராதா யஹம்பத் நேற்றுமுன்தினம் (04.01.2020) சென்றார்.
மூதூர் சாபி நகரில் உள்ள வீட்டுக்கு நேரடியாக சென்று ஆளுனர் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதோடு அன்பளிப்பும் வழங்கியுள்ளார்.